Womens World Cup: மந்தனா, பிரதிகா அதிரடியில் வீழ்ந்த நியூசிலாந்து; அரையிறுதிக்கு...
AUS v IND: முடிவுக்கு வந்த இந்தியாவின் 17 வருட வெற்றிநடை; தொடரை வென்ற ஆஸ்திரேலியா
சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியாவில் ஒருநாள் தொடரில் ஆடி வருகிறது. அக்டோபர் 19-ம் தேதி நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றிபெற்றது.
இந்த நிலையில், அடிலெய்டு மைதானத்தில் இரண்டாவது ஒருநாள் போட்டி இந்திய நேரப்படி காலை 9 மணிக்கு தொடங்கியது.
இந்தப் போட்டியில் இந்தியா தோற்றால் இந்தத் தொடரை இழப்பதோடு, அடிலெய்டில் 17 வருடமாக தோற்கவே இல்லை என்ற இந்தியாவின் சாதனையும் முடிவுக்கு வரும் என்பதால் ரசிகர்கள் ஆவலுடன் இப்போட்டியைக் காணத் தொடங்கினர்.

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் மிட்செல் மார்ஷ் பவுலிங்கைத் தேர்செய்தார்.
அதன்படி ஓப்பனிங் இறங்கிய கில், ரோஹித் கூட்டணிக்கு ஸ்டார்க், ஹேசில்வுட், சேவியர் பார்லெட் ஆகியோர் வேகப்பந்துவீச்சில் மும்முனைத் தாக்குதல் தொடுத்தனர்.
அதற்குப் பலனாக, சேவியர் பார்லெட்டின் ஒரே ஓவரில் கில் 9 ரன்னிலும், கோலி 0 ரன்னிலும் அடுத்தடுத்து அவுட்டாகினர்.
அதன்பின்னர் கைகோர்த்த ரோஹித், ஸ்ரேயஸ் இருவரும் நிதானமாக ஆடி அரைசதம் கடந்தனர்.
பார்ட்னர்ஷிப்பில் சதத்தைக் கடந்து சென்றுகொண்டிருந்த இந்தக் கூட்டணியை 30-வது ஓவரில் ரோஹித்தின் (73) விக்கெட்டின் மூலம் உடைத்தார் ஸ்டார்க்.
அடுத்த சில ஓவர்களில் 61 ரன்னில் ஸ்ரேயஸும் அவுட்டானர். ஒருபக்கம் அக்சர் படேல் நிலைத்து நின்று ஆட, மறுபக்கம் கே.எல். ராகுல் (11), வாஷிங்டன் சுந்தர் (12) வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினர்.
அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்த்த அக்சர் படேல் 45-வது ஓவரில் 44 ரன்களில் ஆடம் சாம்பா பந்தில் அவுட்டனார். அதே ஓவரில் நிதிஷ்குமார் ரெட்டியும் அவுட்டானார்.
45 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 226 ரன்களுடன் இருந்த இந்திய அணி 250 ரன்களைத் தொடுமா என்ற சூழலில் ஹர்ஷித் ராணா (24), அர்ஷ்தீப் சிங் (13) கூட்டணி 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணியின் ஸ்கோரை 264-ஆக உயர்த்தியது.

அதைத்தொடர்ந்து, 265 ரன்கள் அடித்தால் இத்தொடர் நமக்குதான் என்ற இலக்குடன் மிட்செல் மார்ஷும், டிராவிஸ் ஹெட்டும் இறங்கினர்.
இன்னிங்க்ஸை நிதானமாகத் தொடங்கிய இந்தக் கூட்டணியை 8-வது ஓவரில் அர்ஷ்தீப் சிங் மிட்செல் மார்ஷை அவுட்டாக்கிப் பிரித்தார்.
அடுத்த சில ஓவர்களில் ஹர்ஷித் ராணா பந்துவீச்சில் 28 ரன்னில் ஹெட்டும் அவுட்டாக இந்தியாவின் கை சற்று ஓங்கியது.
ஒருபக்கம் அடுத்தடுத்து மேலும் இரண்டு விக்கெட்டுகள் விழுந்தாலும் மேத்யூ ஷார்ட் நிதானமாக ஆடி ஆஸ்திரேலியாவை 150 ரன்களைக் கடக்க வைத்து தானும் அரைசதம் கடந்தார்.
பின்னர் ஒருவழியாக மேத்யூ ஷார்ட் (74) விக்கெட்டை ஹர்ஷித் ராணா எடுக்க 36 ஓவர்களில் 187-5 என்ற நிலைக்குச் சென்றது ஆஸ்திரேலியா.
ஆனால், இந்த மொமன்ட்டை இந்தியா சரியாகப் பயன்படுத்திக்கொள்வதற்குள் கூப்பர் கோனோலியும், மிட்செல் ஓவனும் 50+ பார்ட்னர்ஷிப் அமைத்து ஆஸ்திரேலியாவை வெற்றிக்கு அருகில் கொண்டு சென்றனர்.

ஆஸ்திரேலியா 250-ஐ நெருங்கிய வேளையில் 36 ரன்களில் மிட்செல் ஓவனை அவுட்டாக்கினாலும் ஆஸ்திரேலியாவின் வெற்றியை இந்திய பவுலர்களால் தடுக்க முடியவில்லை.
கூப்பர் கோனோலி அரைசதம் கடந்து 61 ரன்களுடன் நாட் அவுட் பேட்ஸ்மேனாக இறுதிவரை களத்தில் நிற்க, 47-வது ஓவரில் இலக்கை எட்டி 2 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.
ஆஸ்திரேலியா தரப்பில் 4 விக்கெட்டுகள் வீழ்த்திய ஆடம் சாம்பா ஆட்ட நாயகன் விருது வென்றார்.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட இத்தொடரை 2 - 0 என ஆஸ்திரேலியா வெல்ல, அடிலெய்டில் இந்தியாவின் 17 வருட வெற்றியடையும் முடிவுக்கு வந்தது.