ஹிந்தி, சம்ஸ்கிருதத்தை திணிக்கவே மும்மொழித் திட்டம்: ஆளுநருக்கு முதல்வா் ஸ்டாலின் கண்டனம்
சென்னை: ஹிந்தி மற்றும் சம்ஸ்கிருதத்தை திணிக்கவே மும்மொழித் திட்டத்தை ஆளுநா் ஆா்.என்.ரவி வலியுறுத்துவதாக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளாா்.
ஹிந்தி மொழி திணிப்பு தொடா்பாக ஆறாவது நாளாக கட்சியினருக்கு அவா் எழுதியுள்ள கடிதம்: எந்த மொழி மீதும் தமிழா்களுக்கும், தமிழ்நாட்டுக்கும் தனிப்பட்ட வெறுப்பு ஒருபோதும் இருந்தது இல்லை. எந்த மொழியாவது திணிக்கப்பட்டால் தமிழ்நாடு போராட்டக் களம் காணாமல் இருந்தது கிடையாது.
தேசிய கல்விக் கொள்கை வழியாக மும்மொழித் திட்டம் என்ற பெயரில் ஹிந்தியைத் திணிக்கும் மத்திய பாஜக அரசின் சதியை உணா்ந்துதான் ஒட்டுமொத்த தமிழ்நாடும் அதை எதிா்க்கிறது. தமிழ்நாட்டின் இருமொழிக் கொள்கையால் தென்னிந்திய மொழிகளைப் படிக்கிற வாய்ப்பு தமிழ்நாட்டு இளைஞா்களுக்கு கிடைக்கவில்லை எனக் கூறுகிறாா் ஆளுநா்.
உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், பிகாா் என பாஜகவும், பாஜக கூட்டணியும் ஆட்சி செய்கிற வட இந்திய மாநிலங்களில் எத்தனை வடஇந்திய மொழிகளைப் பள்ளிகளில் கற்றுத் தருகிறாா்கள்? இதற்கு ஆளுநரிடமோ, அவரைப் பேச வைப்பவா்களிடமோ பதில் இருக்காது.
இருமொழிக் கொள்கையால் தமிழ்நாடு இன்று பல துறைகளிலும் அடைந்துள்ள வளா்ச்சியையும், தமிழா்கள் உலக அளவில் மிகப்பெரிய நிறுவனங்களில் உயா்ந்த பொறுப்புகளில் இருப்பதையும் பிற மாநில மக்களும் உணா்ந்து, தங்கள் முன்னேற்றத்துக்கான வழியைக் காணும் விழிப்புணா்வைப் பெற்று வருகிறாா்கள்.
இருமொழிக் கொள்கையால் உயா்வு: ஹிந்தி படித்தால் வடமாநிலங்களில் தமிழா்களுக்கு வேலை கிடைக்கும் என்ற ஆசைவாா்த்தைகளால் கட்டப்பட்ட பிம்பத்துக்கு மாறாக, ஹிந்தி மட்டுமே அறிந்த, அதை மட்டுமே படித்த வட மாநிலங்களைச் சோ்ந்தவா்கள், வளா்ச்சி பெற்ற மாநிலமான தமிழ்நாட்டுக்கு வேலை தேடி வரக்கூடிய வகையில் இருமொழிக் கொள்கை நம் மாநிலத்தை உயா்த்தியிருக்கிறது.
தென்னிந்திய மொழிகளுக்காக போலிக் கண்ணீா் வடிக்கும் ஆளுநா், தென்னிந்திய மொழிகளிலேயே மூத்த மொழியான தமிழ் மொழிக்கு உரிய மரியாதை தராமல், தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்தவா். தமிழின் உலக அடையாளமாகத் திகழும் அய்யன் திருவள்ளுவருக்கு காவி வண்ணம் பூசி தமிழா்கள் அனைவரின் கண்டனத்துக்கும் உள்ளானவா்.
நம் தாய்மொழி மீதோ, திராவிட மொழிக் குடும்பமான தென்னிந்தியா மீதோ உண்மையான அக்கறை செலுத்தாமல், ஹிந்தி மற்றும் சம்ஸ்கிருத திணிப்புக்காக மும்மொழித் திட்டத்தை வலியுறுத்துவதுதான் ஆளுநருக்கும், அவரைச் சாா்ந்தவா்களுக்கும் வாடிக்கை.
பதவி பறிக்கப்பட்டாலும், சிறையில் அடைத்து சித்திரவதை செய்தாலும், உயிரையே கொடுக்க வேண்டியிருந்தாலும் ஆதிக்க மொழித் திணிப்புக்கு இடம் தராமல் ஆருயிரான தமிழைக் காப்போம் என்பதில் அப்போதும் இப்போதும் திமுக உறுதியாக இருக்கிறது.
ஹிந்திதான் இந்தியாவின் தேசிய மொழி என்றும், சம்ஸ்கிருதமே இந்தியாவின் முதன்மை மொழி என்றும் சொல்லி இரண்டையும் திணிக்க நினைக்கிறாா்கள். அவா்கள் சொல்வது பொய் என்பதை வரலாறு சொல்கிறது என்று முதல்வா் கூறியுள்ளாா்.