BCCI : இந்திய அணியின் பயிற்சியாளர்கள் குழு கூண்டோடு நீக்கம்? - பின்னணி என்ன?
'பிசிசிஐ அதிரடி!'
இந்திய அணியின் பயிற்சியாளர் குழுவிலிருந்து சில முக்கியமான நபர்களை பிசிசிஐ நீக்கவிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
கடந்த ஓராண்டில் இந்திய அணி நிறைய மோசமான தோல்விகளை தழுவியிருந்தது. சமீபத்தில் இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபியை வென்றிருந்தாலும், அதற்கு முன்பு இந்திய அணி அடைந்த மோசமான தோல்விகள் பிசிசிஐக்கு கொஞ்சம் உறுத்தலாகவே இருந்து வந்தது. உள்ளூரில் பல ஆண்டுகள் கழித்து நியூசிலாந்துக்கு எதிராக இந்திய அணி ஒயிட் வாஷ் அவுட் ஆனது.
அதற்கடுத்து ஆஸ்திரேலியா சென்று பார்டர் கவாஸ்கர் தொடரையும் 1-3 என இழந்தது. இந்திய அணியின் பேட்டிங் கடும் மோசமாக இருந்தது. இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவே தன்னைத் தானே ஒரு போட்டியில் டிராப் செய்திருந்தார். அந்தளவுக்கு நிலைமை மோசமாக சென்றது. பார்டர் கவாஸ்கர் தொடர் முடிந்தவுடனேயே அணியின் பயிற்சியாளர் கம்பீர் மற்றும் கேப்டன் ரோஹித் சர்மாவுடன் பிசிசிஐ தீவிர ஆலோசனைகளை மேற்கொண்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து இந்திய அணிக்காக ஆடும் வீரர்களும் கட்டாயமாக உள்ளூர் போட்டிகளில் ஆடியாக வேண்டும். அதேமாதிரி வீரர்கள் தங்களின் குடும்பத்தினரை குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டுமே உடன் அழைத்து செல்ல வேண்டும் என்பது போன்ற கட்டுப்பாடுகளை விதித்தனர்.
இந்நிலையில்தான் இந்திய அணியின் பயிற்சியாளர் குழுவை சேர்ந்த பேட்டிங் பயிற்சியாளர் அபிஷேக் நாயர், பீல்டிங் பயிற்சியாளர் திலீப் குமார், உடற்தகுதி மேம்பாட்டு பயிற்சியாளர் சோஹம் தேசாய் ஆகியோரை அவர்களின் பொறுப்பிலிருந்து பிசிசிஐ நீக்கியிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

அபிஷேக் நாயர் அணிக்குள் வந்தே 8 மாதங்கள்தான் ஆகிறது. அவரை அணிக்குள் கொண்டு வந்ததே தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இதைப்பற்றி பிசிசிஐ விரைவிலேயே அதிகாரப்பூர்வமாக செய்தி வெளியிடும் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது அதற்கான காரணங்களும் சொல்லப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.!