பறக்கும் ரயில் நிலையங்களை விரிவாக்கம் செய்வதற்கான சாத்தியக்கூறுகள் ஆய்வு: தெற்கு...
``அண்ணன் விஜய்க்கு இளைஞர்கள் மத்தியில் செல்வாக்கு; நான் ஒரு கட்சியில் இணைந்தால்..'' - காளியம்மாள்
சீமானின் நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகிய காளியம்மாள், அடுத்து எந்த கட்சியில் இணைவார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
தவெக கட்சியில் இணைவார் என்ற தகவல்கள் வெளியானாலும் இதுவரை அதுகுறித்து எந்த அறிவிப்பும் அவர் வெளியிடவில்லை.

இந்நிலையில் இன்று(ஜூன் 4) செய்தியாளர்களைச் சந்தித்த காளியம்மாள், " கடந்த தேர்தல்வரை, கட்சிகள் குறித்த நிலைப்பாடு, தேர்தல் கணிப்பு, வெற்றிகளை ஓரளவு அனுமானித்து சொல்லிவிட முடியும்.
ஆனால், இப்போது இருக்கும் அரசியல் சூழலில், அனுமானித்து சொல்ல முடியவில்லை. மக்களும் பாதிக்கப்பட்ட சூழலில் உள்ளதால், என்ன முடிவெடுக்க போகிறார்கள் என்று தெரியவில்லை.
அரசியல் கட்சிகளிடையே கூட்டணியும் இதுவரை முடிவாகவில்லை. அதுமட்டுமல்லாமல், நான் அரசியல் விமர்சகரும் இல்லை. நானும் மக்களில் ஒருத்திதான்.
விஜய்யின் அரசியல் வருகை இளைஞர்கள் மற்றும் பெண்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தும். இப்போதே அதனைப் பார்க்க முடிகிறது. அதேசமயம், மக்களுக்காக பிரச்சனைகளை கையிலெடுத்தால் விஜய்யால் இன்னும் பெருமளவில் பெண்கள், இளைஞர்களை ஈர்க்க முடியும்.

என்னை பொறுத்தவரை, எப்போதும் ஒரே நிலைப்பாடுதான். மக்கள் பிரச்சனைக்காக குரல் கொடுக்கக்கூடிய இடத்தில், மக்கள் பிரச்சனை தீர்க்கக்கூடிய இடத்தில் இருப்பேன். நான் ஒரு கட்சியில் இணைவதாக இருந்தால், அதை நானே முறைப்படி அறிவிப்பேன்.
அப்படி இணையும்போது எதுக்காக ஒரு கட்சியில் இணைகிறேன் என்பதற்கான காரணத்தையும் நான் சொல்ல வேண்டும். எனவே, ஒரு கட்சியில் இணைவது என்பதை ரகசியமாக செய்ய முடியாது. அனைவரையும் அழைத்து அறிவிப்பேன்" என்று கூறியிருக்கிறார்.