லடாக் போராட்டம்: நேபாளம் - லடாக் இரண்டு போராட்டமும் ஒன்றா? பின்னணி என்ன?
லடாக்கில் மாநில அந்தஸ்து உரிமை கோரி நடந்து வந்த போராட்டம் நேற்று முன்தினம் (செப்டம்பர் 24) வன்முறையாக வெடித்தது.
இதில், போராடும் இளைஞர் குழுவுக்கும் போலீஸாருக்கும் நடந்த மோதலில் 4 பேர் பலியாகினர். போராட்டம் வன்முறையாக வெடித்ததால், 15 நாள்களாக மேற்கொண்டுவந்த உண்ணாவிரதத்தை, சூழலியல் செயற்பாட்டாளரும், லடாக் மாநில அந்தஸ்துக்காகப் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருபவருமான சோனம் வாங்சுக் நிறுத்திவிட்டார்.
இறுதியில், வன்முறைக்கு மக்களைத் தூண்டியதே, சோனம் வாங்சுக்தான் என உள்துறை அமைச்சகம் கூறுகிறது.

இப்போராட்டம் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிந்தனிடம் பேசினோம். அப்போது, லடாக்-கில் பிரச்னை, மக்கள் கேட்கும் உரிமை ஏன் தர மறுக்கப்படுகிறது, மத்திய அரசின் செயல்பாடுகள் ஆகியவற்றை விவரித்த சிந்தன், ``லடாக் மக்கள் தங்களுக்கு மாநில அந்தஸ்துதான் கேட்கிறார்கள்.
ஒன்றிய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டிலிருந்தாலும், ஒன்றிய அரசின் திட்டங்கள் அவர்களின் வாழ்க்கை முன்னேறவில்லை. நேபாளப் போராட்டம் என்பது அங்கு யாரும் ஜனநாயக உரிமைகளைக் கேட்கவில்லை, அரசு தன் அடிப்படைக் கடமைகளை நிறைவேற்றச் சொல்லிக் கேட்டார்கள்.
ஆனால், இங்கு உரிமை பறிபோயிருக்கிறது. மாநில அந்தஸ்து போயிருக்கிறது. மாநில அந்தஸ்து உரிமை போனதால் இவர்களால் ஜனநாயகமாகக் கோரிக்கை வைக்கவே முடியவில்லை.
ஜனநாயகத்துக்காகப் போராடுகிறார்கள். நேபாளப் போராட்டத்துக்கு அங்கு இருக்கிற அரசு பதிலளிக்கிறது. அவர்கள் கேட்ட ஒருவர் நிர்வாகத்தில் அமர்த்தப்படுகிறார்.
ஆனால், இங்கு அப்படியில்லை. இந்தியாவில் நடப்பது என்பது ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியைத் தேர்ந்தெடுக்கப்படாத ஆர்.எஸ்.எஸ் கட்டுப்படுத்துகின்ற ஒரு சிக்கலான சூழல்.

இந்த நாட்டை ஒற்றை நாடாக்க வேண்டும் என்ற அஜெண்டா அவர்களுக்கு இருக்கிறது. அதற்கேற்றவாறு மோடி அரசு செயல்படும்போது, வேறு வழியில்லாமல் மக்கள் போராடுகிறார்கள்.
போராட்டத்தில் மக்களை என்ன மொழி (அமைதியா, வன்முறையா) எடுக்க வேண்டும் என்பதை அரசுதான் முடிவுசெய்கிறது.
ஏனெனில் அரசிடம் எல்லா விதமான பலமும் இருக்கிறது. அவர்களால் பேச்சுவார்த்தை நடத்த முடியும், நிலைமையை எடுத்துரைத்து அமைதியாக இருங்கள் என்று சொல்ல முடியும்.
வெளிப்படையான மாற்றங்களைச் செய்யும்போது போராட்டம் அமைதியடையும். நேபாளம், வங்கதேசத்தில் அதுதான் நடந்தது.
போராட்டத்துக்கு ஒரு எதிர்வினை இருக்கும்போது மக்களுக்கு அது ஒரு நம்பிக்கையைக் கொடுக்கிறது. லடாக் மக்கள் கேட்பதைக் கொடுப்பதால் நாட்டுக்கு என்ன இழப்பு ஏற்படப்போகிறது.
ஆனால், அவர்களுடைய நிலத்தில் யார் மைனிங் செய்யப்போகிறார்கள், அந்த நிறுவனத்துக்கு என்ன பாதிப்பு என்பதுதான் அரசின் கவலையாக இருக்கிறது.
அதிகாரத்தை வைத்துக்கொண்டு மட்டும் சூழலைக் கட்டுப்படுத்த முடியாது. அதிகாரத்தைப் பரவலாக்கும்போதுதான் அமைதி நிலவும், அந்தந்த மக்களின் பிரச்னை அங்கங்குத் தீர்க்கப்படும்.

ஒவ்வொன்றுக்கும் போராடித்தான் கவனத்தை ஈர்க்க வேண்டுமென்றால் அங்குப் பிரச்னைகள் தீராது. எல்லாவற்றையும் கட்டுப்பாட்டில் வைக்க நினைத்தால் அது வெடிக்கும்.
சமகாலத்தில் நடந்த இளைஞர் எழுச்சியில் இலங்கையைத் தவிர மற்ற பகுதிகளில் நடந்த எழுச்சிக்குப் பின்னால் எந்தவொரு கட்டமைக்கப்பட்ட அமைப்பும் இல்லை. ஆனால் உணர்வு இருக்கிறது.
அதேசமயம், உணர்வு மட்டுமே போதாது. அந்த உணர்வு அமைப்பு ரீதியாகத் திரள வேண்டும். அப்படி அமைப்பு ரீதியாகத் திரளும்போது எங்கு நிறுத்த வேண்டும், எங்குக் குரல் கொடுக்க வேண்டும் என்பது போன்ற சுய கட்டுப்படும் சேர்ந்து வரும்.
உரிமைகள் வேண்டுமென்றால் அது கட்டுக்கோப்பான போராட்டத்தால்தான் கிடைக்கும்" என்று கூறினார்.