கோலியைப் பின்னுக்குத் தள்ளிய 21-ம் நூற்றாண்டின் அதிவேக வீராங்கனை; 37 வருட சாதனைய...
Bihar: தொகுதி பங்கீடு சிக்கல் டு முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி வரை - பீகார் தேர்தல் அப்டேட்ஸ்!
பீகார் தேர்தல்:
பீகார் சட்டமன்றத் தேர்தல் அடுத்த மாதம் இரண்டு கட்டங்களாக நடைபெறவிருக்கிறது. முதற்கட்டத் தேர்தல் நவம்பர் 06-ம் தேதியும், இரண்டாம் கட்டத் தேர்தல் நவம்பர் 11-ம் தேதியும் நடைபெறும். வாக்கு எண்ணிக்கை நவம்பர் 14-ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.
எனவே, இந்த தேர்தலுக்கான தொகுதி பங்கீடு முதல் வேட்பாளர் தேர்வு வரை தேர்தல் களம் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது.
NDA கூட்டணி
243 தொகுதிகளுக்கான தேர்தலில், என்.டி.ஏ கூட்டணி தொகுதி பங்கீடுகளை இறுதி செய்திருக்கிறது. பீகார் தேர்தல் வரலாற்றில் முதல்முறையாக பா.ஜ.க, மாநிலத்தின் ஆளும் கட்சியான நிதிஷ் குமாரின் ஜே.டி.(யு)-வுக்கு நிகராக 101 இடங்களில் போட்டியிடுகிறது.

சிராக் பஸ்வானின் லோக் ஜனசக்தி 29 இடங்களிலும், உபேந்திர குஷ்வாகா தலைமையிலான ராஷ்டிரிய லோக் மோர்ச்சா, ஜிதன் ராம் மஞ்சி தலைமையிலான இந்துசுதானி அவாம் மோர்ச்சா தலா 6 இடங்களிலும் போட்டியிடுகின்றன.
மகாபந்தன் கூட்டணி
மகாபந்தன் கூட்டணியில் 143 இடங்களில் தேஜஸ்வி யாதவ்-ன் ஆர்ஜேடி-யும், காங்கிரஸ் 61 இடங்களிலும், மீதமுள்ள தொகுதிகளில் சிபிஎம் கட்சிகளும், முகேஷ் சஹானியின் விகாஷீல் இன்சான் கட்சியும் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், இந்தக் கூட்டணியில் தொகுதிப் பங்கீடு முடிவு இறுதியாகவில்லை. எனவே, சுமார் 10 தொகுதிகளில் மகாபந்தன் கூட்டணிக் கட்சிகள் ஒன்றுக்கும் மேற்பட்ட வேட்பாளர்களை நிறுத்தியிருந்தன. அதனால் கூட்டணிக் குழப்பம் நீடித்தது.
கூட்டணி சிக்கல்
இதற்கிடையில், மூத்த காங்கிரஸ் தலைவரும் ராஜஸ்தான் முன்னாள் முதல்வருமான அசோக் கெலாட் நேற்று (22-ம் தேதி) பாட்னாவில் மகாபந்தன் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களைச் சந்தித்து மத்தியஸ்தம் செய்தார்.
ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத், அவரது மகன் தேஜஸ்வி யாதவ் ஆகியோரையும் சந்தித்தார். மேலும், ஆர்.ஜே.டி போட்டியிடும் தொகுதிகளில் மகாபந்தன் கூட்டணிக் கட்சிகள் வேட்பாளர்களை வாபஸ் வாங்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டதாகவும் தகவல் வெளியானது.

காங்கிரஸ் முடிவு
மகாபந்தன் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களைச் சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் தலைவர் அசோக் கெலாட், ``கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் நல்ல முறையில் ஆலோசனை நடத்தப்பட்டது.
நாங்கள் விரிவான கலந்துரையாடலை நடத்தினோம். மாபெரும் கட்சிகள் இணையும் ஒரு கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டில் சில சிக்கல்கள் எழுவது சாதாரணமானது.
23-ம் தேதி (இன்று) ஒரு கூட்டு செய்தியாளர் சந்திப்பில் எல்லாம் தெளிவுபடுத்தப்படும். மகாபந்தன் கூட்டணியில் எந்த சர்ச்சைகளும் இல்லை." என்றார்.
முதல்வர் வேட்பாளர்
இதற்கிடையில், மகாபந்தன் கூட்டணியில் பீகாரின் முதல்வர் வேட்பாளராக யாரை முன்னிறுத்துவது என்றக் கேள்வியும் எழுந்திருக்கிறது.
அதற்கு முதல்வர் வேட்பாளராக ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவர் தேஜஸ்வி யாதவ் போட்டியிட வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டத்தில் பேசப்பட்டது.

மேலும், தேஜஸ்வி யாதவ்-ன் தலைமையை ஆதரிக்க மகாகத்பந்தனின் அனைத்து தொகுதி உறுப்பினர்களும் ஒப்புக் கொண்டுள்ளதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில், பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கான மகாகத்பந்தனின் முதல்வர் வேட்பாளராக ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் முதல்வர் வேட்பாளராகவும், விகாஷீல் இன்சான் கட்சித் தலைவர் முகேஷ் சஹானி துணை முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.