பேரவைக்குள் பான்மசாலா போட்டுத் துப்பிய எம்எல்ஏ! தலைவர் எச்சரிக்கை!
நத்தம் மாரியம்மன் கோயில் விழா: தீர்த்தம் எடுத்த திரளான பக்தர்கள்!
நத்தம் மாரியம்மன் கோயில் மாசித்பெருந்திருவிழாவில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தீர்த்தம் எடுத்து காப்புக் கட்டி விரதத்தை தொடங்கினர்.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் மாரியம்மன் கோயில் தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்றாகும். இதன் முக்கிய திருவிழாவான மாசி பெருந்திருவிழா நேற்று(மார்ச். 3) கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இன்று(மார்ச். 4) அதிகாலை பக்தர்கள் உலுப்பகுடி அருகிலுள்ள கரந்தமலை கன்னிமார் தீர்த்தத்தில் புனித நீராடி மஞ்சள் ஆடைகள் அணிந்து அங்கிருந்து புனித தீர்த்தக்குடங்கள் எடுத்து வந்து அரண்மனை சந்தனக் கருப்பு கோயிலில் சேர்ந்தனர்.
பின்னர், அங்கிருந்து மேளதாளம் முழங்க வர்ணக் குடைகள் பரிவாரங்களுடன் ஊர்வலமாக அங்கு கூடியிருந்த பக்தர்களை கோயிலுக்கு அழைத்து வந்தனர். பின்னர் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தீர்த்தக் குடங்களை தலையில் சுமந்தபடி மஞ்சள் ஆடைகள் அணிந்த நிலையில் கோவிந்தா முழக்கம் முழங்க மாரியம்மன் கோயிலைச் சென்றடைந்தனர்.

பின்னர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது. தொடர்ந்து பக்தர்கள் மஞ்சள் காப்பு கட்டினர். இதில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்பு கட்டி 15 நாள் விரதத்தைத் தொடங்கினர்.
இன்று இரவு சுமார் 9 மணிக்கு அம்மன் குளத்திலிருந்து கம்பம் நகர்வலமாக கொண்டு வரப்பட்டு கோயிலில் ஸ்தாபிதம் செய்யப்படும். இதைத் தொடர்ந்து வரும் 7, 11, 14 ஆம் தேதிகளில் அம்மன் சர்வ அலங்காரத்தில் மயில், சிம்மம், அன்ன வாகனத்தில் எழுந்தருளி மின்ரதத்தில் ஊர்வலமாக நத்தத்தின் முக்கிய வீதிகளில் நகர்வலம் வந்து செல்லும்.
இந்த விழா நாள்களில் பக்தர்கள் கோயிலுக்கு வந்து அக்னிசட்டி எடுத்தல், மாவிளக்கு, கரும்புதொட்டில், அங்கபிரதட்சணம், அலகு குத்துதல், அரண்மனைப் பொங்கல் உள்ளிட்ட நேர்த்திக் கடன்களை பக்தர்கள் செலுத்துவார்கள். வரும் மார்ச் 18-ம் தேதி செவ்வாய்க்கிழமை விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கழுகுமரம் ஊன்றி பின்னர் ஏறுதல் நிகழ்ச்சியும், தொடர்ந்து பக்தர்கள் பூக்குழி இறங்குவதும் நடைபெறும்.

இதையும் படிக்க: தொடர் சிகிச்சையில் தயாளு அம்மாள்! மு.க. அழகிரி வருகை!
தொடர்ந்து, மறுநாள்(மார்ச் 19) காலையில் அம்மன் மஞ்சள் நீராடுதலைத் தொடர்ந்து அன்றிரவு அலங்கரிக்கப்பட்ட பூப்பல்லக்கில் அம்மன் குளத்திலிருந்து புறப்பட்டு நகர்வலமாக வந்து அம்மன் கோவிலை சென்றடையும். இத்துடன் திருவிழா நிறைவு பெறும்.
இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், திருக்கோயில் பரம்பரை பூசாரிகள் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர். பொதுசுகாதாரப் பணி, குடிநீர் வசதிகளை நத்தம் பேரூராட்சி நிர்வாகமும், பாதுகாப்பு ஏற்பாடுகளை நத்தம் காவல் துறையினரும் செய்துள்ளனர்.