திமுக மாவட்டச் செயலா்கள், நிா்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை
``ஒரு மொழியை சிறுமைப்படுத்தி, ஒரு மொழியை உயர்த்திப் பேசுவது தேவையில்லாதது!'' - நயினார் நாகேந்திரன்
புதுக்கோட்டையில் பா.ஜ.க மாவட்ட துணைத் தலைவர் முருகானந்தத்தின் இல்ல புதுமனை புகுவிழா நிகழ்ச்சி வருகின்ற எட்டாம் தேதி நடைபெற உள்ளது.
இன்று அவரது இல்லத்திற்கு பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வந்திருந்தார். அப்போது, அவருக்கு பட்டாசுகள் வெடித்தும், மேளதாளங்கள் முழங்கியும் வரவேற்பு கொடுத்தனர்.
அப்போது, பெண்களை வைத்து 100 கிலோ எடையிலான பூக்களை அவர் மீது தூவி வரவேற்றனர். அப்போது, 'பூக்களை தூவ வேண்டாம்' என்று நயினார் நாகேந்திரன் கேட்டபோதும் பூக்கள் தூவுவதை நிறுத்தாமல் பூக்களை தூவி அவருக்கு வரவேற்பு அளித்தனர்.

இதன் பின்னர், பூரண கும்ப மரியாதையை ஏற்ற நயினார் நாகேந்திரன் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
"அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்புக்குள் நாங்கள் செல்ல விரும்பவில்லை. `யார் அந்த சார்' என்ற கேள்வி ஒவ்வொருவர் மனதிலும் இருக்கிறது. ஆனால், குற்றப்பத்திரிக்கைகளை காவல்துறை சரியாக விசாரிக்கவில்லை. அது தெளிவில்லாமல் இருக்கிறது. அதை தெளிவுப்படுத்த வேண்டியது தமிழ்நாடு முதலமைச்சரின் பொறுப்பு.
போதை மருந்து நடமாட்டம்
அனைத்துக் கட்சிகளுமே ஓரணியில் வரவேண்டும். சட்டம் ஒழுங்கு பிரச்னை மோசமாக உள்ளது. தமிழ்நாட்டில் தான் நவீன வகையான போதை மருந்து நடமாட்டம் இருக்கிறது.
தி.மு.க தோல்வி பயத்தில் இருக்கிறது. தோல்வி பயத்தில் இருப்பதால்தான் எங்கள் கூட்டணியை விமர்சனம் செய்கின்றனர். அவர்கள் உறுதியாக இருந்தால் எங்கள் கூட்டணியை பற்றி பேச வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது?.

`இ.பி.எஸ் நல்ல முடிவை எடுப்பார்..'
காங்கிரஸோ, தி.மு.க-வை பற்றியோ கூட்டணி பற்றிய எந்த குறையும் நாங்கள் கூறவில்லை. அப்படி இருக்கையில் முதலமைச்சர் எங்களை பார்த்து பயந்து ஏன் குறை சொல்ல வேண்டும்? தற்போது வரை தேசிய ஜனநாயக கூட்டணியில் தினகரன், ஓ.பி.எஸ் உள்ளிட்டவர்கள் இருக்கின்றனர்.
வரக்கூடிய தேர்தலை சந்திக்க இ.பி.எஸ் உள்ளிட்டவர்களிடம் ஒருங்கிணைந்து பேசி ஒருமித்த முடிவு எடுக்கப்படும். இ.பி.எஸ் நல்ல முடிவை எடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது.
`கமல்ஹாசன் செய்தது..'
தமிழை உயர்த்தி பேசினால் நாங்கள் வரவேற்போம். ஆனால், ஒரு மொழியை சிறுமைப்படுத்தி ஒரு மொழியை உயர்த்திப் பேசினால் தேவையில்லாத விவகாரங்கள் வரும். அதை தான் கமல்ஹாசன் செய்துள்ளார்.
தமிழ் 5000 வருடத்திற்கு முன்பானது என்பதை யாரும் மறுப்பதற்கு கிடையாது. ஆனால், அதற்காக மற்றொரு மொழி சிறுமை என்று கூற முடியாது. அனைத்து மொழியுமே உயர்ந்தது. தமிழை உயர்த்தி பேசுவது தப்பில்லை. அதற்காக, மற்றொரு மொழியோடு அதை ஒப்பிட்டு பேசுவது என்பது தான் தவறு.
கமலுக்கோ, அவரது கட்சிக்கோ பா.ஜ.க ஆதரவு கிடையாது. ஆனால், தமிழுக்கு எப்போதும் ஆதரவு உண்டு. இதேபோல், அமித்ஷா சமஸ்கிருதம் மொழியில் இருந்து தான் இந்திய மொழிகள் பிறந்துள்ளது என்று கூறினாரே என்று கேட்கிறீர்கள். இந்தியா என்பது பல மொழிகள் பலதரப்பு மக்கள் வாழுகின்ற நாடு. அதனால், ஒன்றில் இருந்து தான் மற்றொன்று பிறந்தது என்ற கருத்தை நான் ஏற்கவில்லை.

