ஆஸ்திரேலியாவை பழிதீர்த்த இந்திய அணி - இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தல்!
ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்திய அணி.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் துபையில் நடைபெற்று வரும் முதல் அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் விளையாடின.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.
இந்தியாவுக்கு 265 ரன்கள் இலக்கு
ஆஸ்திரேலிய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக டிராவிஸ் ஹெட் மற்றும் இளம் வீரர் கூப்பர் கன்னோலி களமிறங்கினர்.
கூப்பர் கன்னோலி 0 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற, டிராவிஸ் ஹெட் மற்றும் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் ஜோடி சேர்ந்தனர். ஸ்டீவ் ஸ்மித் நிதானமாக விளையாட டிராவிஸ் ஹெட் வழக்கமான அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சிறப்பாக விளையாடிய இந்த பார்ட்னர்ஷிப்பை வருண் சக்கரவர்த்தி உடைத்தார். டிராவிஸ் ஹெட் 33 பந்துகளில் 39 ரன்கள்(5 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள்) எடுத்து ஆட்டமிழந்தார்.
அதன் பின், ஸ்டீவ் ஸ்மித் மற்றும் மார்னஸ் லபுஷேன் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை சிறிது நேரம் நீடித்தபோதிலும், லபுஷேன் 29 ரன்களில் ஆட்டமிழந்தார்.
ஜோஷ் இங்லிஷ் 11 ரன்களில் ஜடேஜா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். தொடக்கம் முதலே நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் அரைசதம் கடந்து அசத்தினார். அவர் 96 பந்துகளில் 73 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அதில் 4 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். நடுவரிசை ஆட்டக்காரரான அலெக்ஸ் கேரி சிறப்பாக விளையாடி அரைசதம் கடந்து அசத்தினார். அவர் 57 பந்துகளில் 61 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆனார். அதில் 8 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும்.
இறுதியில் ஆஸ்திரேலிய அணி 49.3 ஓவர்கள் முடிவில் 264 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்தியா தரப்பில் முகமது ஷமி 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். வருண் சக்கரவர்த்தி, ரவீந்திர ஜடேஜா தலா இரண்டு விக்கெட்டுகளையும், ஹார்திக் பாண்டியா மற்றும் அக்ஷர் படேல் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
இந்திய அணி
பின்னர் 265 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான கேப்டன் ரோஹித் சர்மா அதிரடியாக ரன்குவிப்பில் 3 பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் விளாசி 28 ரன்கள் எடுத்த நிலையில் கூப்பர் பந்து வீச்சில் ஆட்டமிழக்க, துணைக் கேப்டன் ஷுப்மன் கில் 8 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.
அவர்களுக்குப் பின்னர் ஜோடி சேர்ந்த விராட் கோலி மற்றும் ஷ்ரேயஸ் ஐயர் இருவரும் அணியின் ஸ்கோரை நேர்த்தியாக உயர்த்தினர். 4 விக்கெட்டுக்கு 91 ரன்கள் சேர்த்த நிலையில் ஷ்ரேயஸ் ஐயர் 3 பவுண்டரிகளுடன் 45 ரன்கள் விளாசி வீழ்ந்தார். அவருக்குப் பின்னர் அக்ஷர் பட்டேல் 27 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.
விக்கெட் கீப்பர் கேஎல்.ராகுலுடன் ஜோடி சேர்ந்த ஹார்திக் பாண்டியா நிதானமான தொடக்கம் தந்தாலும் ஆடம் ஸாம்பாவின் ஓவரில் 2 சிக்ஸர்கள் பறக்கவிட்டு பதற்றத்தை தணித்தார். இருப்பினும் எல்லீஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
முடிவில் 48.1 ஓவர்களில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 267 ரன்கள் குவித்து வெற்றிபெற்றது.