பிளஸ் 2 பொதுத் தேர்வு தொடக்கம்
சென்னை: தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு திங்கள்கிழமை தொடங்கியது. 8 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தேர்வெழுத விண்ணப்பித்திருந்த நிலையில், முதல் நாள் நடைபெற்ற மொழிப்பாடத் தேர்வை 11,430 பேர் எழுதவில்லை.
தமிழகத்தில் மாநில பாடத் திட்டத்தின் கீழ் பிளஸ் 2 பொதுத் தேர்வை நிகழ் கல்வியாண்டு 3,316 தேர்வு மையங்களில், 4.24 லட்சம் மாணவிகள் உள்பட 8 லட்சத்து 21,057 மாணவர்கள் எழுதுகின்றனர். இவர்களில் 18,344 பேர் தனித்தேர்வர்கள், 145 பேர் சிறைவாசிகள்.
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு திங்கள்கிழமை தொடங்கியது. முதல் நாளில் தமிழ் உள்ளிட்ட மொழிப்பாடங்களுக்கான தேர்வு நடைபெற்றது. தேர்வு காலை 10 மணிக்குத் தொடங்கி பகல் 1.15 மணி வரை நடைபெற்றது. தேர்வர்கள் 9.15 மணிக்கு முன்னதாக தேர்வு மையத்துக்குள் வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதன்படி மாணவ, மாணவிகள் குறித்த நேரத்துக்குள் தேர்வு மையங்களுக்கு வந்து தேர்வெழுதினர்.
நிகழ் கல்வியாண்டில் தேர்வெழுத விண்ணப்பித்தவர்களில் 11,430 பேர் தமிழ் உள்ளிட்ட மொழிப்பாடங்களுக்கான தேர்வை எழுதவில்லை என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்தது.
கல்வித் துறை அமைச்சர் ஆய்வு: நாகப்பட்டினத்தில் உள்ள நடராஜன் தமயந்தி மேல்நிலைப் பள்ளியில் தேர்வு எழுதவிருந்த மாணவர்களை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் திங்கள்கிழமை சந்தித்து அவர்களை ஊக்கப்படுத்தினார். மேலும், அச்சமின்றி தேர்வெழுதுமாறு மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
சென்னை அசோக் நகர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி தேர்வு மையத்தில் பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலர் சந்திரமோகன் ஆய்வு செய்தார்.
"தமிழ் தேர்வு எளிதாக இல்லை'
பொதுத்தேர்வில் முதல் தேர்வாக தமிழ் பாடத் தேர்வு நடைபெற்றது. இது குறித்து தேர்வெழுதிய மாணவ, மாணவிகள் கூறுகையில், அகமதிப்பீடு நீங்கலாக 90 மதிப்பெண்களுக்கு வினாக்கள் இடம்பெற்றிருந்தன. அதில் 14 ஒரு மதிப்பெண் வினாக்கள் கேட்கப்பட்டிருந்தன. அவற்றில் பாதிக்கும் மேற்பட்ட வினாக்கள் பாடப்பகுதிக்கு உள்ளிருந்து இடம்பெற்றிருந்ததால் பதிலளிப்பது சற்று சிரமமாக இருந்தது. இதேபோன்று சிறுவினா, நெடுவினா பகுதிகளிலும் சில கேள்விகள் நன்கு யோசித்து எழுதும் வகையில்தான் கேட்கப்பட்டிருந்தன. அதேவேளையில் மனப்பாடப்பகுதி எளிதாக இருந்தது என தெரிவித்தனர்.
முழு மதிப்பெண் பெறுவது கடினம்...: இது குறித்து தமிழாசிரியர்கள் கூறுகையில், இந்த வினாத்தாள் முற்றிலும் எளிதானவை என கூறி விட முடியாது. நன்கு படிக்கும் மாணவர்கள் 85 முதல் 90 மதிப்பெண்களுக்கும் மேல் பெறலாம். முழு மதிப்பெண் பெறுவது என்பது மிகவும் கடினம். இருப்பினும் சராசரி மாணவர்கள் 60 மதிப்பெண்களுக்கு அதிகமாகவும், மெல்லக் கற்கும் மாணவர்கள் தேர்ச்சி பெறுவதிலும் எந்த சிரமமும் இருக்காது. கடந்த ஐந்தாண்டுகள் நடைபெற்ற பொதுத்தேர்வுகளிலிருந்து குறிப்பிடத்தக்க வினாக்கள் இடம்பெற்றிருந்தன என்றனர்.
சென்னை எழும்பூர் மாநில மகளிர் மேல்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதிய மாணவிகள்.