Bison: ``தோல்வியடைந்துவிட்டால் ஊருக்கு வரமாட்டேன் எனச் சொன்னேன்!" - வைரலாகும் ரா...
Diwali : காட்டன் டிரெஸ் தீப்பிடிக்கும்; ஆனால், பட்டாசு வெடிக்கையில் அதையே உடுத்த வேண்டும் - ஏன்?
நாளை தீபாவளி என்பதாலேயே இரவெல்லாம் தூங்காமல் கனவு கண்டு, அலாரம் இல்லாமலேயே காலையில் எழுந்து, குளித்து புத்தாடைகளெல்லாம் அணிந்து, நேராக நாம் போகும் இடம் எங்கே..?
வீட்டு வாசலுக்குத்தான். இந்த தீபாவளிக்கென்றே எக்ஸ்குளூசிவ் ஆக வாங்கிய பட்டாசுகளை வெடிக்க வேண்டாமா..? அதே நேரம், ஆசையாக வாங்கிய பட்டாசுகளை கவனமாக வெடிக்கவில்லை என்றால் ஆபத்தில் முடியக்கூடும்.

ஏன் பட்டாசு வெடிக்கும்போது காட்டன் உடை உடுத்த வேண்டும் என, சேலத்தில் உள்ள இந்திய கைத்தறி தொழில்நுட்ப கழகத்தில் கைத்தறி தொழில்நுட்பம் மற்றும் துகிலியல் துறையில் (Handloom and Textile Technology) பணியாற்றி வரும் பேராசிரியர் முனைவர் த.கோபி கண்ணன் சொல்வதைக் கேளுங்கள்!
''பொதுவாகவே தீபாவளிக்கு விலையுயர்ந்த, ஆடம்பரமான, அதிக வேலைப்பாடுகள் நிறைந்த ஆடைகள் உடுத்துபவர்கள் உண்டு. அதில் தவறில்லை. ஆனால், பட்டாசு வெடிக்கும்போது உடலில் தீக்காயங்கள் ஏற்படுவதைத் தடுக்க உகந்த துணி, நம் எல்லாருக்கும் தெரிந்த காட்டன் எனப்படும் பருத்திதான். காட்டன் உடைகளும் எளிதாக தீ பற்றி எரியக்கூடியதே என்றாலும் அதை அணிவதே பாதுகாப்பு.

எடுத்துக்காட்டாக, தீபாவளி அன்று ஒருவர் காட்டன் உடை அணிந்தும், மற்றொருவர் synthetic fabric வகையில் ஒன்றான பாலியஸ்டர் உடையை அணிந்துகொண்டு பட்டாசுகளை வெடிக்கிறாரென்று வைத்துக்கொள்வோம். இவை இரண்டில், காட்டன்தான் விரைவாக தீ பிடிக்கக்கூடியது. ஆனால், காட்டன் டிரெஸ்ஸில் தீப்பிடித்து பரவும் நேரத்திற்குள் பாலியஸ்டர் உருக தொடங்கிவிடும்.
காட்டன் அணிந்திருப்பவரின் உடையில் தீப்பிடிக்க தொடங்கியவுடன் தீ உடையில் பரவி பிறகுதான் தோலைத் தொடும். ஆனால், பாலியஸ்டர் அணிந்திருப்பவருக்கு அப்படி அல்ல. அந்தத் துணி ஒரு மெழுகு போல் உருகி தோலின் மீது படிந்து கொப்பளங்களை உருவாக்கும். தோலை உரிக்கக்கூடும். அதனால், காட்டனைக் காட்டிலும் பாலியஸ்டர் ஏற்படுத்தும் பாதிப்புகள் அதிகம். பட்டும் இயற்கையில் இருந்து கிடைக்கும் இழைதான். பட்டாடையையும் பட்டாசு வெடிக்கும்போது உடுத்தலாம். ஆனால், அதைவிட காட்டன் உடுத்துவதே சிறந்தது'' என்கிறார்.
பட்டாசால் தீக்காயம் ஏற்பட்டுவிட்டால் என்ன செய்வது என, சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் பிளாஸ்டிக் சர்ஜரி துறையில் பணியாற்றி வரும் மருத்துவர் ஐஸ்வர்யா கூறுவதையும் கேளுங்கள்.

ஆண்டுதோறும் தீபாவளி அன்றைக்கு நிறைய மக்களுக்கு தீக்காயங்கள் ஏற்படுகின்றன. மக்கள் சற்று விழிப்புணர்வோடு இருந்தால், இதைத் தடுக்கலாம். பெரும்பாலும் சேலையின் முந்தானை, துப்பட்டா, வேட்டி போன்றவற்றில் தீ பிடிப்பதுதான் அதிகமாக இருக்கிறது. அதிலும் பாலியஸ்டர் உடை அணிவதால் ஏற்படும் தீக்காயங்கள்தான் அதிகம். சின்ன பிள்ளைகளுக்கு பெரும்பாலும் கைகள், முகத்தில்தான் தீக்காயங்கள் ஏற்படுகின்றன.
பட்டாசு வெடிக்கும்போது ஆடையில் தீப்பிடித்தால், உடனே அதை தண்ணீர் கொண்டு அணைத்துவிட்டு, தீக்காயம் பட்ட இடத்தில் தண்ணீர் (Running Water) கொண்டு நன்றாக கழுவ வேண்டும். அப்போதுதான் அந்த பட்டாசுகளில் இருக்கும் நச்சுத்தன்மை வாய்ந்த வெடி மருந்துகள்/ ரசாயனங்கள் நம் உடலுக்குள் நுழைவதை தடுக்க முடியும். சிலர், முதலுதவி என்று நினைத்து தீக்காயம் மீது 'டூத் பேஸ்ட்' தடவுகிறார்கள். இதை கண்டிப்பாக செய்யக்கூடாது.
பலத்த காயமாக இருந்தால், நிச்சயமாக அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு செல்வதுதான் நல்லது. தவிர, பிள்ளைகள் பட்டாசு வெடிக்கையில் மூக்கை மறைக்கும்படி மாஸ்க் அணிவது நல்லது. முடிந்தால் கண்களை மறைக்க சிறுவர்களுக்கான கண்ணாடிகூட அணியலாம்'' என்கிறார். அரசு குறிப்பிட்டிருக்கும் விதிமுறைகளை மதித்து, கவனமாக தீப ஒளித் திருநாளை கொண்டாடுவோம்..!