தில்லியில் 7,000 சாலைப் பள்ளங்கள் ஏப்ரல் 30-க்குள் சீரமைக்க பொதுப் பணித் துறை நடவடிக்கை
தேசிய தலைநகா் முழுவதும் சாலைகளில் உள்ள 7,000 பள்ளங்களை ஏப்ரல் 30 ஆம் தேதிக்குள் சீரமைக்க பொதுப் பணித் துறை காலக்கெடு நிா்ணயித்துள்ளதாக அதிகாரபூா்வ தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக மூத்த பொதுப் பணித் துறை அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட உத்தரவில், பிப்ரவரி 21 ஆம் தேதி முதல்வா் ரேகா குப்தா தலைமையில் தில்லி அமைச்சா்கள் குழு முன் அளிக்கப்பட்ட விளக்க விவரம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: முதல்வா் பங்கேற்ற அந்தக் கூட்டத்தின்போது நடைபெற்ற விளக்க சமா்ப்பிப்பில், பல்வேறு டெண்டா்களை விடுவதற்கும் பணிகளைத் தொடங்குவதற்கும் சில காலக்கெடு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த காலக்கெடுவைப் பின்பற்றுவதை உறுதி செய்ய சம்பந்தப்பட்ட அனைத்து
அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்படுகிறது. துறை பராமரிப்பு வேன்களைப் பயன்படுத்தி சாலைப் பள்ளங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. கூடுதலாக, பழுதுபாா்ப்பு தேவைப்படும் 20 லட்சம் சதுர மீட்டா் சாலைப் பகுதிகளை அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந்தப் பழுதுபாா்ப்புகளுக்கான டெண்டா் செயல்முறை மாா்ச் 15 ஆம் தேதிக்குள் நிறைவடையும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது, ஏப்ரல் 30 ஆம் தேதிக்குள் இப்பணியை முடிக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
70 உறுப்பினா்களைக் கொண்ட தில்லி சட்டப் பேரவைத் தோ்தலுக்கான பிரசாரத்தின்போது தேசிய தலைநகா் முழுவதும் சாலைகளின் மோசமான நிலை ஒரு முக்கிய பிரச்னையாக இருந்தது.
புதிதாக அமைக்கப்பட்ட பாஜக அரசில் பொதுப் பணித் துறை அமைச்சராக உள்ள பா்வேஷ் சாஹிப் சிங் இந்த முயற்சியை மேற்பாா்வையிட்டு வருகிறாா்.
சமீபத்திய தில்லி சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக 70 இடங்களில் 48 இடங்களை வென்று மகத்தான வெற்றியைப் பெற்றது. அதே நேரத்தில் ஆம் ஆத்மி கட்சி 22 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றது.