பொதுவெளியில் வெடிக்கும் எலான் மஸ்க் - டிரம்ப் கருத்து மோதல்!
அமெரிக்க அரசின் செயல்திறன் மேம்பாட்டுத் துறை (டிஓஜிஇ) தலைவராக இருந்த தொழிலதிபர் எலான் மஸ்க், கருத்து வேறுபாடு காரணமாக, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நிர்வாகத்திலிருந்து விலகிய நிலையில், இருவருக்கும் இடையேயான கருத்து மோதல் தற்போது பொது வெளியில் வெடித்துள்ளது.
2024ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட தற்போதைய அதிபர் டிரம்ப்புக்கு ஆதரவாக தீவிர பிரசாரம் மேற்கொண்டதோடு, அக்கட்சிக்கு நன்கொடையாளராகவும் இருந்தார் எலான் மஸ்க்.
தேர்தலில் வெற்றி பெற்ற டிரம்ப், அதற்கு கைம்மாறாக, அமெரிக்க அரசின் செயல்திறன் மேம்பாட்டுத் துறையை உருவாக்கி அதற்கு மஸ்க்கை தலைவராக்கி அழகுபார்த்தார்.
அதன்பிறகு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எடுத்த அதிரடி முடிவுகள், அறிவிப்புகளை உலகமே அறிந்திருந்தது.
அமெரிக்காவில், தொழிலதிபர் எலான் மஸ்க், அதிபர் டொனால்ட் டிரம்ப், இடையே இருந்த ஒரே லட்சியம் அவர்களிடையே நட்பை ஏற்படுத்தி, நவநாகரீக அமெரிக்க வரலாற்றில், மிகவும் விநோதமான, அரசியல் கூட்டணியாக மாறி, பிறகு கருத்து வேறுபாடுகளால் முரண்பட்டு முடிவுக்கு வந்து, இன்று பொது வெளியில் சண்டையிடும் அளவுக்கு முற்றிவிட்டது.
அமெரிக்க அரசு கொண்டு வந்த வரி மற்றும் செலவு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தபோது, இந்த பிரச்னை தொடங்கியது. அமெரிக்க நிர்வாகத்திலிருந்து எலான் மஸ்க் விலகினார்.
அண்மையில், எலான் மஸ்க் குறித்து டிரம்ப் கூறுகையில், அமெரிக்காவின் பட்ஜெட்டில் பல பில்லியன் டாலர்களை மிச்சப்படுத்துவதற்கான எளிதாக வழி உள்ளது, எலான் நிறுவனத்துக்கு வழங்கப்படும் மானியங்கள் மற்றும் அந்நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களை நிறுத்துவதுதான். ஏற்கனவே இருந்த பைடன் அரசே இதைச் செய்யாதது எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது என்று தெரிவித்திருந்தார்.
இதற்கு எலான் மஸ்க் சும்மா இருப்பாரா, என்ன? எனது அரசு ஒப்பந்தங்களை ரத்து செய்வதாக அதிபர் கூறியிருக்கிறார். இதனால் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் அதன் மனிதர்களை விண்வெளிக்குக் கொண்டு செல்லும் டிராகன் விண்கலத் தயாரிப்பை உடனடியாக நிறுத்தும் என்று பதிவிட்டு பதிலடி கொடுத்திருந்தார்.
இந்தப் பதிவுக்கு பலரும் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்ததைத் தொடர்ந்து, நல்ல அட்வைஸ்தான். சரி நாங்கள் டிராகனை நிறுத்தவில்லை என்று பதிவிட்டிருந்தார் எலான் மஸ்க்.
இன்னும் இந்தப் பிரச்னை தீரவில்லை. அடுத்தடுத்து எக்ஸ் பதிவுகள் மூலம், டொனால்ட் டிரம்ப்புக்கு அதிர்ச்சி கொடுத்தார் எலான் மஸ்க். அதாவது, பாலியல் குற்றத்தில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டஜெஃப்ரி எப்ஸ்டைன் தொடர்பாக வெளியிடப்படாத ஆவணங்களில் டிரம்ப் பெயர் குறிப்பிடப்பட்டிருந்ததாக நேரடியாக குற்றம்சாட்டியபோது நிலைமை மிகவும் மோசமடைந்தது.
Time to drop the really big bomb:@realDonaldTrump is in the Epstein files. That is the real reason they have not been made public.
— Elon Musk (@elonmusk) June 5, 2025
Have a nice day, DJT!
எப்ஸ்டைன் ஆவணங்களில் டொனால்ட் டிரம்ப் பெயர் இருந்தது. அதனால்தான் அது பொது வெளியில் வெளியிடப்படவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார் எலான் மஸ்க்.
இதனை வெள்ளை மாளிகை, மிக துரதிருஷ்டவசமான சம்பவம் என்று விமர்சித்திருக்கிறது. ஏற்கனவே, பாலியல் குற்றவாளி எப்ஸ்டைனை தனக்குத் தெரியும் என்றும், ஆனால் அதெல்லாம் பல ஆண்டுகளுக்கு முன்பு என்று டொனால்ட் டிரம்ப் கூறியிருந்தார்.
The Trump tariffs will cause a recession in the second half of this year https://t.co/rbBC11iynE
— Elon Musk (@elonmusk) June 5, 2025
இந்த நிலையில், டிரம்ப் கொண்டு வந்திருக்கும் புதிய வரி மசோதாவால், நாட்டில், நிதியாண்டின் இரண்டாவது பாதியில் மிகப்பெரிய மந்தநிலை ஏற்படும் என்றும் எலான் மஸ்க் எச்சரித்துள்ளார். தொடர்ந்து, கருத்து மோதல் வெடித்து வருகிறது.