இந்தியாவில் எலான் மஸ்க்கின் ‘ஸ்டார் லிங்க்’ சேவை! உரிமம் வழங்கியது மத்திய அரசு!
Bangladesh: டிசம்பருக்குள் தேர்தல்! ராஜினாமா செய்யும் யூனுஸ்; ஹசீனாவின் எதிர்காலம்..? | In Depth
ரோட்டில் நின்றுகொண்டிருந்த பஸ்களும், கார்களும் கரும் புகைகளைக் கிளப்பி எரிந்துகொண்டிருக்க, கீழே சிதறிக் கிடக்கும் கற்களில் ஆங்காங்கே ரத்தம் தோய்ந்து… காய்ந்திருக்கின்றன.
கற்களுடன் ஆங்காங்கே கட்டைகளும், பச்சை நிறத்தின் நடுவே சிவப்பு வட்டம் கொண்ட கொடிகளும் சிதறிக் கிடக்கின்றன.
கொஞ்சம் தள்ளி சென்று பார்த்தால், தரையே தெரியாததுப்போல, ஓரே இடத்தில் ஆயிரமாயிரம் மனிதத் தலைகளின் குழுமம். அந்த அத்தனை தலைகளின் வாய்களில் இருந்து விண்ணே அதிரும் வண்ணம் வந்து விழுந்து கொண்டிருக்கும் ஒற்றை வாக்கியம், ‘எங்களுக்கு நீதி வேண்டும்’.
- இது கடந்த ஆண்டு ஜூலை மாதம் வங்கதேச சாலைகள் எங்கும் காணப்பட்ட காட்சி.
1971-ம் ஆண்டு, பாகிஸ்தான் உடனான பெரிய போராட்டம் மற்றும் போருக்குப் பிறகு, வங்கதேசம் தனி நாடாக உதயமானது. இந்தப் போரின் வெற்றிக்கு நூற்றுக்கணக்கான பேரின் உயிர்த் தியாகம் மிக முக்கிய காரணம்.
அந்த உயிர்த் தியாகங்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக, அவர்களின் வாரிசுகளுக்கு, அரசு வேலைகளில் 30 சதவிகித இட ஒதுக்கீட்டை வழங்கி வந்தது வங்கதேச அரசு.
ஆனால், இந்த இட ஒதுக்கீடு மற்றவர்களின் வேலைவாய்ப்பைப் பறிக்கிறது என்ற அதிருப்தி நீண்ட காலமாகவே வங்கதேச மக்களுக்கு இருந்து வந்தது. அவ்வப்போது இதை எதிர்த்து போராட்டங்களும் நடக்கும். இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, 2018-ம் ஆண்டு இந்த இட ஒதுக்கீட்டை ரத்து செய்தது வங்கதேச அரசு.
ஆனால், இட ஒதுக்கீடு மீண்டும் வேண்டும் என்று வங்கதேச சுதந்திரப் போரில் உயிர் தியாகம் செய்தவர்களின் வாரிசுகள் நீதிமன்றத்தின் படிகளில் ஏறினர்.
இந்த வழக்கை விசாரித்த வங்கதேச உயர் நீதிமன்றமோ, மீண்டும் இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த உத்தரவிட்டது. இது வங்கதேச இளைஞர்களிடையே பெரும் அதிருப்தியை உருவாக்கியது. இட ஒதுக்கீட்டை அமல்படுத்தக் கூடாது என்று மாணவர்கள் கோரிக்கை வைக்க, நீதிமன்றத்தின் உத்தரவைக் காட்டி அதை மறுத்துவிட்டது ஷேக் ஹசீனாவின் அரசு.
இதையடுத்து, தனது ஆதரவாளர்களுக்கு ஆதரவாக ஷேக் ஹசீனா நடந்துகொள்கிறார் என்று பல்கலைக்கழகத்தில் இருந்து வெளிவந்து, வீதிகளில் இறங்கி மாணவர்கள் போராடத் தொடங்கினர்.

வங்கதேசத்தில் போராட்டம் பெரும் பரபரப்பை கிளப்ப… வங்கதேசத்தின் அப்போதைய பிரதமர் ஷேக் ஹசீனா போராட்டத்தில் ஈடுப்பட்ட மாணவர்களை, ‘ரஸாகர்’ அதாவது 1971-ம் ஆண்டு வங்கதேச விடுதலைப் போரில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்டவர்கள் என்று குறிப்பிட்டார்.
