3-ஆவது குழந்தை பெற்றுக்கொள்ளும் பெண்களுக்கு ரூ.50,000 வெகுமதி!
Doctor Vikatan: அதென்ன 'ஐ பிரஷர்..' பார்வையைப் பறிக்கும் அளவுக்கு ஆபத்தானதா அது?
Doctor Vikatan: என் நண்பனுக்கு 55 வயதாகிறது. சமீபத்தில் கண்டெஸ்ட்டுக்கு போனபோது, மருத்துவர் அவனுக்கு கண்களில் பிரஷர் அதிகமாக உள்ளதாகவும், அதை இப்போதே பார்த்து சரிசெய்யாவிட்டால், பார்வையே பறிபோகலாம் என்றும் பயமுறுத்தி அனுப்பியிருக்கிறார். கண்களுக்கும் பிரஷர் உண்டா... பார்வையைப் பறிக்கும் அளவுக்கு ஆபத்தான பிரச்னையா அது?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த கண் மருத்துவர் விஜய் ஷங்கர்.

கண்களை பாதிக்கும் இந்தப் பிரச்னைனையை 'கிளக்கோமா' (Glaucoma) என்கிறோம். இத்தகைய கண் அழுத்த நோய், அறிகுறியே இல்லாமல் பார்வையைப் பறித்து விடக்கூடிய சைலன்ட் பாதிப்பு இது. இந்தப் பிரச்னையை 'சைலன்ட் திருடன்' என்று குறிப்பிடுவோம்.
இதனால்தான் 40 வயதுக்குப் பிறகு ரெகுலர் கண் பரிசோதனை அவசியம் என வலியுறுத்தப்படுகிறது. ஐ பிரஷர் என குறிப்பிடப்படுகிற இந்தப் பிரச்னை இருப்பதை கண் மருத்துவரால் மட்டுமே கண்டுபிடித்து உறுதி செய்ய முடியும். கண் அழுத்த பாதிப்பானது பரம்பரையாக ஒருவரை பாதிக்கலாம். கண்களுக்குள் 'ஏக்யுயஸ் ஹ்யூமர்' (Aqueous humor) என்றொரு திரவம் சுரக்கும். இந்தத் திரவம் கண்ணின் ஒரு பகுதி வழியே உள்ளே சென்று இன்னொரு பகுதி வழியே வெளியேற வேண்டும் அப்படி வெளியேற வேண்டிய பகுதி அடைபடும்போது திரவம் வெளியேற முடியாமல் அழுத்தம் சேர்வதால் ஏற்படும் பிரச்னையே 'கண் அழுத்த நோய்'. முறையான கண் பரிசோதனையில் இதைக் கண்டுபிடித்து, பிரச்னை உறுதியானால், மருத்துவப் பரிந்துரையின் பேரில் கண்களுக்கான டிராப்ஸ் உபயோகிக்க வேண்டியிருக்கும்.

அந்த டிராப்ஸில் பிரஷர் கட்டுப்பாட்டுக்குள் இருந்தால் அதையே தொடர்ந்து உபயோகிக்கலாம். ஒருவேளை பிரஷர் கட்டுக்குள் வரவில்லை என்றால் நான்கு மாதங்களுக்கு ஒருமுறை உங்கள் கண் மருத்துவரைப் பார்த்து ஆலோசனை பெற வேண்டும். அதற்கேற்ப உங்கள் மருத்துவர் சிகிச்சையை மாற்றித் தருவார். இதையும் தாண்டி, கண் பிரஷரை கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை என்றால் Trabaculectomy என்ற அறுவை சிகிச்சையின் மூலம் தீர்வு காணலாம். கிளக்கோமோ பாதிப்பில் பார்வை நரம்பு பாதிக்கப்படலாம். அந்தப் பிரச்னை சரிசெய்ய முடியாதது. எனவே இந்தப் பிரச்னையைப் பொறுத்தவரை அடிக்கடி மருத்துவரை அணுகி, தேவையான சோதனைகளை மேற்கொண்டு சரியான சிகிச்சைகளைப் பின்பற்ற வேண்டும்.
கவனிக்காமல் விட்டு, கண் நரம்பு பாதிக்கப்பட்டிருந்தால் பார்வை இழப்பு ஏற்படலாம். பாதிப்பின் தீவிரத்தைப் பொறுத்து தேவைப்பட்டால் மருத்துவர் அறுவை சிகிச்சைக்குப் பரிந்துரைப்பார்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.