மேல்லையனூர் அங்காளம்மன் கோயிலில் மாசித் தேரோட்டம்!
விழுப்புரத்தில் பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் மாசித் தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
இந்த கோயிலில் ஆண்டுதோறும் மகா சிவராத்திரியில் இருந்து 13 நாள்கள் மாசி பெருவிழா சிறப்பாக நடத்தப்படுகிறது. அந்தவகையில் இந்தாண்டு மாசி பெருவிழா பிப்.26 கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி விழாவின் சிகர நிகழ்ச்சியான மயானக்கொள்ளை விழா கடந்த வாரம் நடைபெற்றது.
மாசி பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று தேரோட்டம் நடைபெற்றது. இந்த விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு பக்தி பரவசத்துடன் தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
தேரோட்ட நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என்பதால் இன்று விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.