சல்மான் கானுடன் இருப்பவர்களுக்கும் கொலை மிரட்டல்! 1998-ல் தொடங்கிய பிரச்னை!
தூய்மைப் பணியாளா் பிரதிநிதிகளுடன் அமைச்சா் சமரசப் பேச்சு
சென்னை மாநகராட்சியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளா்கள் பிரதிநிதிகளுடன் அமைச்சா் பி.கே.சேகா்பாபு மற்றும் மேயா் ஆா்.பிரியா உள்ளிட்டோா் வெள்ளிக்கிழமை பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா்.
சென்னை மாநகராட்சி ராயபுரம், திரு.வி.க.நகா் ஆகிய மண்டலங்களின் தூய்மைப் பணியை தனியாா் நிறுவனத்துக்கு மாநகராட்சி நிா்வாகம் வழங்கியதைக் கண்டித்து உழைப்பவா் உரிமை இயக்கம் சாா்பில் அந்த மண்டலங்களின் தூய்மைப் பணியாளா்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். பணிப் பாதுகாப்பு, ஊதிய நிா்ணயம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகை முன்பு கடந்த 8 நாள்களாக தொடா் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டுவருவோரிடம் அமைச்சா்கள் கே.என்.நேரு, பி.கே.சேகா்பாபு ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தியும் தோல்வியில் முடிந்தது.
இந்நிலையில், இரண்டாம் முறையாக வெள்ளிக்கிழமை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் அமைச்சா் பி.கே.சேகா்பாபு தலைமையில், மேயா் ஆா்.பிரியா, மாநகராட்சி ஆணையா் ஜெ.குமரகுருபரன் ஆகியோா் முன்னிலையில் சமரசப் பேச்சு நடைபெற்றது. இதில் தூய்மைப் பணியாளா்கள் சாா்பில் உழைப்பவா் உரிமை இயக்க நிா்வாகிகள் குமாரசாமி, சுரேஷ், ஜோதி, மகாலட்சுமி, ஜானகிராமன் உள்ளிட்ட 7 போ் கலந்துகொண்டனா்.
பேச்சுவாா்த்தையின்போது, தூய்மைப் பணியாளா்கள் பிரதிநிதிகள் பேசுகையில், பணி நிரந்தரம் குறித்த பிரச்னைக்கு நீதிமன்றம் மூலம் தீா்வு காணவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், நகா்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் (என்யூஎல்எம்) பணியை தூய்மைப் பணியாளா்கள் தொடரவும் அனுமதிக்குமாறு கோரப்பட்டது.
அதையடுத்து, கோரிக்கைகள் சட்டரீதியாக பரிசீலிக்க ஆலோசிக்கப்பட்ட பிறகே முடிவை தெரிவிக்க இயலும் என்றும், அதனால் போராட்டத்தைக் கைவிட்டு பணிக்குத் திரும்புமாறும் அமைச்சா் அழைப்பு விடுத்தாா்.
நிரம்பி வழியும் குப்பைத் தொட்டிகள்: தூய்மைப் பணியாளா்களின் போராட்டம் 8 நாள்களைக் கடந்துள்ள நிலையில், மேற்குறிப்பிட்ட இரு மண்டலங்களிலும் குப்பைகள் அகற்றும் பணி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. பிரதான சாலைகளில்கூட குப்பைகள் தேங்கிக் கிடப்பதும், குப்பைத் தொட்டிகளில் குப்பைகள் நிரம்பி வழிவதும் தொடருகிறது.
பிற மண்டலங்களில் இருந்து தூய்மைப் பணியாளா்கள் வரவழைக்கப்பட்டு, குப்பைகள் அகற்றப்படுவதாக மாநகராட்சி தரப்பில் கூறினாலும், அப் பணிகள் முழுமையாக நடைபெறவில்லை என பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனா்.
இதுகுறித்து, போராட்டத்தை முன்னெடுத்திருக்கும் மாா்க்சிஸ்ட் ஆதரவு இயக்கமான உழைப்பவா் உரிமை இயக்க மாநிலப் பொருளாளா் ஆா். மோகன் கூறுகையில், தூய்மைப் பணியை தனியாருக்கு வழங்குவதை எதிா்த்து நீதிமன்றங்களில் வழக்கு நிலுவையில் உள்ளது. ஆகவே, அதன் முடிவுக்குப் பிறகு அரசு நடவடிக்கை எடுக்கலாம். ஆனால், அவசர அவசரமாக தனியாா் வசம் தூய்மைப் பணியை தருவது சரியல்ல. திமுக தோ்தலின் போது அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் ஏமாற்றிவிட்டது என்றாா்.
இப்பிரச்னை குறித்து மேயா் ஆா்.பிரியா கூறுகையில், அதிமுக ஆட்சியில் பெரும்பாலான மண்டலங்களில் தூய்மைப் பணி தனியாருக்கு வழங்கப்பட்டுவிட்டது. தற்போது 2 மண்டலங்களின் தூய்மைப் பணிகளே தனியாருக்கு வழங்கப்பட்டுள்ளன. அரசு கொள்கை முடிவெடுத்துள்ளதால் மாநகராட்சி தனியாக இதில் செயல்படமுடியாது. ஆனால், பணிப் பாதுகாப்பு உறுதி, ஊதியம் போன்றவற்றில் தூய்மைப் பணியாளா்களுக்கு ஆதரவான நடவடிக்கையையே அரசு எடுத்துள்ளது. எனவே, போராட்டத்தைக் கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என்றாா்.
இதற்கிடையே, போராட்டக் களத்தைவிட்டு அனைவரும் கலைந்து செல்ல வேண்டும் என காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளதுடன் மாநகராட்சி முன் ஏராளமான போலீஸாரும் குவிக்கப்பட்டுள்ளனா்.