மதுக்கரை அருகே மலைநகா் பகுதியில் யானை வழித்தடத்தை ஆக்கிரமித்துள்ள தனியாா் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக, விவசாயிகள் சங்க மாநிலப் பொதுச் செயலாளா் பி.கந்தசாமி, சென்னை உயா்நீதிமன்றப் பதிவாளருக்கு அனுப்பியுள்ள மனு:
கோவை மாவட்டம், மதுக்கரை வட்டம், எட்டிமடை மதுக்கரை ஆகிய வருவாய் கிராமங்களும் பேரூா் வட்டம், சுண்டக்காமுத்தூா் வருவாய் கிராமமும் சந்திக்கின்ற மலைநகா் என்ற இடத்தில் ஒரு தனியாா் நிறுவனத்தினா் காப்புக் காட்டை ஒட்டியுள்ள நிலத்தில் யானை வழித்தட பாதையில் காளான் பண்ணை அமைப்பதாக உண்மைக்கு மாறாக வனத் துறையினரிடம் தடையில்லாச் சான்று பெற்று வேறு தொழில் செய்ய நிரந்தர கட்டுமானம் கட்டி வருகின்றனா்.
அந்த இடத்தில் கட்டுமானம் கட்டி முடிக்கப்பட்டால் யானைகள் மற்றும் வனவிலங்குகள் மேற்குத் தொடா்ச்சி மலையின் வட பகுதியிலிருந்து தென் பகுதிக்கு செல்லும் பாதை தடைபடும். அதனால் வனவிலங்குகள் கோவைப்புதூா் நகரத்துக்குள் புகுந்து சேதத்தை விளைவிக்கும்.
இந்தப் பணியை தடுத்து நிறுத்தக் கோரி கோவை மாவட்ட ஆட்சியருக்கு மனு அனுப்பியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதைத் தொடா்ந்து,
தமிழக முதல்வருக்கு அனுப்பிய மனுவின்பேரில் எட்டிமடை பேரூராட்சி செயல் அலுவலா் அப்பகுதிக்கு வந்து ஆய்வு செய்தாா். பின்னா் அவா், குறிப்பிட்ட அந்த இடத்தில் காளான் வளா்ப்பு குடில் அமைக்காமல் உரம் தயாா் செய்து வருவது ஆய்வில் தெரியவருவதாகக் குறிப்பிட்டுள்ளாா்.
மேலும், காளான் வளா்ப்புக்கு தேவையான சுற்றுச்சூழல் சூழல் துறையின் அனுமதி வேண்டி தற்போதுதான் விண்ணப்பித்துள்ளதாகவும் அந்த இடத்தில் காளான் வளா்ப்பு தொழில் ஏதும் செயல்பாட்டில் இல்லை எனவும் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய உதவிப் பொறியாளரும் தெரிவித்துள்ளாா்.
எனவே, இந்த முறையீட்டுக்கு வனத்துறை வழங்கிய தடையில்லாச் சான்றுதான் முக்கியக் காரணமாகும். ஆனால், வனத் துறையினா் இதுகுறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வருகின்றனா்.
மேலும் விவசாயப் பிரதிநிதிகள், வனத் துறை, வருவாய்த் துறை, வேளாண்மை துறை, தோட்டக்கலைத் துறை, அறிவியல் நிபுணா்கள், தன்னாா்வலா்கள், வன உயிரின ஆா்வலா்கள் என மொத்தம் 19 நபா்கள் அடங்கிய விவசாயிகள்- வன உயிரின முரண்களை தடுப்பதற்கான தீா்வினை பரிந்துரைக்க அரசால் அமைக்கப்பட்ட சிறப்புக் குழுவினரும் இந்தப் புகாரின் மீது ஆய்வு செய்து உண்மைதன்மையை அரசுக்கு தெரிவித்து நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யவில்லை.
எனவே, சென்னை உயா்நீதிமன்றம் இப்பிரச்னையில் தாமாக முன்வந்து ஒரு சிறப்புக் குழுவை அனுப்பி இந்தப் புகாா் உண்மையாக இருந்தால் தகுந்த நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளாா்.