விருதுநகர்: அதிமுக பொதுக்கூட்டம்; மேடையில் கட்சித் தொண்டரைத் தாக்கிய முன்னாள் அம...
`திருவெறும்பூர் டு கர்நாடகா' - 45 அடி நீள மெகா வெட்டிவேர் மாலை; பூஜித்து அனுப்பி வைத்த கிராம மக்கள்
கர்நாடக மாநிலம், ஏஜிபுராவில் கோதண்டராமசாமி பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் திருவண்ணாமலையில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட ஒரே கல்லினால் ஆன 108 அடி உயரம் கொண்ட மகாவிஷ்ணு சிலை அமைக்கப்பட்டுள்ளது. வரும் ஜூன் மாதம் 2-ம் தேதி இந்தக் கோயில் கும்பாபிஷேகம் வெகுவிமரிசையாக நடைபெறவிருக்கிறது.

இந்தச் சூழலில், அங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள பிரமாண்ட மகாவிஷ்ணு சிலைக்கு ராமேஸ்வரத்தில் உள்ள வெட்டிவேர் சங்கம் சார்பில், 45 அடி நீளம் கொண்ட வெட்டிவேர் மாலை தயாரிக்கப்பட்டது. மொத்தம் அரை ஏக்கர் பரப்பளவில் இருந்து வெட்டி எடுக்கப்பட்ட வெட்டி வேரைக் கொண்டு, 8 பேர் கொண்ட தொழிலாளர்கள் குழு தொடர்ந்து 15 நாள்கள் உழைத்து, அழகிய மெகா சைஸ் மாலையை உருவாக்கி உள்ளனர்.
மருத்துவ குணம் மற்றும் மயக்கும் மணம் கொண்ட இந்த வெட்டிவேர் மாலையின் மதிப்பு, ரூ. 57,000 என்று சொல்கிறார்கள். இந்நிலையில், அந்த வெட்டிவேர் மாலை திருச்சி திருவெறும்பூர் கணேசபுரத்தில் உள்ள செல்வ விநாயகர் ஆலயத்திற்கு எடுத்து வரப்பட்டது. அந்தக் கோயில் வளாகத்தில் மூன்று நாள்கள் வைத்து பூஜிக்கப்பட்டது.

அந்தக் கோயிலில் வைக்கப்பட்டு பூஜிக்கப்பட்ட இந்த பிரமாண்ட வெட்டிவேர் மாலையை, திருவெறும்பூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராம மக்கள் மூன்று தினங்களாக திரளாக வந்திருந்து தரிசனம் செய்தனர். அதைத்தொடர்ந்து, இந்த மெகா சைஸ் வெட்டிவேர் மாலை, உரிய பாதுகாப்புடன் கர்நாடகாவில் உள்ள கோதண்டராமசாமி கோயிலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த மெகா சைஸ் மாலையை மக்கள் ஆச்சர்யத்துடன் பார்வையிட்டதோடு, அதனை வணங்கினர்.
இதுபற்றி, அந்த மாலையை தயார் செய்தவர்களிடம் பேசினோம்.
‘கர்நாடகாவில் உள்ள கோயில் தரப்பில் இருந்து, ‘மகா விஷ்ணு சிலைக்கான கற்களையே தமிழ்நாட்டில் இருந்து தான் வாங்கினோம். அதனால், மாலையையும் தமிழ்நாட்டில் இருந்தே வாங்குவது என்று முடிவெடுத்து தேடியபோது, உங்களைப் பற்றி தகவல் கிடைத்தது. அதனால், சிறப்பாக மாலையை தயார் செய்து வழங்குங்கள்’ என்று சொன்னார்கள். அதனைச் சவாலாக எடுத்துக்கொண்டு தரமாக உள்ள வெட்டிவேர்களைக் கொண்டு இந்த மெகா சைஸ் மாலையைத் தயார் செய்தோம். பக்திப் பரவசத்தோடு இந்த மாலையைத் தயார் செய்ததால், ஆண்டவன் அனுக்கிரகத்தில் சிறப்பாக மாலை உருவானது. இது, எங்களுக்குக் கிடைத்த பெரும் பேறு” என்றார்கள் உணர்ச்சிப் பொங்க!