TVK: "எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, விஜயகாந்த்... இப்போது நான்!" - விகடனுக்கு அன்றே சொன்ன விஜய் | Flashback
விஜய்யின் த.வெ.க வின் முதல் மாநில மாநாடு அக்டோபர் 27 ஆம் தேதி (நாளை) நடக்கவிருக்கிறது. மாநாட்டிலிருந்துதான் விஜய் தீவிரமாக அரசியலில் செயல்படவிருப்பதாக சொல்கிறார்கள். கடந்த பிப்ரவரியில்தான் விஜய் கட்சி தொடங்குவதாக அறிவித்தார். ஆனால், 2011 இல் ஆனந்த விகடன் இதழுக்காக அளித்த பேட்டியிலேயே விஜய் தனது அரசியல் ஆசைகளையும் தன் மீதான அழுத்தங்களையும் வெளிப்படையாக பேசியிருந்தார். "எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, விஜயகாந்த்...இப்போது நான்!" என தலைப்பிடப்பட்ட அந்தப் பேட்டியிலிருந்து ஒரு பகுதி இங்கே..
''சரித்திரத்துல ஒரு சம்பவம் வரும். நம்முடைய மகாத்மா காந்திக்கு ஏற்பட்ட அனுபவம் அது. தென் ஆப்பிரிக்காவில் ரயிலில் பயணம் போன மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியை, வெள்ளைக்காரன் ஒருவன் 'ப்ளாக் டாக்’னு கூச்சலிட்டு எட்டி உதைப்பான். சாதாரண மோகன்தாஸாக விழுந்த அவர், மகாத்மா காந்தியாக அந்த பிளாட்ஃபார்ம்லதான் பிறந்தார்!
தி.மு.க பொருளாளர் பதவியில் இருந்த புரட்சி நடிகர் எம்.ஜி.ஆரை, ஒரு கேள்வி கேட்டார்னு கோபப்பட்டுத் தூக்கி எறிஞ்சாங்க. அன்னிக்குத்தான் அவர் புரட்சித் தலைவர் ஆனார். அவர் இறக்கும் வரை அசைக்க முடியாத முதலமைச்சராக இருந்தார்.
எம்.ஜி.ஆரின் இறுதி ஊர்வல வண்டியில் இருந்து ஜெயலலிதா மேடத்தைக் கீழே தள்ளி னாங்க. பின்னாளில் சைரன் காரில் போலீஸ் புடைசூழ சி.எம் ஆனாங்க, அதே ஜெயலலிதா மேடம். ரெண்டு தடவை சி.எம்மா இருந்தாங்க. இதோ... இப்பவும் பொறி பறக்குது.
அதே மாதிரிதான்... சும்மா இருந்த கேப்டனின் கல்யாண மண்டபத்தை இடிச்சாங்க. அவர் இப்போ எவ்ளோ பெரிய ஃபோர்ஸா இருக்கார்னு எல்லோருக்கும் தெரியும்.
முதல்ல எம்.ஜிஆர், அடுத்து ஜெயலலிதா மேடம், அப்புறம் கேப்டன்... அவங்களை மாதிரியேதான் அடுத்து இப்போ எனக்கும் நடக்குதா?'' என்று தமிழ்நாட்டு அரசியல் சரித்திரத்தை மென்மையான வார்த்தைகளால் உச்சரித்திருக்கிறார் விஜய்.
தொடர்ந்து...
`என்னைப் பார்க்கக் கூட்டம் கூட்டமாகத் திரள்வதை எல்லாம் யாரோ விரும்பலை’
விஜய்க்குச் சில மாதங்களாகவே சிக்கல்கள் ஈரோட்டில் அவர் கலந்துகொண்ட கூட்டத்தில் மேடை ஏற, திடீரென்று போலீஸார் அனுமதி மறுத்தார்கள். பேட்டி அதைப்பற்றித் திரும்பியது!
