பீகார் தேர்தல்: லாலுவை கைவிடாத யாதவர்கள் - அணுகுமுறையை மாற்றிய பாஜக கூட்டணி!
Doctor Vikatan: ஹார்ட் அட்டாக்கை காட்டிக்கொடுக்கும் ட்ரோபோனின் டெஸ்ட்; 40 ப்ளஸ்ஸில் அவசியமா?
Doctor Vikatan: நெஞ்சு வலியால் பாதிக்கப்படுவோருக்குச் செய்யப்படுகிற ட்ரோபோனின் டெஸ்ட் பற்றி சமீபத்தில் இந்தப் பகுதியில் விளக்கியிருந்தீர்கள். 40 வயது தாண்டிய அனைவருமே இதயநலனைத் தெரிந்துகொள்ள ட்ரோபோனின் டெஸ்ட் செய்துகொள்ள வேண்டுமா, ட்ரோபோனின் என்பது ரத்தத்தில் கலக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
பதில் சொல்கிறார், கோவையைச் சேர்ந்த இதயநல மருத்துவர் ஜெ.எஸ்.புவனேஸ்வரன்.

ட்ரோபோனின் டெஸ்ட் என்பது ரெகுலராகச் செய்யப்படுகிற பிற டெஸ்ட்டுகளைப் போன்றது அல்ல. அதாவது, எந்தப் பிரச்னையும் இல்லாமல், நார்மலாக உள்ளவர்களுக்கு இந்த டெஸ்ட்டை மருத்துவர்கள் பரிந்துரைக்க மாட்டோம்.
ஒரு நபருக்கு நெஞ்சுவலி வந்து, மருத்துவரை அணுகும்போது முதலில் இசிஜி பரிசோதனை செய்யப்படும். அதையடுத்து ட்ரோபோனின் பரிசோதனை செய்யச் சொல்வோம். ட்ரோபோனின் என்பது நம் இதயத்தின் தசைகளில் இருக்கக்கூடிய ஒருவித புரதம்.
இதயத்தின் திசுக்கள் பாதிக்கப்படும்போது அல்லது உடலில் உள்ள செல்கள் அல்லது திசுக்கள் எதிர்பாராத விதமாக அல்லது முன்கூட்டியே இறந்து போகும் 'நெக்ரோசிஸ்' நிலையில் இந்தப் புரதமானது, ரத்தத்தில் கலக்கும்.

இதில் ட்ரோபோனின் I (Troponin I) மற்றும் ட்ரோபோனின் T (Troponin T) என இரண்டு வகைகள் உள்ளன. இந்த இரண்டில் எந்த வகை ட்ரோபோனின் புரதமானாலும் சரி, அது ரத்தத்தில் கலக்கும்போது மிக நுண்ணிய அளவு, அதாவது நானோகிராம் அளவில் இருந்தாலும்கூட இப்போது ஸ்ட்ரிப் டெஸ்ட் என்ற பரிசோதனையில் கண்டுபிடித்துவிடலாம்.
நெஞ்சு வலி ஏற்படும்போது, இசிஜி பரிசோதனையில் நார்மல் என்று காட்டினாலும், ட்ரோபோனின் அளவு அதிகமாக இருக்கும்பட்சத்தில், அந்த நபரை மருத்துவமனையில் அட்மிட் செய்து கண்காணிப்போம்.
ட்ரோபோனின் அளவு அதிகம் என்று தெரியவரும்போது அந்த நபருக்கு உடனடியாக சிகிச்சை தேவை என்பதற்கான அலெர்ட் மெசேஜாகவும் அதை எடுத்துக்கொள்ள வேண்டும். அந்த அளவானது, ஹார்ட் அட்டாக்கின் அறிகுறியைக் குறிப்பதாகவும் இருக்கலாம்.

எனவே, ட்ரோபோனின் என்பது, வழக்கமாக நாம் செய்து பார்க்கிற பிளட் சுகர், யூரியா, கிரியாட்டினின், கொலஸ்ட்ரால் பரிசோதனைகளைப் போன்றது அல்ல என்பதை முதலில் புரிந்துகொள்ளுங்கள்.
ட்ரோபோனின் என்ற புரதம், ரத்தத்தில் கலக்காமல் இருக்க வேண்டும் என்றால், அந்த நபருக்கு ஹார்ட் அட்டாக் வராமல் இருக்க வேண்டும்.
எனவே, அந்த நபருக்கு ஆரோக்கியமான உடல் மற்றும் மனநலம் அடிப்படை. உணவுப்பழக்கமும் உறக்கமும் உடற்பயிற்சிகளும் முறையாக இருக்க வேண்டும்.
ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றினாலே, இதயத்தின் ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படுவதைத் தவிர்க்கலாம். ரத்த ஓட்டம் தடைப்பட்டு, தசைகள் பழுதடைந்து, ட்ரோபோனின் வெளியே வருவதையும், அது ரத்தத்தில் கலப்பதையும் தவிர்க்கலாம்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.