RSSக்கு புகழாரம் - ஆளும் தி.மு.க அரசு மீது கடும் விமர்சனம்; ஆளுநர் ஆர்.என்.ரவி அ...
விழுப்புரம் அருகே மூத்த தேவி சிற்பம் கண்டெடுப்பு!
விழுப்புரம் மாவட்டம், கோட்டகுப்பம் அருகே 1200 ஆண்டுகள் பழைமை வாய்ந்த பல்வர் காலத்து மூத்த தேவி சிற்பம் கண்டெடுக்கப்பட்டது.
விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம் கோட்டக்குப்பம் நகராட்சிக்குட்பட்ட தந்திராயன் குப்பம் கிராமத் தலைவர் மணி அளித்த தகவலின் பேரில், தொல்லியல் ஆய்வாளர் சங்கத்தின் தலைவர் மணியன் கலியமூர்த்தி தலைமையில் அதன் அமைப்பினர் அந்த பகுதியில் கள ஆய்வில் ஈடுபட்டனர்.
அப்போது, மாரியம்மன் கோயில் எதிரில் உள்ள வேப்பமரத்தடியில் மூத்த தேவி எனப்படும் தவ்வை சிற்பம் கண்டறியப்பட்டது. இதனை ஆய்வாளர் ஆய்வு செய்தனர்.
இதுகுறித்து மணியன் கலியமூர்த்தி கூறியதாவது:
கோட்டக்குப்பம் நகராட்சிக்குட்பட்ட தந்திராயன் குப்பம் மாரியம்மன் கோயில் எதிரில் உள்ள வேப்பமரத்தடியில் மூத்த தேவி எனப்படும் தவ்வை சிற்பம் கண்டறியப்பட்டது.
இந்த சிற்பம் சுமார் 3 அடி உயரமும், 2 அடி அகலமும் கொண்ட பலகை கல்லில் புடைப்புச் சிற்பமாக உள்ள மூத்த தேவியின் தலை கரண்ட மகுடத்துடன் காதில் முதலை வடிவத்தில் மகர குண்டலம் அணிந்து, கழுத்து ஆபரணங்களுடன், தோல் வளைவிகளும் கைகள், கால்களில் அழகிய அணிகலன்களும், மார்புக்கு கீழே சன்ன வீரம் அணிந்து, வலது கையில் தாமரை மொட்டும் இடது கை திண்டின் மீது வைத்தபடியும், இரண்டு கால்களையும் தொங்கவிட்டு திண்டின் மீது அமர்ந்த நிலையில் இந்த தவ்வை காட்சியளிக்கிறது.
வலது புறம் மகன் மாந்தனும் அவரது கையில் சிதைந்த நிலையில் துடைப்பமும் இடது புறம் மகள் மாந்தியும் அவரது கையில் காக்கை கொடியை ஏந்தியவாறு இருவரும் சுகாசன கோலத்தில் அமர்ந்தவாறு சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளது.
மிகுந்த கலையம்சங்களுடன் வடிக்கப்பட்டுள்ள இந்த தவ்வைச் சிற்பம் இறுதி பல்லவர் மற்றும் பிற்கால சோழர் கால சிற்பக்கலை பாணியில் உள்ளது.
சிற்பத்தின் அமைப்பை காணும் போது இதன் காலம் (கி.பி. 8-9 ஆம் நூற்றாண்டு) சேர்ந்தது. சுமார் 1200 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது.
தமிழ் இனத்தின் தாய் தெய்வ வழிபாட்டில் மூத்த தேவி எனப்படும் இந்த தவ்வை பொதுவாக வேளாண்மை மற்றும் நீர்நிலைகளை பாதுகாக்கும் கடவுளாக வழிபட்டதாக சங்க இலக்கியங்களில் ஆவணப்படுத்தப்பட்டுள்ள மூத்த தேவி சிற்பம் இந்த பகுதியில் காணப்படுவது சிறப்பானது என மணியன் கலியமூர்த்தி கூறினார்.
இந்த கள ஆய்வின்போது தந்திராயன் குப்பம் ஊரைச் சேர்ந்த தரணி ரமேஷ் முனுசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் ஏற்கெனவே நன்னாடு, அத்தியூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மூத்த தேவி சிற்பங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அந்த வகையில் தந்திராயன் குப்பம் மூத்த தேவி சிற்பம் பல்லவா் கலை வரலாற்றுக்குப் புதிய வரவாகும்.