செய்திகள் :

MS Subbulakshmi: 'இந்தக் குரல் ஏதோ செய்கிறது..' - ஐநாவுக்கு எம்.எஸ் செல்ல பாதையமைத்த லார்ட் ஹர்வுட்!

post image

பத்ம பூஷண், சங்கீத நாடக அகாதமி விருது, சங்கீத கலாநிதி , ரமோன் மகசேசே விருது (ஆசியாவின் நோபல் பரிசாகக் கருதப்படுகிறது), 1975-ல் பத்ம விபூஷண் விருது, 1975-ல் இந்திய நுண்கலைக் கழகத்தால் வழங்கப்படும் சங்கீத கலாசிகாமணி விருது, 1988-ல் காளிதாஸ் சம்மன் விருது, 1990-ல் தேசிய ஒருமைப்பாட்டுக்கான இந்திரா காந்தி விருது, 1998-ல் பாரத ரத்னா விருது என எம்.எஸ். சுப்புலட்சுமியால் விருதுகள் இன்னிசை மழையில் நனைந்தது.

1916-ம் ஆண்டு மதுரையில் இசைபட வாழ்ந்த குடும்பத்தில் பிறந்து, 1996-ல் அவரின் கணவர் சதாசிவம் மறையும் வரை கர்நாடக இசையுலகின் அரசியாகவே வலம்வந்தார். இவரின் இசையில் மயங்கி ஐ.நா-வே இவரை அழைத்துப் பாட வைத்த வரலாறும் இவருக்கு உண்டு. அது என்ன வரலாறு...

எம்.எஸ்.சுப்புலட்சுமி

அது 1960 காலகட்டம். வாகன நெரிசலற்ற சாலையிலிருந்த ஒரு தங்கு விடுதியிலிருந்தார் Edinburgh International Festival அமைப்பின் இயக்குநர் லார்ட் ஹார்வுட். அப்போது ஆல் இந்தியா ரேடியோ-வில் ஆங்கிலத்தில் "எம்.எஸ்.சுப்புலட்சுயின் தேனிசைக் குரலில் அடுத்த பாடல்" என ஒரு அறிவிப்பு. அது யாரோ ஒருவர் என்ற தொனியில் ஒலிக்கப்பட்ட அந்தப் பாடலைக் கேட்கத் தொடங்கினார் லார்ட் ஹர்வுட். 'என்ன ஆச்சரியம் மொழி புரியாவிட்டாலும் இந்தக் குரல் ஏதோ செய்கிறதே...' என நெகிழ்ந்து, இந்தக் குரலுக்குரியவரை நேரில் சந்தித்து, அவரின் நிகழ்ச்சியை நேரில் கண்டு அனுபவிக்க வேண்டும் என அப்போதைய மெட்ராஸுக்கு பறந்து வருகிறார்.

எம்.எஸ்.சுப்புலட்சுமியின் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நேரில் அந்தக் குரலைக் கேட்டு கிரங்கியும் போகிறார். இது சாதாரண குரலல்ல என்பதை உணர்ந்து, உலக அரங்கில் இதை ஒலிக்க வைக்க வேண்டும் என முடிவு செய்கிறார். அதற்காக Edinburgh International Festival நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பாட வேண்டும் என எம்.எஸ்.சுப்பு லட்சுமியையும், அந்த நிகழ்ச்சியில் பரத நாட்டியம் நிகழ்ச்சி அரங்கேற்ற வேண்டும் என பாலசரஸ்வதியையும் கேட்டுக்கொள்கிறார். இருவரும் அதை ஏற்றுக்கொள்கிறார்கள்.

எம்.எஸ்.சுப்புலட்சுமி -சதாசிவம்

1963-ம் ஆண்டு Edinburgh International Festival லண்டனில் நடந்தது. அந்த நிகழ்ச்சியில் பாலசரஸ்வதியும், எம்.எஸ். சுப்புலட்சுமியும் கலந்து கொண்டு தங்கள் திறமையை நிரூபித்தார்கள். லண்டன் முழுவதும் அவர்களின் திறமையைப் பாராட்டிக் கௌரவித்து மரியாதை செய்தது. அப்போதே அவர்களின் புகழ் உலகமெங்கும் பரவியது. பல்வேறு நாடுகளில் தொடர்ந்து இசை நிகழ்ச்சிக்காக அழைக்கப்பட்டார் எம்.எஸ்.சுப்புலட்சுமி. அந்த அறிமுகம்தான் ஐ.நா-வுக்கு எம்.எஸ்.சுப்புலட்சுமியை கொண்டு சென்றது. ஐ.நா மாநாட்டின்படி, ஒவ்வொரு ஆண்டும் அதன் பொதுச் சபை அமர்வின் தொடக்க நாளில் ஒரு உறுப்பு நாட்டின் முன்னணி கலைஞர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களின் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்படும்.

அதன் அடிப்படையில், ஐ.நா பொதுச்செயலாளர் யு டான்ட் (U Thant), இந்தியாவின் ஐ.நா-வின் அப்போதைய இந்தியப் பொதுச் செயலாளர் சி.வி.நரசிம்மனர் ஆகியோர் எம்.எஸ்.சுப்புலட்சுமியை அழைத்தனர். இந்த நிகழ்ச்சிக்கு ஒப்புக்கொண்டது மட்டும்தான் எம்.எஸ்.சுப்புலட்சுமி. ஆனால், அதற்கான ஆயத்தப் பணிகள், அந்த நிகழ்ச்சியில் எந்த மாதிரியான பாடல்கள் பாடினால் நன்றாக இருக்கும் என்பது உள்ளிட்ட ஒவ்வொரு நிமிட திட்டத்தையும் கண்ணும் கருத்துமாக எம்.எஸ்.சுப்புலட்சுமியின் கணவர் சதாசிவம்தான் கவனித்துக்கொண்டார்.

