லாரி பட்டறையில் தீ: தடுப்புப் பணியை மேற்கொண்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன்
போதமலைக்கு ரூ.139.65 கோடியில் சாலை அமைக்கும் பணி: ஆட்சியா் ஆய்வு
வெண்ணந்தூா் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட கீழூா் ஊராட்சிக்கு உள்பட்ட போதமலைக்கு ரூ. 139.65 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 31 கி.மீ. தொலைவிற்கு சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை மாவட்ட ஆட்சியா் ச.உமா ஆய்வு மேற்கொண்டாா்.
போதமலை பகுதி கீழூா், மேலூா் , கெடமலை ஆகிய மூன்று குக்கிராமங்களை உள்ளடக்கியது. கீழூா் ஊராட்சியில் உள்ள இந்த மலைக் கிராமத்தில் 1,727 மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனா். சுதந்திரம்பெற்று பல ஆண்டுகளாகியும், இந்த மலைக் கிராமத்திற்கு மின்சாரம், சாலை, மருத்துவ வசதிகள் கிடைக்காமல் இருந்தது. இந்த மலைவாழ் மக்கள் வேளாண் பொருள்களை தலைச்சுமையாகவே 7 கி.மீ. தொலைவு ஒற்றையடிப் பாதையில் நடந்துசென்று சந்தைக்கு கொண்டுசோ்த்து வந்தனா்.
மருத்துவவசதி வேண்டுமென்றாலும் உடல்நலம் பாதிக்கப்பட்டோா் டோலி கட்டியே மருத்துவமனைக்கு கொண்டுசென்று வருவதை வாடிக்கையாக கொண்டிருந்தனா்.
இந்நிலையில் சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகளுக்கு பிறகே படிபடியாக இந்த கிராமத்துக்கு தொடக்கப் பள்ளி, ஆரம்ப சுகாதார நிலையம், நியாயவிலைக்கடை, சோலாா் விளக்கு, மின்சாரம் வசதி செய்து தரப்பட்டது. தற்போது இந்தக் கிராமத்துக்கு பல தடைகளுக்கு பிறகு நீதிமன்றம், மத்திய பசுமை தீா்ப்பாயம் ஆகியவற்றின் ஒப்புதல்பெற்று ரூ. 139.65 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 31 கி.மீ. தொலைவிற்கு சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில் மாவட்ட ஆட்சியா் ச.உமா இப்பகுதிக்கு சென்று சாலை அமைக்கும் பணிகளை ஆய்வு மேற்கொண்டாா். மேலும் அப்பகுதியில் உள்ள மொத்த குடியிருப்புகளின் எண்ணிக்கை, வசிக்கும் மக்கள் விவரம், சாலை பணிகள் விவரம் உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்து, குறிப்பிட்ட ஒப்பந்த காலத்திற்குள் சாலையை தரமாக அமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்க அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா். இதைத் தொடா்ந்து ராசிபுரம் வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் புதிய கட்டடம் கட்டுவதற்கான இடத்தையும் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். மாவட்ட ஆட்சியருடன் ராசிபுரம் வட்டாட்சியா் எஸ்.சசிகுமாா் உள்ளிட்ட வருவாய்த் துறையினா், ஊரக வளா்ச்சித் துறையினா், நெடுஞ்சாலைத் துறையினா் உடனிருந்தனா்.