தேவாலய திருவிழாவில் மின்சாரம் பாய்ந்து பலியானவர்களின் குடும்பத்துக்கு நிதியுதவி
மணிப்பூரில் மக்கள் சுதந்திரமாக நடமாடுவதை உறுதி செய்ய வேண்டும்: அமித் ஷா!
மணிப்பூரில் உள்ள அனைத்து சாலைகளிலும் மக்கள் சுதந்திரமாக நடமாடுவதை உறுதி செய்யுமாறு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பாதுகாப்புப் படையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 2023 மே முதல் இன கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த நிலையில், வடகிழக்கு மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வந்துள்ளது.
இதையடுத்து, மணிப்பூரின் பாதுகாப்பு நிலைமையை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று மறுஆய்வு செய்தார். அப்போது சாலைகளில் இடையூறுகளை ஏற்படுத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மணிப்பூரில் உள்ள அனைத்து சாலைகளிலும் மக்கள் சுதந்திரமாக நடமாடுவதை உறுதி செய்யுமாறு பாதுகாப்புப் படையினருக்கு உத்தரவிட்டுள்ளார். மாநிலத்தின் ஒட்டுமொத்த சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்து விரிவான விளக்கவுரை வழங்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் ஆளுநர் அஜய் குமார் பல்லா, மணிப்பூர் அரசின் உயர் அதிகாரிகள், ராணுவம், துணை ராணுவப் படைகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
மணிப்பூரின் முதல்வராக இருந்த என்.பிரேன் சிங் தனது பதவியை ராஜிநாமா செய்ததையடுத்து, மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி பிப்ரவரி 13ல் அமல்படுத்தப்பட்டது.
சட்டவிரோத மற்றும் கொள்ளையடிக்கப்பட்ட ஆயுதங்களை வைத்திருக்கும் அனைவரும் சரணடையுமாறு ஆளுநர் பிப்.20 அன்று இறுதி எச்சரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து பாதுகாப்பு மறு ஆய்வு செய்யப்பட்டது.
பள்ளத்தாக்கு மாவட்டங்களில் கடந்த 7 நாளில் 300-க்கும் மேற்பட்ட ஆயுதங்களுடன் பொதுமக்கள் சரணடைந்துள்ளனர். இதில் மெய்தி தீவிரவாதக் குழுவான அரம்பாய் தெங்கோல் சரணடைந்த 246 துப்பாக்கிகளும் அடங்கும்.
மேலும், கொள்ளையடிக்கப்பட்ட சட்டவிரோத ஆயுதங்களை அரசிடம் சமர்ப்பிக்க மக்கள் கூடுதல் அவகாசம் கோரியதைத் தொடர்ந்து, மார்ச் 6ஆம் தேதி மாலை 4 மணி வரை இந்த அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் வெள்ளிக்கிழமை கூறினார்.