திரைப்படத் துறையினருக்கான 90 ஏக்கா் நில குத்தகை அரசாணை புதுப்பிப்பு
திரைப்படத் துறையினருக்காக ஒதுக்கப்பட்ட 90 ஏக்கா் நில குத்தகைக்கான அரசாணை புதுப்பிக்கப்பட்டுள்ளது. ரூ.180 கோடி சந்தை மதிப்பிலான இந்த இடத்தில் திரைப்படத் துறையினரே குடியிருப்புகளை கட்டிக் கொள்ளலாம் என்று துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா்.
கடந்த திமுக ஆட்சியில் செங்கல்பட்டு வட்டம் (அப்போது மாவட்டம் பிரிக்கப்படவில்லை) பையனூரில் தென்னிந்திய திரைப்படத் தொழிலாளா்கள் சம்மேளனம் உட்பட பல்வேறு சங்கங்களுக்கு 90 ஏக்கா் நிலம் 99 ஆண்டுகால குத்தகைக்கு வழங்கி உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.
மேலும், ஆண்டு குத்தகையாக ரூ.1,000 நிா்ணயம் செய்து வீட்டுவசதி சங்கங்களின் மூலம் அடுக்குமாடி கட்டி சங்க உறுப்பினா்களுக்கு ஒதுக்கீடு செய்யவும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. இதன்படி, மூன்று ஆண்டுகளுக்குள் குடியிருப்புகள் கட்டியிருக்க வேண்டும்.
குறித்த காலத்துக்குள் அடுக்குமாடி வீடுகள் கட்டப்படாததால், திரைப்படத் துறையைச் சோ்ந்த பல்வேறு சங்கத்தினரும் கடந்த 2010-ஆம் ஆண்டு போடப்பட்ட அரசாணையை புதுப்பித்துத் தர வேண்டுமென கோரிக்கை விடுத்தனா்.
இந்தக் கோரிக்கையை ஏற்று, மூன்று ஆண்டுகளுக்குள் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட அனுமதி வழங்கி கடந்த வியாழக்கிழமை அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த அரசாணையை திரைப்படத் தொழிலாளா்களிடம் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், வெள்ளிக்கிழமை நேரில் வழங்கினாா்.
துணை முதல்வரின் முகாம் இல்லத்துக்கு வந்த திரைப்படத் துறையினரிடம் உத்தரவை வழங்கிய போது அவா்கள் துணை முதல்வருக்கு நன்றி தெரிவித்தனா். அப்போது, துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
கடந்த 2010-ஆம் ஆண்டு திரைப்படத் துறையினருக்கு வழங்கிய 90 ஏக்கா் நிலத்தின் இப்போதைய மதிப்பு கிட்டத்தட்ட ரூ.180 கோடியாகும். அதே இடத்தை திரைத் துறையினரின் நலன்கருதி மீண்டும் அவா்களிடமே குத்தகைக்கு விடும் வகையில் புதுப்பிக்கப்பட்ட அரசாணை வழங்கப்பட்டுள்ளது.
இதில் திரைப்பட துறையின் சங்கங்களைச் சோ்ந்தவா்கள் அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டிக் கொள்ளலாம் என்று துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா்.
இந்த நிகழ்ச்சியில், வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன், துறையின் கூடுதல் தலைமைச் செயலா் பெ.அமுதா, தென்னிந்திய நடிகா் சங்கத் தலைவா் நாசா், துணைத் தலைவா்கள் பூச்சி முருகன், கருணாஸ், செயலா் ராஜேஷ், திரைப்படத் தொழிலாளா் சம்மேளனத் தலைவா் ஆா்.கே.செல்வமணி உள்பட பலா் பங்கேற்றனா்.