ஆன்லைன் விளையாட்டில் ரூ.50 லட்சம் இழப்பு: குழந்தைகளுடன் தாய் தற்கொலை? கணவர் மாயம்!
நாமக்கல்லில் ஆன்லைன் விளையாட்டில் ரூ.50 லட்சத்தை கணவர் இழந்த விரக்தியில் தனது இரு குழந்தைகளுடன் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அவரது கணவர் மாயமானதால் சந்தேக அடிப்படையில் காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல்லில் தனியார் வங்கியில் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வருபவர் பிரேம்ராஜ் (38). இவர் நாமக்கல்-சேலம் சாலையில் பதிநகர் பகுதியில் வாடகை வீட்டில் மனைவி மோகனப்பிரியா (33), மற்றும் மகள் பிரனதி (6), மகன் பிரனீஷ்(11 மாதம்) ஆகியோருடன் வசித்து வந்தார்.
இந்த நிலையில் இன்று(மார்ச் 4) மதியம் வரை பிரேம் ராஜின் வீட்டிலிருந்து யாரும் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் அவரது வீட்டில் உள்ள ஜன்னல் வழியாக எட்டி பார்த்தனர்.
அப்போது மோகனப்பிரியா, மகன் பிரனிஷ் மற்றும் மகள் பிரனிதி ஆகியோர் உயிரிழந்த நிலையில் கிடப்பது தெரியவந்தது. இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் நாமக்கல் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

அங்கு வந்த காவல் துறையினர் மூன்று பேரின் உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் காவல் துறையினர் நடத்திய விசாரணையில் ஆன்லைன் செயலி ஒன்றில் ரூ.50 லட்சம் வரை இழந்ததாகவும் இதை வெளியே சொன்னால் அவமானம் என அவரது கணவர் பிரேம்ராஜ் கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு வீட்டில் இருந்து மாயமயமாகி உள்ளார்.
இந்தச் சூழலில் குழந்தைகள், தாய் உள்பட மூவர் உயிரிழந்த நிலையில் கணவர் பிரேம்ராஜை காவல்துறை தொடர்பு கொண்டனர். அப்போது அவரது கைப்பேசி சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. அவர் எங்கிருக்கிறார் என்பது குறித்தும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மூவரும் உயிரிழந்தது கொலையா? அல்லது தற்கொலையா? என்ற கோணத்திலும் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.