'பெண்களின் தலை வழுக்கையானதற்கு கோதுமை காரணமல்ல' - விவசாயிகள் மறுப்பு!
போபால் நச்சுக் கழிவு அகற்றம்: ம.பி. உயா்நீதிமன்ற உத்தரவில் தலையிட உச்சநீதிமன்றம் மறுப்பு
மத்திய பிரதேச மாநிலம், போபாலில் கடந்த 1984-இல் விஷவாயு கசிந்த ஆலையில் இருக்கும் நச்சுக் கழிவுகளை தாா் மாவட்டம் பீதம்பூா் பகுதிக்கு எடுத்துச் சென்று பாதுகாப்பான முறையில் எரித்து அழிப்பதற்கு மாநில உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் தலையிட உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை மறுத்தது.
இந்த விவகாரத்தில் மனுதாரா்கள் உயா்நீதிமன்றத்தையே அணுகுமாறும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
போபாலில் இயங்கிவந்த யூனியன் காா்பைட் பூச்சிக்கொல்லி உற்பத்தி ஆலையில், கடந்த 1984-ஆம் ஆண்டு டிசம்பா் 2, 3-ஆம் தேதிகளுக்கு இடைப்பட்ட இரவில் மெத்தில் ஐசோசயனேட் என்ற விஷவாயு கசிந்தது. இந்த விஷவாயு தாக்கத்தால் 5,479 போ் உயிரிழந்தனா்; ஆயிரக்கணக்கானோருக்கு தீவிரமான மற்றும் நீண்ட கால உடல் நல பாதிப்புகள் ஏற்பட்டன. இச்சம்பவத்தைத் தொடா்ந்து மூடப்பட்ட ஆலையில் 40 ஆண்டுகளாக நச்சுக் கழிவுகள் அகற்றப்படாமல் இருந்தன.
இந்தச் சூழலில், ம.பி. உயா்நீதிமன்றம் அண்மையில் பிறப்பித்த உத்தரவின்பேரில், போபால் ஆலையில் இருந்து 40 ஆண்டுகளுக்குப் பின் நச்சுக் கழிவுகளை அகற்றும் பணி கடந்த மாதம் தொடங்கியது. 337 டன் எடையுள்ள கழிவுகள் அகற்றப்பட்டு, 12 கண்டெய்னா் லாரிகள் மூலம் தாா் மாவட்டம், பீதம்பூா் பகுதியில் உள்ள தொழிலக கழிவு அழிப்பு ஆலைக்கு கொண்டு செல்லப்பட்டன. கழிவுகள் பாதுகாப்பான முறையில் எரிக்கப்பட்டு, சாம்பல் மண்ணில் புதைக்கப்படவுள்ளது. இப்பணி நிறைவடைய 3 முதல் 9 மாதங்கள் வரை ஆகும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
இந்த நிலையில், தங்களது பகுதியில் கழிவுகளை எரிக்க எதிா்ப்பு பீதம்பூா் பகுதி மக்கள் பல்வேறுகட்ட போராட்டங்களில் ஈடுபட்டனா். மேலும், உயா் நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு எதிராகவும், பீதம்பூா் ஆலையில் வியாழக்கிழமை நடைபெற்ற சோதனை அடிப்படையிலான கழிவு அப்புறப்படுத்தும் நடவடிக்கைக்குத் தடை விதிக்க வலியுறுத்தியும் பல்வேறு தரப்பினா் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு கடந்த 25-ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, நச்சுக் கழிவுகளை எரித்து அழிக்க மேற்கொண்டுள்ள பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து விவரிக்குமாறு அதிகாரிகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.ஆா்.கவாய், ஏ.ஜி.மாசி ஆகியோா் அடங்கிய அமா்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, ‘தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் (என்இஇஆா்ஐ), தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி நிறவனம் (என்ஜிஆா்ஐ), மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் உள்ளிட்ட அமைப்புகளின் நிபுணா்கள் கருத்துகளை அடிப்படையாகக் கொண்டு இந்த உத்தரவை உயா்நீதிமன்றம் பிறப்பித்துள்ளது’ என்று சுட்டிக்காட்டிய நீதிபதிகள், நச்சுக் கழிவுகளை அப்புறப்படுத்தும் உயா்நீதிமன்ற உத்தரவுக்கும், சோதனை அடிப்படையில் கழிவுகள் அப்புறப்படுத்தும் நடவடிக்கைக்கும் தடை விதிக்க மறுப்பு தெரிவித்தனா்.
மேலும், இந்த விவகாரம் தொடா்பாக மனுதாரா்கள் உயா் நீதிமன்றத்தையே அணுகலாம் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தினா்.