எரிகின்ற தீயில் எண்ணெயை ஊற்றியதுப் போல, இது போராட்டம் நடத்தி வந்த மாணவர்களிடையே பெரும் கொந்தளிப்பை கிளப்பியது. இருந்தும், மாணவர்கள் அமைதி வழியில் தான் போராட்டம் நடத்தி வந்தனர்.
ஆனால், வங்கதேசக் காவல்துறையும், ஆளும் அவாமி லீக் கட்சியின் (ஷேக் ஹசீனாவின் கட்சி) மாணவர் அணியும் அமைதியாக போராட்டம் நடத்தி வந்த மாணவர்களின் மீது தாக்குதலை நடத்தினர். அவர்களும் பதில் தாக்குதலில் ஈடுபட மேலே குறிப்பிட்ட காட்சி இடம்பெற்றன.
போராட்டம் மேலும் தீவிரமடையாமல் இருக்க, இன்டர்நெட் வசதியைக் கூட நிறுத்தி வைத்திருந்தது வங்கதேச அரசு.
அப்போது, இட ஒதுக்கீடு குறித்த வங்கதேச உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கில் தீர்ப்பு வந்தது. அதில், “இனி அரசு வேலைகளில் சுதந்திரப் போராட்டத்தில் உயிர் தியாகம் செய்தவர்களின் வாரிசுகளுக்கு 5 சதவிகிதம் மட்டுமே இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்” என்று கூறப்பட்டிருந்தது.
இந்தத் தீர்ப்பு வருவதற்குள், 100-க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்களை சுட்டுக் கொன்று குவித்திருந்தது ஷேக் ஹசீனாவின் ஆளும் அரசு.

வங்கதேச உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு போராட்டக்காரர்களை கொஞ்சம் ஆசுவாசப்படுத்தியது. இருந்தும், அவர்கள் மேலும் சில கோரிக்கைகளை அடுக்கினர்…
1. கைது செய்யப்பட்ட போராட்டத் தலைவர்களை விடுவிக்க வேண்டும்.
2. அமலில் உள்ள ஊரடங்கை நீக்க வேண்டும்.
3. பல்கலைக்கழகங்களை மீண்டும் திறக்க வேண்டும்.
இத்துடன், 100-க்கும் மேற்பட்டவர்களை கொன்றதை ஒப்புக்கொள்ள முடியாது. அதனால், ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டும் என்றும் கூறினர்.
இந்தக் கடைசி கோரிக்கைக்கு, வங்கதேச ராணுவத்தைக் கட்டவிழ்த்து, கடுமையான எதிர்வினையை ஆற்றினார் ஷேக் ஹசீனா. ஆனால், ஒருக்கட்டத்தில் மாணவர்களின் போராட்டத்தை தடுக்க முடியாமல்… நிறுத்த முடியாமல், கடந்த ஆகஸ்ட் மாதம், 2009-ம் ஆண்டில் இருந்து அப்போது வரை, வங்கதேசத்தின் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, கையோடு இந்தியாவிற்கு பறந்து வந்துவிட்டார்.
வங்கதேச அரசின் தரவுகளின் படி, இந்தப் போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 600+. ஆனால், இன்னும் அதிக எண்ணிக்கையைத் தாண்டும் என்று வங்கதேசத்தின் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.
வங்கதேசத்தைப் பொருளாதார ரீதியாக உயர்த்தியவர் என்று உலகப் பொருளாதார அமைப்பிடம் பெயர் வாங்கிய ஷேக் ஹசீனா, பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய, அந்தப் பதவி இடம் காலியானது.
வங்கதேச ராணுவம் வங்கதேச அரசின் தலைமை பதவியை நிரப்ப அங்குள்ள கட்சிகளிடம் கோரிக்கை வைக்க, மாணவர்கள் டிக் செய்ததோ, பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு பெற்ற வங்கதேசத்தைச் சேர்ந்த ‘முகமது யூனுஸை’. இவர் தற்போது வங்கதேசத்தின் இடைக்கால அரசின் தலைவராக தொடர்ந்து வருகிறார்.

ஷேக் ஹசீனாவிற்கு ஒரு பழக்கம் உண்டு. அவருக்கு எதிராக யாரும் பேசக்கூடாது. பேசினால் சிறையிலடைத்து விடுவார். மேலும், எதிர்க்கட்சிகளைச் செயல்படவிடமாட்டார், முடக்கிவிடுவார். இதற்கு கலீதா ஜியா நல்ல உதாரணம்.
