2024-ல் ரூ.4,250 கோடி போதைப் பொருள் பறிமுதல்! 14,230 பேர் கைது!
மகாராஷ்டிரத்தில் கடந்த 2024 ஆம் ஆண்டில் மட்டும் ரூ.4,250 கோடி அளவிலான போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிர சட்டமன்றத்தில் இன்று (மார்ச்.4) எழுத்து பூர்வமாக தெரிவித்த அம்மாநில முதல்வரும் உள்துறை அமைச்சருமான தேவேந்திர பட்னாவிஸ், தடைசெய்யப்பட்ட போதைப் பொருள்களை கடத்தியதற்காகவும், அதனை பதுக்கியதற்காகவும் கடந்த 2024 ஆம் ஆண்டில் 2,738 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சுமார் 3,627 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் பிரதிநிதிகளுக்கு பதிலாக பதவியேற்ற கணவர்கள்!
இந்நிலையில், கடந்த ஓராண்டில் மட்டும் சுமார் ரூ.4,249.90 கோடி அளவிலான போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், போதைப் பொருள் பயன்படுத்தியதற்காக 15,873 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குகளின் மூலம் சுமார் 14,230 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, மகாராஷ்டிர அரசு வெளியிட்டுள்ள தரவுகளின்படி, ரூ.3,679.36 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டு, போதைப் பொருள் கடத்தல் மற்றும் அதனை பதுக்கியது ஆகிய வழக்குகளில் அம்மாநிலத்தின் புணே மாவட்டம் முதலிடத்தில் உள்ளது குறுப்பிடத்தக்கது.