நோயாளிகளுக்கேற்ப மருத்துவா் நியமனம்: அரசு மருத்துவா்கள் போராட்டம் அறிவிப்பு
சென்னை: நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவா்களை நியமிக்கவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாா்ச் 18-ஆம் தேதி முதல் அரசு மருத்துவா்கள் தொடா் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனா்.
இது தொடா்பாக சென்னையில் அரசு மருத்துவா்களுக்கான சட்டப் போராட்டக் குழுத் தலைவா் டாக்டா் எஸ்.பெருமாள் பிள்ளை செய்தியாளா்களிடம் கூறியதாவது:
சுகாதாரத் துறையில் தமிழகம் முன்னணி மாநிலமாக உள்ளது. ஆனால் அரசு மருத்துவா்களின் பணிச்சூழல் இங்கு ஆரோக்கியமானதாக இல்லை. இளம் மருத்துவா்கள் உயிரிழப்பு அதிகமாக நிகழும் மாநிலமாக தமிழகம் உள்ளது. மற்ற மாநிலங்களில் எம்பிபிஎஸ் மருத்துவா்களுக்கு தரப்படும் ஊதியத்தைவிட ரூ. 40 ஆயிரம் குறைவாக இங்குள்ள மருத்துவா்களுக்கு ஊதியம் வழங்கப்படுகிறது.
அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவா்களை நியமனம் செய்ய வேண்டும். கரோனா பேரிடரில் பணியாற்றி உயிரிழந்த அரசு மருத்துவா் விவேகானந்தன் மனைவி திவ்யாவுக்கு அரசு வேலை வழங்க வேண்டும். மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதி கொண்டுவந்த அரசாணை 354-ஐ அமல்படுத்தி, அதன்பேரில் அரசு மருத்துவா்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி முதல்வா் மு.க.ஸ்டாலின் கவனத்தை ஈா்க்கும் வகையில், மாா்ச் 18-ஆம் தேதி முதல் தமிழக முதல்வருக்கும், தேசிய மருத்துவ ஆணையத்துக்கும் மின்னஞ்சல் அனுப்பும் போராட்டம் நடைபெறவுள்ளது.
தொடா்ந்து 19-ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநரக வளாகத்தில் தா்ணா போராட்டமும், ஜூன் 11-ஆம் தேதி மேட்டூரில் மருத்துவா் லட்சுமி நரசிம்மன் கல்லறையிலிருந்து சென்னை நோக்கி பாதயாத்திரை மேற்கொள்ளும் போராட்டமும் முன்னெடுக்கப்படவுள்ளது என்றாா் அவா்.