மன்னிப்பு சிறியவராக்காது; ஆணவம் பெரியவராக்காது! கமலுக்கு எடியூரப்பா கண்டனம்
கன்னட மொழி விவகாரத்தில் நடிகர் கமல்ஹாசனுக்கு கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்ததாக நடிகரும், மநீம தலைவருமான கமல் பேசியிருந்தது சர்ச்சையானது. கர்நாடகத்தில் கமலுக்கு எதிராக போராட்டம் வெடித்துள்ளது.
மேலும், இந்த விவகாரத்தில் மன்னிப்பு கேட்டால் மட்டுமே தக் லைஃப் திரைப்படம் கர்நாடகத்தில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் நீதிமன்றம் வரை சென்ற நிலையில், கமல் மன்னிப்பு கேட்க மறுத்துவிட்டார். மேலும், கர்நாடகத்தில் தக் லைஃப் வெளியீட்டை ஒத்திவைப்பதாகவும் அறிவித்துள்ளார்.
இந்த நிலையில், கமலுக்கு கண்டனம் தெரிவித்து எடியூரப்பா வெளியிட்ட பதிவில்,
”கன்னடம் எந்த ஒரு மொழியில் இருந்தும் தோன்றவில்லை என்பதை பல மூத்த மொழி வல்லுநர்கள் நிரூபித்துள்ளனர். வரலாறு அல்லது மொழியியலில் நிபுணராக இல்லாத கமல்ஹாசன், கன்னட மொழியைப் பற்றி பேசியிருப்பது மிகவும் வருந்தத்தக்கது மற்றும் கண்டிக்கத்தக்கது.
அமைதி, நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் அவரின் நடத்தை கண்டிக்கத்தக்கது. தனது கருத்தை வெளிப்படுத்தும் வேகத்தில், கோடிக்கணக்கான கன்னடர்களின் உணர்வுகளை அவர் புண்படுத்தியுள்ளார்.
கன்னடர்களிடம் மரியாதையுடன் மன்னிப்பு கேட்க வேண்டும். மன்னிப்பு கேட்பது யாரையும் சிறியவராக்காது, ஆணவம் யாரையும் பெரியவராக்காது” எனத் தெரிவித்துள்ளார்.