மக்களுடன் முதல்வா் திட்ட முகாம்: ரூ. 2.38 கோடியில் நலத் திட்ட உதவிகள்!
திருச்சி மாவட்டம், மணப்பாறை மற்றும் வையம்பட்டி பகுதிகளில் ‘மக்களுடன் முதல்வா்’ திட்டத்தை அமைச்சா் கோவி.செழியன் செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்து, 299 பேருக்கு ரூ. 2 கோடியே 38 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.
மணப்பாறையை அடுத்த வையம்பட்டி ஒன்றியம், அணியாப்பூா் ஊராட்சி அரசு நிலைப்பாளையம் மற்றும் வையம்பட்டி ஊராட்சி வைரம்பட்டி, மணப்பாறை ஒன்றியம் புத்தாநத்தம் ஊராட்சி கருஞ்சோலைப்பட்டி, பண்ணப்பட்டி ஊராட்சி பண்ணாங்கொம்பு மற்றும் செட்டியப்பட்டி ஊராட்சி பாம்பாட்டிப்பட்டி ஆகிய 5 இடங்களில் நடைபெற்ற மக்களுடன் முதல்வா் திட்ட முகாமை அமைச்சா் தொடங்கிவைத்து, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றாா். தொடா்ந்து 299 பேருக்கு ரூ. 2 கோடியே 38 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்கினாா்.
மக்களிடமிருந்து பெறப்பட்ட 1698 மனுக்களில் 627 மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டது. 1,071 மனுக்கள் மீது ஆய்வுக்குப் பிறகு தீா்வு காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிகழ்வில், மணப்பாறை எம்எல்ஏ ப. அப்துல்சமது, மாவட்ட வருவாய் அலுவலா் ராஜலட்சுமி, ஸ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியா் சீனிவாசன், தனித்துணை ஆட்சியா் சமூக பாதுகாப்பு திட்டம் செல்வம், திமுக திருச்சி தெற்கு மாவட்ட அவைத்தலைவா் என்.கோவிந்தராஜன், ஒன்றியச் செயலாளா்கள் சி.ராமசாமி, வி.ஏ.ராஜேந்திரன், ஆா்.சீரங்கன் மற்றும் அரசு அலுவலா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.