No Marriage: 'கென்ஸ்' இருந்தால் போதும், கணவர் வேண்டாம் - சீனாவில் வைரலாகும் வினோ...
`ஆலப்போல், வேலப்போல்'- எந்த மரத்தின் குச்சி என்ன பலன் தரும் நம் பற்களுக்கு?
கருவேல மரக்குச்சியில் பல் துலக்கினால், பற்கள் மட்டுமல்ல ஈறுகளும் சேர்ந்து திடமாகும்; வேப்ப மரத்தின் குச்சியைக் கொண்டு பல் துலக்கினால், பற்கள் தூய்மையாகும்.
நீர் புலா மரக்குச்சியால் பல் துலக்கினால், ஆண்மை விருத்தியாகும்; நாயுருவி வேரால் பல் துலக்கினால், பற்பசைகளில் வரும் நுரைகளைப்போல அதிக அளவு நுரை வரும். இந்த நுரை பல் அழுக்குகளைப் போக்கி, பற்களை அழகாக்குவதுடன் முகத்தில் வசீகரத்தையும் உண்டாக்கும் என்கிறது பதார்த்தகுண சிந்தாமணி பாடல்.
சரி, எந்தெந்த மரத்தின் குச்சியால் பல் துலக்கினால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று முழுமையாக தெரிந்துகொள்ள சித்த மருத்துவர் வேலாயுதம் அவர்களிடம் பேசினோம்.

''பல் துலக்குவதற்கு மேற்குறிப்பிட்ட குச்சிகள் மட்டுமின்றி `மா, நாவல், விளா, நொச்சி மற்றும் புங்கை மரத்தின் குச்சிகளைப் பயன்படுத்தலாம்’ என்று சித்த மருத்துவ நூல்கள் கூறுகின்றன.
மாசிக்காய், லவங்கப்பட்டை, கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய், மிளகு போன்றவற்றைப் பொடியாக்கிப் பல் துலக்கப் பயன்படுத்தலாம். வேப்பங்கொழுந்து, கருவேலமரக் கொழுந்து மற்றும் ஆவாரம்பூக்களையும் பல் துலக்கப் பயன்படுத்தலாம்.
பல் துலக்கப் பயன்படுத்தும் மரக்குச்சிகள் சுண்டு விரல் அளவு தடிமனாகவும், ஒரு சாண் அளவு நீளமானதாகவும் இருக்க வேண்டும்.
குச்சியை உடைத்து அவற்றை நீரில் கழுவி, ஒரு பக்க நுனியைப் பற்களால் கடித்தோ, தட்டியோ பிரஷ்போலச் செய்துகொள்ள வேண்டும்.
இதைக்கொண்டு பற்கள் மற்றும் அவற்றின் இடுக்குப் பகுதிகளிலும் ஈறுகளிலும் மென்மையாகத் தேய்த்து பற்களைச் சுத்தம் செய்யலாம்.
அத்துடன் அதே குச்சியால் மேலும் கீழும், இடதும் வலமுமாகப் பற்களை மென்மையாகச் சுத்தப்படுத்தலாம். குச்சிகளை வாய்ப் பகுதியில் வைத்ததுமே, உமிழ்நீர் சுரப்பு அதிகரித்து கிருமிநாசினியாகச் செயல்பட்டு உடனடியாக தம் பணியைத் தொடங்கிவிடும்.

ஆலங்குச்சி, நாவல்குச்சி, கருவேலங்குச்சி போன்றவை துவர்ப்புச் சுவையுடையவை. வேப்பங்குச்சி கசப்புச் சுவையுடையது. இப்படி ஒவ்வொரு குச்சியும் வெவ்வேறு சுவைகொண்டது.
துவர்ப்புச் சுவை உடைய குச்சிகள் ஈறுகளில் ஏற்படும் புண், ஈறுகளில் ரத்தம் வடிதல் போன்ற பிரச்னைகளுக்குத் தீர்வு தரும்.
கசப்புச் சுவை உடைய குச்சிகள், பற்களில் பாக்டீரியா கிருமிகளை அண்டவிடாமல் பாதுகாப்பாக விளங்கி, பற்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், தூய்மைப்படுத்தவும் உதவும்.
உப்புச் சுவைக்கு உடல் கிருமிகளை அழிக்கும் வல்லமை உண்டு. திரிபலா சூரணத்தைத் தினமும் பற்பொடியாகப் பயன்படுத்தினால், பற்கூச்சம் நீங்கும்; பற்களில் நோய்க் கிருமிகள் அண்டாமல் பார்த்துக்கொள்ளும். கடுக்காய்ப் பொடியால் பல் துலக்கினால், ஈறுகளில் ஏற்படும் வலி, புண், ரத்தக்கசிவு குணமாகும்.