எம்.எஸ்.சுப்புலட்சுமி

அந்த நிகழ்ச்சியில் எம்.எஸ்.சுப்புலட்சுமியும், அவர்களின் மகள் ராதாவும் அணிந்துகொள்வதற்காகக் காஞ்சிபுரத்திலிருந்து ஸ்பெஷல் புடவைகள் வரவைக்கப்பட்டன. எம்.எஸ்.சுப்புலட்சுமி, சதாசிவம் இருவருக்கும் ஆழ்ந்த கடவுள் நம்பிக்கை இருந்தது. அதனால் தம்பதிகள் இருவரும், காஞ்சி காமகோடி பீடத்தின் 68-வது ஜகத்குரு காஞ்சி பரமாச்சார்யா ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி (1894-1994), ஆந்திராவின் புட்டபர்த்தியைச் சேர்ந்த சத்ய சாய்பாபா (1926 -2011) ஆகியோரிடம் ஆலோசிக்காமல் எந்த முடியும் எடுப்பதில்லை என்ற வழமையைப் பின்பற்றினர்.

காஞ்சி பரமாச்சார்யா ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதியிடம் ஆசீர்வாதம் வாங்குவதற்காக , எம்.எஸ்.சுப்புலட்சுமி தன் கணவர் சதாசிவத்துடன் காஞ்சிபுரத்துக்குப் பயணமானார். மேலும், காஞ்சி பரமாச்சார்யா ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதியிடம் ஐ.நா நிகழ்ச்சி குறித்த தகவல்களை தெரிவித்தனர். அப்போதுதான், சமஸ்கிருதத்தில் புலமைபெற்ற காஞ்சி பரமாச்சார்யா "உலகளாவிய நட்புக்கான கீதம்" எனும் ஒரு பாடலை வைத்திருப்பதாக தெரிவித்தார். அந்தப் பாடலை எம்.எஸ்.சுப்புலட்சுமி பெற்றுக்கொண்டார். அதை வைத்து இசையுடன் பாடல் உருவாக்க இசை அமைப்பாளர் வசந்த் தேசாய் (1912-1975) நியமிக்கப்பட்டார். வசந்த் தேசாய் பல ராகங்களின் கலவையில் ஒரு பாடலை உருவாக்கினார். அவரின் இந்தப் பணிக்காக அவருக்கு ரூ.501 காசோலையாக வழங்கப்பட்டது.

ஐநாவில் எம்.எஸ்.சுப்புலட்சுமி

அவர் அந்தக் காசோலையை பணமாக்காமல், பத்திரமாக தனது வாழ்நாள் முழுவதும் பாதுகாத்தார் என்பது செய்தி. இத்தனை ஏற்பாடுகள் செய்தும் அப்போது நடந்த இந்தியா - பாகிஸ்தான் போரால் அந்த பயணத் திட்டம் கைவிடப்பட்டது.

ஆனால் அதற்கு அடுத்த ஆண்டு, அதாவது, அக்டோபர் 23, 1966-ல், இசை அமைப்பாளர் வசந்த் தேசாய் அமைத்த அந்தப் பாடலை எம்.எஸ்.சுப்புலட்சுமி, ஐ.நா.வில் நடந்த தனது கச்சேரியில் அறிமுகம் செய்தார். ஐ.நா.வின் கச்சேரிக்கு முன்னதாக எம்.எஸ்.சுப்புலட்சுமி குரலில் பிரச்னை ஏற்பட்டதாகவும், ஆனால், கடவுளைப் பிரார்த்ததில் மீண்டும் அது சரியானதாகவும் கூறப்படுகிறது.

அக்டோபர் 23-ம் தேதி மதியம், அவருக்குப் பிடித்த எம்.எஸ். நீலம் நிற புடவையில், மல்லிகை சூடி, வைர நகைகள் அணிந்து தன் கச்சேரியை நடத்தி முடித்தார். அவர் அணிய வேண்டிய பூ, புடவை முதல் நகைகள் வரை அனைத்தையும் முழுவதுமாக சதாசிவம் கொண்டுசென்றிருந்தார். கச்சேரி முடிந்ததும், ஐ.நா.வின் பொதுச்செயலாளர், யு தாண்ட், "அசாதாரணமான நல்ல இசை... சிறப்பாக இருந்தது" என வாழ்த்தினார். அந்தக் கச்சேரிக்குப் பிறகு, தன் வாழ்நாள் முழுவதும் பாடிய ஓவ்வொரு மேடையிலும் அந்தப் பாடலை பாடாமல் கச்சேரியை முடித்தது கிடையாது. திறமை இருந்தால் போது... ஐ.நா-வும் நம் வாசல் தேடிவரும் என்பதற்கு இந்த வரலாற்று நிகழ்வு ஒரு பாடம்.

பிரமாண்ட தூய வெள்ளி அலமாரி; பாரம்பரிய இந்திய ஓவிய பாணி - கின்னஸ் உலக சாதனை | Album

வெள்ளி அலமாரிவெள்ளி அலமாரிவெள்ளி அலமாரிவெள்ளி அலமாரிவெள்ளி அலமாரி மேலும் பார்க்க