சக்ரபாணிசுவாமி கோயிலில் மாசிமக பிரமோற்சவ கொடியேற்றம்!
மாசிமக பிரமோற்சவத்தை முன்னிட்டு தஞ்சாவூர் சக்ரபாணிசுவாமி திருக்கோயிலில் கொடியேற்றம் சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் ஆண்டுதோறும் 12 சைவ திருத்தலங்கள் மற்றும் 5 வைண ஸ்தலங்களுடன் இணைந்து ஒருசேர பத்து நாள் மாசிமக விழா நடைபெறும். இந்த பிரமோற்சம் மிகவும் விசேஷமானது, இவ்வாண்டிற்காண மாசிமக பிரமோற்சவத்தின் துவக்கமாக நேற்று காசிவிஸ்வநாதர், கௌதமேஸ்வரர், அபிமுகேஸ்வரர், வியாழசோமேஸ்வரர் காளஹஸ்தீஸ்வரர் என 5 சைவ திருத்தலங்களில் கொடியேற்றம் சிறப்பாக நடைபெற்றது. தொடர்ந்து 5 சைவத்தலங்களில் மாசிமகப் பெருவிழா ஏகதின உற்சவமாக நடைபெறுகிறது.
இதனையடுத்து, வைண ஸ்தலமான சக்ரபாணிசுவாமி திருக்கோயிலில் உற்சவர் சக்ரபாணிசுவாமி, விஜயவள்ளி தாயார் மற்றும் சுதர்சனவள்ளி தாயாருடன் கொடிமரம் அருகே எழுந்தருள, பட்டாச்சார்யர்கள் வேத மந்திரங்கள் முழங்க, நாதஸ்வர மேள தாள மங்கள வாத்தியங்கள் ஒலிக்க, ஸ்ரீ பெரிய திருவடி என போற்றப்படும் கருடாழ்வார் சின்னம் வரையப்பெற்ற திருக்கொடி தங்கக் கொடிமரத்தில் ஏற்றபட்டு அலங்கார தீபாராதனை செய்யப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதேபோன்று இராஜகோபாலசுவாமி திருக்கோயில் மற்றும் ஆதிவராகப்பெருமாள் திருக்கோயில் ஆகிய வைணவ தலங்களிலும் மாசிமக பிரமோற்சவ கொடியேற்றம் சிறப்பாக நடைபெற்றது.
மாசிமக பிரமோற்சவத்தை முன்னிட்டு தினமும் சந்திரபிரபை, சேஷ வாகனம், கருட சேவை, ஹனுமந்த வாகனம், யானை வாகனம், உள்ளிட்ட பல்வேறு காலை மாலையில் சுவாமி வீதியுலா முக்கிய நிகழ்ச்சியாக 12ம் தேதி புதன்கிழமை காலை சக்கரபாணிசுவாமி திருத்தேரோட்டமும் நடைபெறுகிறது. அன்று நண்பகல் 12 சைவத்திருத்தலங்களில் இருந்து உற்சவ மூர்த்திகள் மகாமககுளத்தின் நான்கு கரைகளிலும் ஒருசேர எழுந்தருள, மாசிமக தீர்த்தவாரி நடைபெறுகிறது. இத்தீர்த்தவாரி நிகழ்வின்போது, ஏராளமானோர் மகாமக திருக்குளத்திலும், காவிரியிலும் புனித நீராடி கரைகளில் எழுந்தருளி அருள்பாலிக்கும் சுவாமிகளை தரிசனம் செய்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.