இவர் வங்கதேசத்தின் முதல் பெண் பிரதமரும், பங்களாதேஷ் தேசியக் கட்சியின் தலைவரும் ஆவார். இவர் தான் வங்கதேசத்தின் அப்போதைய எதிர்க்கட்சி தலைவர். இவரைப் பல நாள்கள் வீட்டு சிறையில் தான் வைத்திருந்தார் ஷேக் ஹசீனா. மேலும், இவர் மீதும், இவரது கட்சியின் மீதும் ஏகப்பட்ட வழக்குகள் போட்டு தள்ளப்பட்டன.
இப்படி ஷேக் ஹசீனாவிற்கு பிடிக்காதவர்களின் நிலைமை மிகவும் கஷ்டம். இந்தப் பட்டியலில் யூனுஸின் பெயரும் அடங்கும். இவர் மீது ஷேக் ஹசீனாவின் அரசாங்கத்தால் போடப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 190+.
தலைமைப் பொறுப்பேற்றதும், யூனுஸ் மக்கள் தங்களின் முக்கிய பிரச்னைகள் என்று குறிப்பிட்டவைகளை எல்லாம், சீர்செய்ய நடவடிக்கைகளை எடுத்தார்.
ஏற்றத் தாழ்வு இல்லாத வங்கதேசம், எதிர்காலத்தில் சர்வாதிகாரம் இல்லாத வங்கதேசம் போன்ற முன்னெடுப்புகளை எடுத்த யூனுஸ், வெளிநாடுகளுடன் வங்கதேசத்திற்கு நட்புறவை ஏற்படுத்துவதில் முக்கிய கவனம் செலுத்தினார்.
வங்கதேசத்தின் அரசியலை கட்சிகள் எப்படி முடிவு செய்கிறதோ, அதே அளவிற்கான பங்கு வங்கதேசத்தின் ராணுவத்திற்கும் உண்டு.
ஆனால், தற்போது யூனுஸிற்கும், வங்கதேச ராணுவத்திற்கும் பனிப்போர் நடந்து கொண்டிருக்கின்றன. இதற்கு, கடந்த மே மாதம், வங்கதேசத்தின் ராணுவ தளபதி வேக்கர் உஸ் ஜமான், ‘இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் நாடாளுமன்றத் தேர்தலை நடத்திவிட வேண்டும்’ என்று பேசியது தான் சாட்சி.
வங்கதேசத்தில் இருந்து ஷேக் ஹசீனா இந்தியா வந்துவிட்டாலும், போராட்டம் இப்போது வங்கதேசத்தில் நடக்கவில்லை என்றாலும், இன்னமும் வங்கதேச ராணுவம் நாட்டிற்குள் தான் காவல் காத்துகொண்டிருக்கின்றன.

‘இன்னமும் வங்கதேசத்திற்குள்ளேயே ராணுவம் செயலாற்றிக் கொண்டிருந்தால், வங்கதேசத்தின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும். அரசியல் ஸ்திரத்தை வங்கதேசத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தாலேயே கொண்டு வர முடியும். அதனால், விரைவில் தேர்தல் வேண்டும்’ என்று ஜமான் பேசியுள்ளார்.
யூனுஸ் அரசு கொண்டு வர முயலும் மியான்மர் ரக்கைன் காரிடருக்கும், ‘இது வங்கதேசத்தின் பாதுகாப்பை குழைக்கும்’ என்று கடும் எதிர்ப்புகளை தெரிவித்துள்ளார்.
இப்படி, யூனுஸ் அரசு கொண்டு வர நினைக்கும்... ஆனால், இவர் எதிர்க்கும் திட்டங்களின் பட்டியல் வங்கதேசத்தின் முக்கிய துறைமுகத்தை வெளிநாடு நிர்வாகிப்பது, எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் இன்டர்நெட் சேவையை வங்கதேசத்திற்கு கொண்டு வருவது என நீள்கிறது.
யூனுஸின் அரசுக்கு வங்கதேசத்தின் ராணுவம் மட்டும் எதிர்ப்புகளை தெரிவிக்கவில்லை. வங்கதேசத்தின் முக்கிய எதிர்க்கட்சி பங்களாதேஷ் தேசியக் கட்சியும் இந்த ஆண்டு இறுதிக்குள் நாடாளுமன்ற தேர்தலை நடத்தி ஆக வேண்டும் என்று தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறது. வங்கதேசத்தின் பிற கட்சிகளின் நிலைப்பாடும் இதுவே.
