பெரியாா் அரசு மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாளா்கள் நியமிக்க எதிா்ப்ப...
தென்னாப்பிரிக்கா அபாரம்; இங்கிலாந்துக்கு ஹாட்ரிக் தோல்வி!
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் கராச்சியில் நடைபெற்ற இன்றையப் போட்டியில் இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து விளையாடியது.
இதையும் படிக்க: ரிஷப் பந்த் விளையாடாதது மிகவும் கடினமாக இருக்கிறது: இந்திய அணியின் பயிற்சியாளர்
179 ரன்களுக்கு ஆட்டமிழந்த இங்கிலாந்து
இங்கிலாந்து அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக பில் சால்ட் மற்றும் பென் டக்கெட் களமிறங்கினர். அந்த அணிக்கு தொடக்கம் சிறப்பாக அமையவில்லை. பில் சால்ட் 8 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பின், ஜேமி ஸ்மித் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழக்க, பென் டக்கெட் மற்றும் ஜோ ரூட் இருவரும் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை நிதானமாக விளையாடியது. இருப்பினும், பென் டக்கெட் 21 பந்துகளில் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 4 பவுண்டரிகள் அடங்கும்.
ஜோ ரூட் 44 பந்துகளில் 37 ரன்கள் எடுத்து வியான் முல்டர் பந்துவீச்சில் போல்டானார். அதன் பின் களமிறங்கிய வீரர்கள் அனைவரும் சீரான இடைவெளிகளில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். ஹாரி ப்ரூக் 19 ரன்கள், கேப்டன் ஜோஸ் பட்லர் 21 ரன்கள், லியம் லிவிங்ஸ்டன் 9 ரன்கள், ஜேமி ஓவர்டான் 11 ரன்கள், ஜோஃப்ரா ஆர்ச்சர் 25 ரன்கள் எடுத்தனர். இறுதியில் இங்கிலாந்து அணி 38.2 ஓவர்களில் 179 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
தென்னாப்பிரிக்கா தரப்பில் மார்கோ ஜேன்சன் மற்றும் வியான் முல்டர் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினர். கேசவ் மகாராஜ் 2 விக்கெட்டுகளையும், லுங்கி இங்கிடி மற்றும் ககிசோ ரபாடா தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
இதையும் படிக்க: நியூசி.க்கு எதிரான போட்டியில் முகமது ஷமிக்கு பதில் அர்ஷ்தீப் சிங் விளையாடுகிறாரா?
இருவர் அரைசதம், அபார வெற்றி
180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி 29.1 ஓவர்கள் முடிவில் இலக்கை எட்டி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தென்னாப்பிரிக்க அணியில் ராஸி வாண்டர் துசென் அதிகபட்சமாக 87 பந்துகளில் 72 ரன்கள் குவித்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதில் 6 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹெய்ன்ரிச் கிளாசன் 56 பந்துகளில் 64 ரன்கள் எடுத்து அசத்தினார். அதில் 11 பவுண்டரிகள் அடங்கும். ரியான் ரிக்கல்டான் 27 ரன்கள் எடுத்தார்.
இங்கிலாந்து தரப்பில் ஜோஃப்ரா ஆர்ச்சர் 2 விக்கெட்டுகளையும், அடில் ரஷீத் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய மார்கோ ஜேன்சனுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.
இதையும் படிக்க: ஆஸி.யின் தொடக்க ஆட்டக்காரருக்கு காயம்; அரையிறுதியில் விளையாடுவாரா?
இந்த வெற்றியின் மூலம் அரையிறுதிக்குள் நுழைந்தது மட்டுமில்லாமல் குரூப் பி பிரிவில் புள்ளிப் பட்டியலில் தென்னாப்பிரிக்க அணி முதலிடத்துடன் நிறைவு செய்தது. சாம்பியன்ஸ் டிராபி தொடரை ஒரு வெற்றி கூட பெறாமல் ஹாட்ரிக் தோல்வியுடன் நிறைவு செய்தது இங்கிலாந்து அணி.