Samuel Nicholas: "அப்பாக்கிட்ட வாய்ப்புக் கேட்க கூச்சமா இருக்கு!" | Harris Jayar...
Montha Cyclone: இன்று கரையைக் கடக்கும் புயல்; 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை; எங்கெல்லாம் ஆரஞ்சு அலெர்ட் | Live
தமிழகத்தில் கடந்த இரண்டு வாரங்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது.
இதில், அக்டோபர் 24-ம் தேதி தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி 25-ம் தேதி காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக உருவாகி 26-ம் தேதி ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமானது.
இது நேற்று (அக்டோபர் 27) காலை 11:30 மணியளவில் மேற்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாக நிலைகொண்டது.
`மோன்தா' என்று பெயர் சூட்டப்பட்டிருக்கும் இந்தப் புயல் இன்று (அக்டோபர் 28) காலை தீவிர புயலாக வலுப்பெற்று மாலை முதல் இரவுக்குள் ஆந்திராவின் காக்கிநாடாவுக்கு அருகில் மணிக்கு 90 முதல் 100 கி.மீ வேகத்தில் கரையைக் கடக்கக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்திருந்தது.

மேலும், தமிழகத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் மிக கனமழையும் மற்றும் சென்னை, ராணிப்பேட்டை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
சென்னையில் கடந்த 24 மணிநேரத்தில் எண்ணுரில் அதிகபட்சமாக 12 செ.மீ மழை பெய்திருக்கிறது.
இந்த நிலையில், தற்போது வெளியாகியிருக்கும் வானிலை ஆய்வு மையத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டின்படி, ராணிப்பேட்டை, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், விழுப்புரம், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 13 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டிருக்கிறது.
இந்தக் குறிப்பிட்ட மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, திருவள்ளுர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.
மறுபக்கம், கனமழை எதிரொலியாக ஆந்திராவின் 3 நகரங்களிலிருந்து சென்னைக்கு வரவிருந்த விமானங்கள் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. மேலும், ஆந்திர கடலோரப் பகுதி வழியே செல்லும் பல ரயில்கள் தாமதமாகப் புறப்படும் என்று ரயில்வே துறை அறிவித்திருக்கிறது.




















