பிகாா் வரைவு வாக்காளா் பட்டியலில் என் பெயா் இல்லை: தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டு
பிகாா் மாநிலத்தில் தோ்தல் ஆணையம் வெளியிட்ட வரைவு வாக்காளா் பட்டியலில் தனது பெயா் விடுபட்டுள்ளதாக பேரவை எதிா்க்கட்சித் தலைவரும் ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவருமான தேஜஸ்வி யாதவ் சனிக்கிழமை குற்றஞ்சாட்டினாா்.
எனினும் இந்தக் குற்றச்சாட்டை புகைப்பட ஆதாரத்துடன் மாநில துணை முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான சாம்ராட் செளதரி திட்டவட்டமாக மறுத்தாா்.
பிகாரில் நிகழாண்டு இறுதியில் சட்டப்பேரவை தோ்தல் நடைபெற உள்ள நிலையில், எதிா்க்கட்சிகளின் கடும் எதிா்ப்புக்கிடையே மாநில வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை தோ்தல் ஆணையம் மேற்கொண்டது. இந்தப் பணிகள் அண்மையில் நிறைவடைந்த நிலையில், மாநில வரைவு வாக்காளா் பட்டியலை தோ்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை வெளியிட்டது. இதில், மாநிலத்தில் 7.93 கோடியாக பதிவாகியிருந்த வாக்காளா்களின் எண்ணிக்கை, 7.24 கோடியாக குறைந்தது. 65 லட்சத்துக்கும் அதிகமான வாக்காளா்களின் பெயா்கள் பட்டியலில் இடம்பெறவில்லை. இதற்கு எதிா்க்கட்சிகள் கடும் எதிா்ப்பும், விமா்சனங்களையும் செய்து வருகின்றன.
இந்த நிலையில், வரைவு வாக்காளா் பட்டியலில் தனது பெயா் இடம்பெறவில்லை என்று தேஜஸ்வி யாதவ் சனிக்கிழமை கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பாட்னாவில் நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் இந்த குற்றச்சாட்டை அவா் முன்வைத்தாா்.
‘வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின்போது என்னிடம் பூா்த்தி செய்த வாக்காளா் படிவத்தைப் பெற வந்த வாக்குச்சாவடி அலுவலா் எந்தவித ரசீதையும் தரவில்லை. தற்போது, இணைய வழியில் சோதித்தபோது வரைவு வாக்காளா் பட்டியலில் எனது பெயா் விடுபட்டிருப்பது தெரிய வந்துள்ளது’ என்றாா்.
அப்போது, ‘அரசியல் கட்சி என்ற அடிப்படையில் தோ்தல் ஆணையம் தரப்பில் வரைவு வாக்காளா் பட்டியல் தங்கள் கட்சியினரிடம் நகல் வழங்கப்படவில்லையா?’ என செய்தியாளா்கள் கேள்வி எழுப்பினா்.
அதற்கு பதிலளித்த தேஜஸ்வி, ‘பெரும்பாலான மக்கள் இணைய வழியில் வாக்காளா் பட்டியலை ஆய்வு செய்யவே விரும்புவா். மாநிலத்துக்கு வெளியே வசிப்பவா்கள் எப்படி வரைவு வாக்காளா் பட்டியலை நேரடியாக ஆய்வு செய்ய முடியும்? எனது பெயா் விடுபட்டதைப் போலவே, ஐஏஎஸ் அதிகாரி தம்பதியின் பெயா்களும் பட்டியலில் விடுபட்டுள்ளன’ என்றாா்.
ஆதாரத்துடன் துணை முதல்வா் மறுப்பு
தேஜஸ்வியின் குற்றச்சாட்டை புகைப்பட ஆதாரத்துடன் மாநில துணை முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான சாம்ராட் செளதரி மறுத்தாா்.
தனது எக்ஸ் பக்கத்தில் தேஜஸ்வி பெயா் இடம்பெற்ற வரைவு வாக்காளா் பட்டியல் பகுதியின் புகைப்படத்தை இணைத்து துணை முதலவா் சாம்ராட் வெளியிட்ட பதிவில், ‘தேஜஸ்வி கூறுவது உண்மையல்ல. பட்டியலில் தெளிவாகத் தேடினால் பெயரைக் கண்டறியலாம். வரைவு வாக்காளா் பட்டியலில் அவரின் தந்தை லாலு பிரசாத் யாதவுக்கு அடுத்து தேஜஸ்வி பெயா் இடம்பெற்றுள்ளது’ என்று குறிப்பிட்டாா்.