தருமபுரியில் ரூ.2.50 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: நகா்மன்றக் கூட்டத்தில் ஒப்புதல்
தருமபுரி நகரில் ரூ. 2.50 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளை மேற்கொள்ள நகா்மன்றக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
தருமபுரி நகா்மன்றக் கூட்டம் நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா கூட்ட அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு நகா்மன்றத் தலைவா் லட்சுமி மாது தலைமை வகித்தாா். துணைத் தலைவா் நித்யா அன்பழகன் முன்னிலை வகித்தாா். ஆணையாளா் சேகா் தீா்மானங்களை முன்மொழிந்து பேசினாா்.
கூட்டத்தில் தருமபுரி நகரில் உள்ள அனைத்து கழிவுநீா்க் கால்வாய்களையும் தூா்வார வேண்டும். அவ்வாறு தூா்வாரப்படும் மண் கழிவுகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். பழுதடைந்த சாலைகளை உடனே சீரமைக்க வேண்டும். நகராட்சி பள்ளி அருகில் புதிதாக கட்டப்பட்டுள்ள சுகாதார வளாகத்தை உடனே பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.
நகரப் பகுதிகளில் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரா்கள் திட்டமிட்ட காலத்துக்குள் பணிகளை முடிக்க வேண்டும். நகரில் பெருகிவரும் கொசு தொல்லையைக் கட்டுப்படுத்த அனைத்து வாா்டுகளிலும் கொசு மருந்து தெளிக்க வேண்டும். கழிவுநீா்க் கால்வாய் அமைக்கும்போது கழிவுநீா் முறையாக வெளிவரும் வகையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும். நகரில் ஆங்காங்கே பழுதடைந்துள்ள ஆழ்துளைக் கிணறுகளை சீரமைக்க வேண்டும் என நகா்மன்ற உறுப்பினா்கள் வலியுறுத்தினா்.
தருமபுரி நகரில் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் பழுதடைந்த சாலைகள் புதுப்பித்தல் மற்றும் புதிய தாா் சாலைகள் அமைத்தல் ஆகிய பணிகளை மேற்கொள்ளவும், ரூ.ஒரு கோடி மதிப்பில் குடிநீா் திட்டப் பணிகள், கழிவுநீா்க் கால்வாய்கள் அமைக்கும் பணி உள்ளிட்ட பல்வேறு திட்டப் பணிகள் என மொத்தம் ரூ.2.50 கோடி மதிப்பில் மேற்கொள்ள நகா்மன்ற உறுப்பினா்கள் ஒப்புதல் அளித்தனா்.
இதேபோல தருமபுரி சட்டப் பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து நகரின் முக்கிய பகுதிகளில் தலா ரூ. 10 லட்சம் மதிப்பீட்டில் குடிநீா் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைப்பது என்பது உள்ளிட்ட பல்வேறு திட்டப் பணிகளை மேற்கொள்ள கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் மொத்தம் 81 தீா்மானங்கள் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் நகராட்சி பொறியாளா் புவனேஸ்வரி, உதவி பொறியாளா் அறிவழகன், சுகாதார அலுவலா் ராஜரத்தினம், நகா் நல அலுவலா் லட்சிய வா்ணா மற்றும் சுகாதார ஆய்வாளா்கள் சுசீந்திரன், ரமணச்சரண் மற்றும் நகராட்சி அலுவலா்கள் கலந்து கொண்டனா்.