விதை நெல்லை கூடுதல் விலைக்கு விற்போா் மீது கடும் நடவடிக்கை: துணை இயக்குநா் எச்ச...
இந்தியா - பாகிஸ்தான் போரை டிரம்ப்தான் நிறுத்தினார்: புதினின் உதவியாளர்
இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போர் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் பேச்சுவார்தையினால் நிறுத்தப்பட்டதாக ரஷிய அதிபர் புதினின் உதவியாளர் யுரி உஷாகோவ் தெரிவித்துள்ளார்.
ரஷியா - உக்ரைன் மோதல் குறித்து ரஷிய அதிபர் விளாதிமிர் புதனுடன் டொனால்ட் டிரம்ப் கடந்த ஜூன் 4 ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்தினர்.
இரு நாட்டுத் தலைவர்களும் பேசிய விவகாரங்கள் குறித்து புதினின் உதவியாளர் யுரி உஷாகோவ் விளக்கமளித்தார்.
அப்போது, "இரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையிலான தொலைபேசி உரையாடல் சுமார் 70 நிமிடங்கள் நீடித்தது. ரஷியா - உக்ரைன் மோதலில் தொடங்கியது இந்த உரையாடல். பேச்சுவார்த்தையை முறியடிக்க உக்ரைன் முயற்சித்து வருகிறது.
அப்போது மத்திய கிழக்கு நாடுகள் குறித்தும் இரு நாட்டுத் தலைவர்களும் பேசினர். அடுத்து இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் குறித்தும் பேசப்பட்டது. அதிபர் டிரம்பின் தனிப்பட்ட தலையீட்டால் இந்த போர் நிறுத்தப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.
முன்னதாக, பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்திய ராணுவம், பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்கள் மீது கடந்த மே 7 அன்று 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையை மேற்கொண்டது. ஜம்மு-காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவமும் தாக்குதலை மேற்கொண்டது.
மே 10 ஆம் தேதி இரு நாடுகளும் போரை நிறுத்துவதாக அதிபர் டிரம்ப் அறிவித்தார். அதன்படியே இரு நாடுகளும் போரை நிறுத்துவதாக தனித்தனியே அறிவித்தன.
பாகிஸ்தானுடனான போரை நிறுத்தியதால் மூன்றாம் நபரின் தலையீடு இல்லை என்று இந்தியா தொடர்ந்து மறுத்து வருகிறது. அதேநேரத்தில் போரை நிறுத்தியதற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு பாகிஸ்தான் பிரதமர் நன்றி தெரிவித்து வருகிறார்.
இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக பல்வேறு சந்தர்ப்பங்களில் டிரம்ப் தொடர்ந்து கூறி வரும் நிலையில் மத்திய அரசு தரப்பிடம் இருந்து எந்த பதிலும் இல்லை என காங்கிரஸ் கட்சியும் இதுதொடர்பாக தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறது.
இந்நிலையில் டிரம்ப்பைத் தொடர்ந்து ரஷிய அதிபர் புதினின் உதவியாளரும் இவ்வாறு கூறியுள்ளது சர்ச்சையை மேலும் வலுப்படுத்தியுள்ளது.