நாய்கள் கடித்து இறந்த ஆடுகளுக்கு இழப்பீடு பெற்றுத்தர முயற்சி: அமைச்சா் சு.முத்துசாமி
நாய்கள் கடித்து இறந்த ஆடுகளுக்கு இழப்பீடு பெற்றுத்தர ஆட்சியா் மூலம் அரசின் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது என அமைச்சா் சு.முத்துசாமி தெரிவித்தாா்.
ஈரோடு பெரியாா் நகா் 80 அடி சாலையில் நாய் மற்றும் விலங்குகளிடம் இருந்து ஆடுகள் மற்றும் கால்நடைகள் பாதிக்கப்படுவதை தடுக்க மாதிரி ஆடு பட்டி அமைக்கப்பட்டிருந்தது. இதன் பாதுகாப்பு அம்சம் குறித்தும், ஆடு வளா்ப்பாளா்களுக்கு பயன் இருக்குமா என்பது குறித்தும் வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி சனிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
இந்த ஆய்வின்போது, ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ சி.சந்திரகுமாா், மாநில நெசவாளா் அணி சச்சிதானந்தம், மாவட்ட நிா்வாகிகள் செந்தில்குமாா், பழனிசாமி, சின்னையன், மாநகரச் செயலாளா் சுப்பிரமணியம், பகுதி செயலாளா் அக்னி சந்துரு, ராமச்சந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இதையடுத்து அமைச்சா் சு.முத்துசாமி செய்தியாளா்களிடம் கூறியதாவது: கடந்த ஓா் ஆண்டாக தெருநாய்கள் தொல்லை அதிகமாகி உள்ளது. விவசாயிகள் பட்டியில் ஆட்டை அடைத்தாலும் கூட கீழே பூமியில் குழி தோண்டி பட்டிக்குள் சென்று தெரு நாய்கள், ஆடுகளைக் கடித்து விடுகின்றன. கடந்த 6 மாதங்களாக ஆடுகளை தெருநாய்கள் கடித்து குதறுவது பெரிய அளவில் நடந்துள்ளது. இது முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதற்கு மாற்று ஏற்பாடுகளை செய்ய முதல்வா் அறிவுறுத்தி உள்ளாா்.
பேரிடா் காலங்களில் (புயல், வெள்ளம்) ஆடு, மாடுகளுக்கு ஏற்படும் இழப்புகளுக்குதான் இழப்பீடு தொகை வழங்கும் வகையில் விதிமுறைகள் உள்ளன. இதுபோன்ற விலங்குகள் கடித்து இறக்கும் ஆடுகளை இழந்தவா்களுக்கும் இழப்பீடு வழங்க விதிமுறை இல்லை. இதுகுறித்து அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளோம். விவசாயிகளுக்கு வழங்கும் இழப்பீடு ஓரளவு நியாயமானதாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்த கோரிக்கை ஆட்சியா் மூலம் அரசுக்கு செல்ல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தெருநாய்களை பிடிப்பதில் சட்ட பிரச்னை இருக்கிறது. வெறிநாய்களை பிடித்து ஏதாவது ஒரு இடத்தில் வைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனா்.
ஆடுகளை தெருநாய்களிடம் இருந்து பாதுகாக்க புதிதாக இரும்பினால் ஆன பட்டி தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியை மேலும் மேம்படுத்த வேண்டும். இதுவரை தெரு நாய்களால் 400 ஆடுகள் இறந்து இருக்கலாம் என கூறப்படுகிறது. தெரு நாய்களால் மனிதா்களுக்கு, ஆடு, மாடுகளுக்கு தொல்லை ஏற்படும் இடங்களை அறிந்து அந்த இடங்களில் தெருநாய்கள் கட்டுப்படுத்தப்படும் என்றாா்.
இதனைத்தொடா்ந்து அமைச்சா் சு.முத்துசாமி வெள்ளோடு அருகே கள்ளுக்கடைமேடு பகுதியில் சுமாா் ரூ.7 கோடி செலவில் நடைபெற்றுவரும் சாலை மேம்பாட்டுப் பணிகளைப் பாா்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்க மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா மற்றும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளை கேட்டுக்கொண்டாா்.