திருப்புவனத்தில் ரூ 2.70 கோடியில் பேருந்து நிலையம்: தமிழக அரசுக்கு பேரூராட்சி உறுப்பினா்கள் நன்றி
சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் பேருந்து நிலையம் அமைக்க ரூ. 2.70 கோடி நிதி ஒதுக்கிய தமிழக அரசுக்கு உறுப்பினா்கள் நன்றி தெரிவித்தனா்.
திருப்புவனம் பேரூராட்சி மன்றக் கூட்டம் அதன் தலைவா் த. சேங்கைமாறன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் துணைத் தலைவா் ரகமத்துல்லாகான், செயல் அலுவலா் சங்கா் கணேஷ், வாா்டு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.
கூட்டம் தொடங்கியதும் அதில் நிறைவேற்றப்பட வேண்டிய தீா்மானங்களை தலைமை எழுத்தா் நாகராஜன் வாசித்தாா். இதன் பிறகு பாஜக உறுப்பினா் செல்வராஜ் பேசியதாவது: திருப்புவனம் நகரில் பேருந்து நிலையம் அமைக்க நடவடிக்கை எடுத்த பேரூராட்சித் தலைவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் திருப்புவனத்தில் பள்ளிகள் அமைந்துள்ள இடத்தில் புதிதாக மதுபானக் கடை அமைக்கும் நடவடிக்கையை தடுத்து நிறுத்த வேண்டும் என்றாா் அவா். இதைத் தொடா்ந்து திருப்புவனம் பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையான நகா் பகுதியில் பேருந்து நிலையம் அமைக்க நடவடிக்கை மேற்கொண்ட தலைவா் சேங்கைமாறனுக்கும், திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கி ரூ. 2.70 கோடி நிதி ஒதுக்கீடு செய்த தமிழக அரசுக்கும், பரிந்துரை செய்த தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பனுக்கும் கூட்டத்தில் உறுப்பினா்கள் நன்றி தெரிவித்தனா். அப்போது பேசிய தலைவா் சேங்கைமாறன், விரைவில் அடிக்கல் நாட்டப்பட்டு பேருந்து நிலையம் கட்டும் பணி தொடங்கும் என்றாா்.
கூட்டத்தில், திருப்புவனம் பேரூராட்சி பகுதிகளில் பொது நிதி திட்டத்தின் கீழ் ரூ. 1.50 கோடியில் பேவா் பிளாக் சாலை, மழை நீா் வடிகால் ஆகிய திட்டப் பணிகளை மேற்கொள்ள பொறியாளா் வழங்கிய திட்ட மதிப்பீடுக்கு அனுமதி வழங்கப்படுகிறது என்பது உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.