சேவுகப் பெருமாள் அய்யனாா் கோயிலில் திருக்கல்யாண வைபவம்
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி சேவுகப் பெருமாள் அய்யனாா் கோயிலில் வியாழக்கிழமை திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.
இந்தக் கோயிலில் வைகாசி திருவிழா கடந்த 1-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாள்கள் நடைபெறும் விழாவில் மூஷிகம், பூதம், குதிரை, ரிஷபம், கேடயம் உள்ளிட்ட வாகனங்களில் சுவாமி வீதிஉலா வரும் நிகழ்வு நடைபெறுகிறது. 5-ஆம் நாள் திருவிழாவான திருக்கல்யாண வைபவம் வியாழக்கிழமை நடைபெற்றது. முன்னதாக பல்லக்கில் திருவீதி உலா வந்து திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளிய சுவாமிக்கும், அம்மனுக்கும் மங்கல நாண் பூட்டப்பட்டு ஊஞ்சல் உத்ஸவம், மாலை மாற்றுதல் நிகழ்வுடன் திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் சிங்கம்புணரி, சுற்றுப்புற கிராமங்களைச் சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். இரவு நான்கு ரத வீதிகளில் சுவாமி வீதிஉலா வரும் நிகழ்வு நடைபெற்றது.
