நகராட்சியுடன் ஊராட்சியை இணைக்க எதிா்ப்பு: கிராம மக்கள் ஆா்ப்பாட்டம்!
முதல் ஒருநாள்: இருவர் அரைசதம்; இந்தியாவுக்கு 249 ரன்கள் இலக்கு!
இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 248 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி நாக்பூரில் இன்று (பிப்ரவரி 6) நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடியது.
இருவர் அரைசதம்
இங்கிலாந்து அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக பில் சால்ட் மற்றும் பென் டக்கெட் களமிறங்கினர். இந்த இணை இங்கிலாந்து அணிக்கு சிறப்பான தொடக்கத்தைத் தந்தது. இங்கிலாந்து அணி முதல் விக்கெட்டுக்கு 75 ரன்கள் எடுத்தது. அதிரடியாக விளையாடிய பில் சால்ட் 26 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 5 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, பென் டக்கெட் 32 ரன்கள், ஜோ ரூட் 19 ரன்கள் மற்றும் ஹாரி ப்ரூக் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர்.
இதையும் படிக்க: ஐசிசியின் ஜனவரி மாத சிறந்த வீரர் விருதுக்கான போட்டியில் வருண் சக்கரவர்த்தி!
இதனையடுத்து, கேப்டன் ஜோஸ் பட்லர் மற்றும் ஜேக்கோப் பெத்தேல் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை சிறப்பாக விளையாடி இங்கிலாந்து அணியின் ஸ்கோரை உயர்த்தியது. சிறப்பாக விளையாடிய இருவரும் அரைசதம் கடந்து ஆட்டமிழந்தனர். ஜோஸ் பட்லர் 52 ரன்களிலும், ஜேக்கோப் பெத்தேல் 51 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதன் பின், களமிறங்கிய வீரர்கள் பெரிதாக ரன்கள் குவிக்கவில்லை.
இறுதியில் 47.4 ஓவர்களில் இங்கிலாந்து அணி 248 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்தியா தரப்பில் ரவீந்திர ஜடேஜா மற்றும் ஹர்ஷித் ராணா இருவரும் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். முகமது ஷமி, அக்ஷர் படேல், மற்றும் குல்தீப் யாதவ் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
இதையும் படிக்க:10 ஆண்டுகளுக்குப் பிறகு மே.இ.தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஆஸ்திரேலியா!
249 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணி விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.