NEP: ”தேசிய கல்விக் கொள்கை அமலானால், 75 சதவீத மாணவர்கள் கல்வியை விட்டுவிடுவார்கள்”- முத்தரசன்
தஞ்சாவூரில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் 27வது மாநில மாநாடு நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, "நாடு முழுவதும் விவசாயிகள் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர். மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறும் போது, வேளாண் விளை பொருட்களுக்கு விலை நிர்ணயச் சட்டம் நிறைவேற்றப்படும். விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகள் திரும்பப் பெறப்படும் என்ற வாக்குறுதியை, மத்திய அரசு இதுவரை நிறைவேற்றவில்லை.
இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு ரூ.1,555 கோடி பேரிடர் நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்யப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் பெஞ்சல் புயல், கேரளாவில் வயநாடு நிலச்சரிவு போன்றவற்றில் பாதிக்கப்பட்டு நிதியைக் கேட்ட போதும், ஒரு பைசா கூட தமிழகத்திற்கும், கேரளாவிற்கும் மத்திய நிதியை ஒதுக்கீடு செய்யவில்லை. தங்களை அரசியல் ரீதியாக எதிர்க்கும் கட்சிகள் ஆட்சியில் உள்ள மாநிலங்களுக்கு நிதி கொடுக்க மாட்டோம் என மத்திய அரசு கூறுவது சர்வாதிகார செயலாகும்.
100 நாள் வேலைத் திட்டத்திற்கான நிதி மற்றும் பயனாளிகள் எண்ணிக்கையைக் குறைத்து விட்டது. நுாறு நாள் வேலைத் திட்டத்திற்காக, தமிழகத்திற்கு ரூ. 2208.74 கோடி நிதியை மூன்று மாதமாக வழங்காமல் உள்ளது. இப்படியாகக் கல்வி நிதி, பேரிடர் நிதி என எதையும் வழங்காமல் புறக்கணிப்பது நாட்டில் கலகத்தைத் தூண்டுவதாகும். மத்திய அரசு நிதியை, தமிழக அரசு இலவசங்கள் வழங்கப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் தகவல் பொய். மத்திய அரசைத் தமிழக முதல்வர் அரசியல் ரீதியாக எதிர்த்துப் போராடி வருகிறார். ஆனால், மத்திய அரசு அரசியல் ரீதியாக எதிர்க்க முடியாமல், மாநில அரசுக்குக் கொடுக்க வேண்டிய நிதியைக் குறைத்தால், மாநில அரசுக்கு நெருக்கடி ஏற்படும் என்ற நிலையை உருவாக்கி வருகிறது.

தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தினால், 75 சதவீத மாணவர்கள் கல்வியை விட்டுச் சென்று விடுவார்கள். மத்திய அரசு மும்மொழிக்கொள்கையை ஏற்க வேண்டும். இல்லாவிட்டால் தமிழகத்திற்கான ரூ.2,152 கோடி நிதியைத் தர மாட்டோம் என மத்திய கல்வி அமைச்சர் கூறி இருப்பது சர்வாதிகாரத்தின் உச்சம். இதை எதிர்த்துத்தான் போராடுகிறோம். தமிழகத்தில், மத்திய அரசு நடத்தும் 49 நவோதயா பள்ளிகளில் ஒன்றில்கூட தமிழ் ஆசிரியர்கள் இல்லை. மூன்றாவது மொழியாக எதை வேண்டுமானாலும் படிக்கலாம் என பா.ஜ.க கூறும் நிலையில், மாணவர்கள் கேட்கும் மொழிக்கு எல்லாம் ஆசிரியர் நியமித்துச் சொல்லிக் கொடுப்பது சாத்தியம் இல்லை. இது இந்தியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற நிர்ப்பந்தம் செய்கிற போக்கு" என்றார்.
இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்' பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்!
https://tinyurl.com/Velpari-Vikatan-Play