நாக்குப் பகுதியில்தான் பெரும்பாலானோருக்கு நாற்றமடிக்கும். எனவே, வாயைச் சுத்தப்படுத்தும் ஒவ்வொரு தடவையும் நாக்கையும் சுத்தப்படுத்த வேண்டும்.
நாக்கின் மேற்பரப்பில் வெள்ளை நிறத்தில் படிந்திருக்கும் அழுக்கில் பாக்டீரியாக்கள் வசிக்கும். இது போன்ற வெள்ளை நிறப் படிமானம் அஜீரணக் குறைபாட்டைக் குறிக்கும். இது நாக்கில் உள்ள சுவை மொட்டுகளின் செயல்பாட்டை மந்தப்படுத்திவிடும் என்பதால், மரக்குச்சிகளை இரண்டாகப் பிளந்து நாக்கை மழிக்கலாம்.
மரக்குச்சிகளின் நாரைக் கொண்டு நாக்கை மழிப்பதால், கிருமிகள் அகற்றப்படும்; நாக்கிலுள்ள சுவை மொட்டுகளின் செயல்பாடு தூண்டப்படும். அத்துடன் வாயிலுள்ள செரிமான நொதிகளின் வேலைகள் தூண்டப்படும்.
பல் துலக்கியதும் நாக்கை மழித்தபிறகு வாயில் 12 முறை நீர் நிரப்பிக் கொப்புளிப்பதுடன், காறி உமிழ வேண்டும். அப்போது தொண்டைவரை நீரை இறக்கி, ஒக்காளமிட்டு துப்ப வேண்டும்.
ஆனால், இன்றைக்குக் காறி உமிழ்தல் அநாகரிமாகப் பார்க்கப்படுகிறது. காறி உமிழ்வதால், கழுத்திலுள்ள கோழைப் பொருளில் கிருமிகள் சேராமல் பார்த்துக்கொள்ளலாம். மேலும், தொண்டை சுத்தமாகும்; கசடுகள் நீங்கும்.
வாய் கொப்புளித்ததும், பற்களையும் ஈறுகளையும் மென்மையாக அழுத்திவிட வேண்டும். இதைத்தான் இன்றைக்கு ‘கம் மசாஜ்’ என்கிறார்கள்.
பல் துலக்குதல் என்பது பற்களின் ஆரோக்கியத்துக்கு மட்டுமானதல்ல. அது ஒட்டுமொத்த வாய் சுகாதாரத்தையும் காக்கக்கூடியது.
அத்துடன் பற்கள், ஈறுகள், நாக்கு, தொண்டை, உமிழ்நீர்ச் சுரப்பி, சுவை மொட்டுகளின் ஆரோக்கியத்தைக் காத்து, அவற்றின் செயல்பாட்டுக்குப் புத்துணர்வு கொடுக்கக்கூடியது.
`இரவில் பல் துலக்கினால் போதும் காலை எழுந்ததும் பல் துலக்கத் தேவையில்லை’ என்கிற கருத்து பரவலாக நிலவுகிறது; இது தவறானது. `ஒரு நாளைக்கு குறைந்தது இரண்டு முறை பல் துலக்க வேண்டும்’ என்கிறது சித்த மருத்துவம்.
அன்றாடம் உடல் அழுக்கு நீங்க குளிப்பதையும், உள் அழுக்கு நீங்க கழிவுகளை வெளியேற்றுவதையும் எப்படி ஒரு கடமையாகச் செய்கிறோமோ, அதேபோல அக உறுப்புகளின் நுழைவுவாயிலாக இருக்கும் வாய் சுகாதாரத்தைப் பாதுகாக்க பல் துலக்குவோம்'' என்கிறார் மருத்துவர் வேலாயுதம்.