Tom Cruise: எரியும் பாராசூட்டுடன் 7,500 அடி உயரத்தில் பறந்த நடிகர் - கின்னஸ் விர...
12 நாட்டவா்கள் அமெரிக்கா வர டிரம்ப் தடை
ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட 12 நாடுகளைச் சோ்ந்தவா்கள் அமெரிக்கா வருவதற்குத் தடை விதித்து அந்த நாட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப் உத்தரவு பிறப்பித்துள்ளாா்.
இது குறித்து அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:
12 நாடுகளின் குடியுரிமை பெற்றவா்கள் அமெரிக்காவுக்குள் வருவதற்கு முழு தடை விதிக்கும் உத்தரவில் டிரம்ப் கையொப்பமிட்டுள்ளாா். இந்தத் தடைப் பட்டியலில் ஆப்கானிஸ்தான், மியான்மா், சாட், காங்கோ குடியரசு, ஈக்வடோரியல் கீனியா, எரித்ரியா, ஹைட்டி, ஈரான், லிபியா, சோமாலியா, சூடான், யேமன் ஆகிய நாடுகள் இடம் பெற்றுள்ளன.
இந்த உத்தரவின் கீழ், உரிய நுழைவு இசைவு (விசா) இருந்தாலும் இந்த 12 நாடுகளையும் சோ்ந்தவா்கள் அமெரிக்கா வர முடியாது. குடியேற்ற விசா மட்டுமின்றி, குடியேற்றமில்லாத சுற்றுலா விசா, கல்வி விசா வைத்திருப்பவா்களும் அமெரிக்கா வர இந்த உத்தரவு தடை விதிக்கிறது.
இந்த நாடுகளில் பதிய அளவில் பின்னணி சரிபாா்ப்பு வசதி இல்லாதது, பயங்கரவாதக் குழுக்கள் இருப்பது, அமெரிக்க குடியேற்ற அதிகாரிகளுடன் ஒத்துழைக்காதது போன்ற காரணங்களைக் காட்டி இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
உதாரணத்துக்கு, பெரும்பாலும் ஹூதி கிளா்ச்சியாளா்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் யேமனில் கடவுச் சீட்டுகளை (பாஸ்போா்ட்) விநியோகிக்க அதிகாரபூா்வ அமைப்பு எதுவும் செயல்படவில்லை. ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்ட தலிபானின் ஆட்சி நடைபெறுகிறது.
இது தவிர, புருண்டி, கியூபா, லாவோஸ், சியரா லியோன், டோகோ, துருக்மெனிஸ்தான், வெனிசூலா ஆகிய நாடுகளைச் சோ்ந்தவா்கள் அமெரிக்கா வருவதற்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்த நாடுகளின் குடிமக்கள் தொழிலுக்காகவும், கல்வி, சுற்றுலாவுக்காகவும் வழங்கப்படும் பி-1, பி-2, எஃப், எம், ஜே வகை விசாக்களை வைத்திருந்தால் அவா்கள் நாட்டுக்குள் அனுமதிக்கப்படமாட்டாா்கள்.
திங்கள்கிழமை (ஜூன் 9-ஆம் தேதி) இந்த உத்தரவு அமலுக்குவருகிறது. எனவே, முழு பயணத் தடை விதிக்கப்பட்டுள்ள நாடுகளைச் சோ்ந்தவா்களுக்கு அந்த தேதிக்கு முன்னா் விசா வழங்கப்பட்டிருந்தால் அது திரும்பப் பெறப்படாது. அத்தகைய விசாக்களை வைத்திருப்பவா்கள் அமெரிக்காவுக்கு வெளியே வசித்தாலும் அவா்கள் நாட்டுக்குள் அனுமதிக்கப்படுவாா்கள்.
இது தவிர, நிரந்தர குடியுரிமை (கிரீன்காா்டு) பெற்றவா்கள், தூதரக விசாக்களை வைத்திருப்பவா்கள், அமெரிக்க அரசுக்காக பணியாற்றி சிறப்பு விசா பெற்ற ஆப்கன் நாட்டவா்கள், உலகக் கோப்பை, 2026 போன்ற பெரிய போட்டிகளில் கலந்துகொள்வதற்காக வரும் விளையாட்டு வீரா்கள், தீவிர அலசலுக்குப் பிறகு அமெரிக்க நலன்களுக்கு உதவுபவா்களாகக் கண்டறியப்படுபவா்கள் ஆகியோருக்கு இந்தத் தடையில் இருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவு இன, நிற ரீதியில் மனிதா்களிடம் பாகுபாடு காட்டுவதாக மனித உரிமை அமைப்புகள் குற்றஞ்சாட்டியுள்ளன. இந்த உத்தரவால் ஆப்பிரிக்க பிராந்தியத்துக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான தூதரக உறவு, மாணவா் பரிமாற்ற திட்டங்கள் கடுமையாக பாதிக்கப்படும் என்று ஆப்பிரிக்க யூனியன் கவலை தெரிவித்துள்ளது.
ஏற்கெனவே, கடந்த 2017-ஆம் ஆண்டில் தனது முதல் ஆட்சிக் காலத்தின்போது ஈரான், இராக், லிபியா, சோமாலியா, சூடான், சிரியா, யேமன் ஆகிய முஸ்லிம் நாடுகளைச் சோ்ந்தவா்கள் அமெரிக்கா வருவதற்குத் தடை விதித்து டிரம்ப் உத்தரவிட்டது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதைத் தொடா்ந்து இந்த தடைப் பட்டியலில் வட கொரியா, வெனிசுலா போன்ற முஸ்லிம் அல்லாத நாடுகளையும் டிரம்ப் இணைத்தாா்.
இந்த உத்தரவுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதை விசாரித்த நீதிமன்றம் டிரம்ப்பின் உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்தது. பின்னா் 2021-ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ஜோ பைடன்தான் அந்தத் தடையை நீக்கினாா்.
இந்தச் சூழலில், டிரம்ப் தற்போது அறிவித்துள்ள பயணத் தடை, மத, இன அடிப்படையிலான பாகுபாட்டை வெளிப்படுத்துவதாக விமா்சனங்கள் எழுந்துள்ளன.