நவீன வெடிகுண்டு வெடிப்பில் 3 வீரர்கள் படுகாயம்!
ஜார்க்கண்ட் மாநிலத்தின் மேற்கு சிங்பம் மாவட்டத்தில் நவீன வெடிகுண்டு வெடிப்பில் 3 பாதுகாப்புப் படை வீரர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
பலிவா பகுதியில் மனோஹர்பூர் காவல் நிலையத்திற்கு உள்பட்ட சரந்தா வனப்பகுதியில் மத்திய ரிசர்வ் காவல் படையின் 197 வது பிரிவினர் நக்சல்களுக்கு எதிரான தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு நிறுவப்பட்டிருந்த ஐ.ஈ.டி. எனும் நவீன வெடிகுண்டு வெடித்ததில் 3 வீரர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, அவர்கள் மூவரும் விமானம் மூலம் மீட்கப்பட்டு ராஞ்சியிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிக்க: விரைவில் மாநிலத்தின் 9வது புலிகள் காப்பகம் திறக்கப்படும்: முதல்வர் அறிவிப்பு!
இந்நிலையில், ராஞ்சியில் அனுமதிக்கப்பட்டுள்ள வீரர்களை சந்தித்து நலம் விசாரித்த ஜார்க்கண்ட் காவல் உயர் அதிகாரி அனுராக் குப்தா கூறிகையில், இந்த குண்டு வெடிப்பில் மத்திய ரிசர்வ் காவல் படையைச் சேர்ந்த ரேடியோ ஆபிரேட்டர் ஒருவரின் காலில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், அவருக்கு மருத்துவர்கள் அறுவைச் சிகிச்சை செய்யவுள்ளதாகவும் தேவைப்பட்டால் அவரை தில்லிக்கு விமானம் மூலம் அழைத்து சென்று சிகிச்சையளிக்க தயாராகவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், கடந்த சில ஆண்டுகளாக அம்மாநிலத்திலுள்ள மாவோயிஸ்டுகளின் நடவடிக்கைகள் குறைந்துள்ளதாகவும், அவர்களுக்கு எதிரான நடவடிக்கையில் பல நக்சல்கள் கொல்லப்பட்டதாகவும் மீதமுள்ளவர்களை விரைவில் அழிக்கப்படுவார்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.