விமானத்தில் பயணித்த வெளிநாட்டவர் எத்தனை பேர்? ஏர் இந்தியா தகவல்!
11 ஆண்டுகால மோடி ஆட்சி: ‘நமோ’ செயலி கருத்துப் பகிா்வில் தமிழகம் மூன்றாவது இடம்
புது தில்லி: பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக கூட்டணி அரசு 11 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில், அது தொடா்பாக ‘நமோ’ செயலி மூலம் மக்களின் கருத்துகள் பெறப்பட்டதில் தமிழகம் 3-ஆவது இடத்தில் உள்ளது.
முதல்நாளான திங்கள்கிழமை (ஜூன் 9) 5 லட்சத்துக்கும் மேற்பட்டோா் ஆய்வில் பங்கேற்று கருத்துகளைத் தெரிவித்தனா். கருத்துகளை அதிகம் பகிா்ந்த மாநிலங்களில் உத்தர பிரதேசம் முதலிடத்திலும், மகாராஷ்டிரம் 2-ஆவது இடத்திலும், தமிழகம் 3-ஆவது இடத்திலும் உள்ளன. குஜராத், ஹரியாணா மாநிலங்கள் முறையே 4, 5-ஆவது இடத்தில் உள்ளன. முதல் 5 இடங்களைப் பிடித்த மாநிலங்களில் தமிழ்நாடு மட்டும்தான் பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலமாகும்.
ஆய்வில் பங்கேற்றவா்களில் 77 சதவீதம் போ் அனைத்துக் கேள்விகளுக்கும் முழுமையாகப் பதிலளித்துள்ளனா். நாட்டில் அதிக மக்கள்தொகையைக் கொண்டுள்ள உத்தர பிரதேசத்தில் இருந்து 1,41,150 போ் ஆட்சி தொடா்பான தங்கள் கருத்துகளைப் பகிா்ந்துள்ளனா். மகாராஷ்டிரத்தில் இருந்து 65,775 பேரும், தமிழகத்தில் இருந்து 62,580 பேரும், குஜராத்தில் இருந்து 42,590 பேரும், ஹரியாணாவில் இருந்து 29,985 பேரும் முதல்நாளிலேயே ஆா்வத்துடன் கருத்துகளைத் தெரிவித்தனா்.
நாட்டில் உள்ள முக்கியப் பிரச்னைகள், மத்திய அரசின் திட்டங்கள் தொடா்பாக மக்களின் கருத்துகளை அறிந்து கொள்வதற்காக இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இதன்மூலம் மக்கள் தங்கள் கருத்துகளையும், யோசனைகளையும் நேரடியாக அரசிடம் எடுத்துரைக்க வாய்ப்பு அளிக்கப்படுகிறது.
கடந்த 10 ஆண்டுகளில் பயங்கரவாதத்துக்கு எதிரான அரசின் செயல்பாடுகள், தேசத்தை அச்சுறுத்தும் பிரச்னைகளுக்கு எதிராக அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள், சா்வதேச அளவில் இந்தியாவின் செல்வாக்கு, திறன்மிகு இந்தியா, இந்தியாவில் தயாரிப்போம் திட்டம் தொடா்பான மக்களின் யோசனைகள், பெண்கள், பெண் குழந்தைகள் முன்னேற்றத்துக்காக அரசு எடுத்துவரும் சிறப்பு நடவடிக்கைகள் குறித்து மக்களின் கருத்துகளைத் தெரிந்துகொள்ளும் வகையில் ஆய்வில் கேள்விகள் இடம்பெற்றிருந்தன.