`அதிரடி அரசியல் வேண்டாம்'
அண்ணாமலை மாநில தலைவராக இருந்தபோது தமிழ்நாடு அரசியல் களம் அதிரடியாக இருந்தது. தற்போது, அமைதியாக உள்ளது என்று கேட்கிறீர்கள்.
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான அணுகுமுறை உண்டு. அவர் அதிரடியான அணுகுமுறையைக் கையாண்டார். நான் அமைதியான அரசியல் செய்ய விரும்புகிறேன். அதிரடி அரசியல் வேண்டாம். உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகின்ற எட்டாம் தேதி மதுரைக்கு வருகை தர உள்ளார்.
அண்ணாமலைக்கு பிறந்த நாள் வாழ்த்து
ஒவ்வொரு நிர்வாகிகளையும் சந்தித்து பேச உள்ளார். அண்ணாமலை குடும்பத்தினருடன் சிங்கப்பூர் சென்று திரும்பி உள்ளார். தொடர்ந்து, இனி வரக்கூடிய நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்பார். அனைத்து எதிர்கட்சிகளும் தி.மு.க-வை வீழ்த்துவதற்கு ஒன்றிணைய வேண்டும்.
தி.மு.க கூட்டணிக்கு தே.மு.தி.க மற்றும் பா.ம.க-வை செல்வப்பெருந்தகை அழைத்துள்ளார். இது குறித்து அவர்கள் தான் முடிவு எடுக்க வேண்டும். பா.ஜ.க முன்னாள் தலைவர் அண்ணாமலையின் பிறந்த நாளான இன்று அவருக்கு தொலைபேசி மூலமாக வாழ்த்து தெரிவித்து விட்டேன்.

அமலாக்கத்துறை
முதலமைச்சர், பிரதமரை சந்தித்த பின்னர் அமலாக்கத்துறை உயர் அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர். குறிப்பாக, செந்தில் பாலாஜி விவகாரத்திலும், டாஸ்மார்க் விவரத்தில் அதிரடியாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் இரண்டு பேர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது பற்றி கேட்கிறீர்கள்.
அமலாக்கத்துறை என்பது தனித்துறை. மத்திய அரசுக்கும், இதற்கும் சம்பந்தம் கிடையாது. அமலாக்கத்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்பது வழக்கமான நடைமுறையில் நிர்வாக ரீதியான மாற்றமாக இருக்கும் என்றுதான் நினைக்கிறேன்.
இதுவரை தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி என்பது இல்லை. வரக்கூடிய காலங்களில் அது சாத்தியமா என்று பார்க்கலாம். ஆனால், 2026 தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும். முருகன் மாநாடு மிகப்பெரிய அளவில் அனைவரின் ஆதரவோடு நடைபெறும் என்பதில் சந்தேகம் இல்லை.
முருகன் மாநாடு குறித்து அறநிலையத்துறை அமைச்சர் கூறியது பற்றியும் கேட்கிறீர்கள். சேகர்பாபு நல்ல ஆன்மீகவாதி. சபரிமலை கோயிலுக்கு அடிக்கடி சென்று வருகிறார். ஆனால், அவர் இருக்கிற இடம் அப்பேற்பட்ட இடமாக உள்ளது. அதனால், அவ்வாறு பேசுகிறார். முருகன் மாநாட்டிற்கு மிகப்பெரிய ஆதரவு தமிழக மக்களிடையே இருக்கும்" என்றார்.