யூனுஸ் இடைக்காலத் தலைவராகப் பதவியேற்றப் போது, அவருக்கு உறுதுணையாக இருப்போம் என்று கூறிய அரசியல் கட்சிகளும், அரசு நிர்வாகங்களும் தற்போது அவருக்கு எதிராகவேக் குரல் எழுப்புவது அவருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என்று வங்கதேசத்தின் செய்திதாளுக்கு அவரது ஆலோசகர்கள் பேட்டி அளித்துள்ளனர்.

மேலும், அழுத்தம் கூடிக்கொண்டிருக்கும் இந்தச் சூழலில், நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்பட்டால், அது நேர்மையானதாக நடக்க அதிக வாய்ப்பில்லை. அதனால், அப்படிப்பட்ட தேர்தல் தனது தலைமையின் கீழ் நடக்க வேண்டாம் என்று யூனுஸ் கருதுகிறார்.
பல தரப்பில் இருந்து எதிர்ப்புகளும், அழுத்தங்களும் தொடர்ந்துகொண்டே இருக்கும் நிலையில், யூனுஸ் தனது பதவியை விரைவில் ராஜினாமா செய்வார் என்று அரசியல் விமர்சகர்கள் தங்களது பார்வைகளை முன்வைக்கிறார்கள்.
நீண்ட நெடிய போராட்டத்திற்கு பிறகு, வங்கதேசத்தில் ஜனநாயகத்தை நிலைநாட்டிய ஷேக் ஹசீனாவே சர்வதிகாரியாக மாறியது வங்கதேச மக்களுக்கு வருத்தத்தையும், அதிருப்தியை அதிகப்படுத்தியது. அது இன்னும் குறையவே இல்லை.
சமீபத்தில், வங்கதேசத்தின் ரூபாய் நோட்டுகளில் இருந்த வங்கதேசத்தின் சிங்கம் என்று அழைக்கப்படும் ஷேக் முஜிபுர் உருவம் நீக்கப்பட்டுள்ளது. இவர் ஷேக் ஹசீனாவின் தந்தை ஆவார்.
வங்கதேசத்தில் இன்னமும் ஷேக் ஹசீனாவின் மீது பல குற்றங்கள் முன்வைக்கப்படுகின்றன… வழக்குகள் தொடரப்படுகின்றன. சமீபத்தில் வங்கதேசப் போர்க்குற்ற தீர்ப்பாயத்தில், மாணவர்களின் போராட்டத்தில் ஷேக் ஹசீனா மனிதம் இல்லாமல் நடந்துகொண்டதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்தக் கூற்று நிரூபிக்கப்பட்டால், ஷேக் ஹசீனாவிற்கு மரண தண்டனைக் கூட கிடைக்கலாம்.

ஷேக் ஹசீனாவின் மீது இப்போது வரை தொடரப்படும் வழக்குகள், அவரின் மேல் மக்களுக்கு உள்ள கோபம் இன்னும் குறையவில்லை என்பதைக் காட்டுகிறது.
மேலும், ஷேக் ஹசீனாவை தங்களிடம் ஒப்படைக்குமாறு இந்தியாவிடன் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருக்கிறது வங்கதேச அரசு.
ஷேக் ஹசீனா அவரது இளமை காலம், அரசியல் காலம் தொடங்கி இப்போது வரை இந்தியா உடன் நெருங்கிய உறவில் இருந்து வருகிறார்.
ஆனால், ஷேக் ஹசீனா இந்தியாவில் இருப்பதாலோ என்னவோ, யூனுஸ் பொறுப்பேற்றதில் இருந்து இந்தியாவிடம் அவ்வளவாக நல்ல உறவில் இல்லை.
இப்போது வரை, ஷேக் ஹசீனாவை ஒப்படைக்கும் எண்ணத்தில் இந்தியாவிடம் இல்லை.
மாணவர்கள் போராட்டத்தில் இருந்து உருவாகிய தேசிய குடிமக்கள் கட்சியைத் தவிர, வங்கதேசத்தை சேர்ந்த அனைத்து கட்சிகளும் தேர்தலை எதிர்பார்க்கின்றன. அதனால், இந்த ஆண்டின் இறுதிக்குள் வங்கதேசத்தில் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்பார்க்கலாம்.
கொரோனா பேரிடர், ரஷ்யா – உக்ரைன் போரால் ஜவுளித்துறை பாதிக்கப்பட்டு, ஆட்டம் கண்டுள்ள வங்கதேசத்தின் பொருளாதாரத்தை தேர்தலில் வெற்றி பெறும் கட்சி எப்படி மாற்றப்போகிறது என்பதைத் தேர்தலுக்கு பிறகு பார்க்கலாம்!
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