"சில மாதங்களுக்கு முன்னால் ஈரோட்டில் இருக்கும் என்னுடைய மக்கள் இயக்க ரசிகர்கள் முறைப்படி போலீஸிடம் அனுமதி வாங்கி, நல உதவிகள் கொடுக்கும் விழாவை ஏற்பாடு செஞ்சாங்க. கூட்டம்னா கூட்டம். ஆயிரக்கணக்கில் ரசிகர்கள் என்னைப்பார்க்க ஆவலா இருக்காங்க மேடைக்குப் போகக் கிளம்பிய என்னை போலீஸார் தடுத்தாங்க. கூட்டம் ரொம்ப அதிகமா இருக்கு, மீறிப் போனா, உங்களோட உயிருக்கு நாங்க பாதுகாப்பு இல்லைன்னு கை விரிச்சாங்க 'முறையா போலீஸ் பெர்மிஷன் வாங்கித்தானே ஃபங்ஷன் நடத்துறாங்க... திடீர்னு இப்படிச் சொன்னா என்ன அர்த்தம்?'னு கேட்டேன். உடனே, செல்போனில் யார் யாரிடமோ மாறி மாறிப் பேசினாங்க. திரும்பி வந்து 'முடியவே முடியாது'ன்னு என்னைத் திருப்பி அனுப்புவதிலேயே குறியா இருந்தாங்க. அதாவது, நான் மக்களைச் சந்திப்பது, ரசிகர்கள் என்னைப் பார்க்கக் கூட்டம் கூட்டமாகத் திரள்வதை எல்லாம் யாரோ விரும்பலைன்னு தெளிவாத் தெரிஞ்சது. என்னால எந்தப் பிரச்னையும் வரக் கூடாதுங்கிற ஒரே காரணத்துக்காகத்தான் திரும்பி வந்துட்டேன்" என்று விஜய் பேசுவது ஒவ்வொன்றுமே, அவர் எவ்வளவு காயங்களோடு இருக்கிறார் என்பதை உணர்த்துகிறது.
"சென்னை குரோம்பேட்டையில் இருக்கிற வெற்றி தியேட்டரில் என்னுடைய 'காவலன்' ரிலீஸ் ஆனது. அங்கு ஆளுங்கட்சிக்காரங்க வந்து நின்னு, 'விஜய் படத்தை ரிலீஸ் பண்ணாதே.. பேனரைக் கட்டாதே... வெளியில போ'ன்னு மிரட்டி அதிகாரம் பணணி இருக்காங்க. ரசிகர்களிடம் 'பொறுமையா இருங்க'ன்னு சமாதானப்படுத்திவெச்சேன். அந்த ஏரியாவில் தண்ணீர் கஷ்டம் இருக்கு கரன்ட் தட்டுப்பாடு இருக்கு ரோடு சரி இல்லை, சாக்கடை வசதி இல்லைன்னு என்னென்னவோ பிரசனைகள் இருக்கு அதையெல்லாம் தீர்க்கத்தானே மக்கள் ஓட்டு போட்டுத் தேர்ந்து எடுத்தாங்க? விஜய்யிடம் சண்டை போடுறதுக்கு இல்லையே? 'காவலன் படம் ரிலீஸாகாமல் கலாட்டா பண்றதுக்கு இல்லையே? இது எல்லாம் என் ரசிகர்களுக்குத் தெரியும். ரசிகர்களுடன் என்னை வாழவைக்கும் பொதுமக்களும் எல்லாத்தையும் பார்த்துக்கிட்டுதான் இருக்காங்க, குரோம்பேட்டை முதல் குக்கிராமம் வரை இந்தப் படம் ரிலீஸ் ஆகிறதுக்காக அனுபவிச்ச வேதனையும் சேர்த்து, என்னை நிறைய நிறைய யோசிக்க வைக்குது.
அதனால், அடுத்தடுத்து நான் போக வேண்டிய பாதையை 'காவலன்' ரிலீஸ் தீரமானிச்சு இருக்கு. இனி மேல்தான் மனம் திறந்து பேசப்போற உண்மையான சினிமா ரிலீஸ் ஆகப் போகுது!" என்றார் விஜய்!
"அப்போ, இனி அரசியல்தான்?"
"நடிகனாகணும்னு ஆசைப்பட்டேன். நான் நினைச்சதைவிட மிகப் பெரிய இடத்தில் மக்கள் என்னை உட்காரவெச்சு இருக்காங்க அதுபோல, இன்னொரு இடத்திலும் அதே மக்கள் என்னை அமரவைக்கிற நாள் வெகு தொலைவில் இல்லை. யார் பேச்சையும் கேட்டு உடனடியா எதிலும் இறங்க மாட்டேன். ஆனா, அரசியலில் இறங்குறதுக்கான அஸ்திவாரத்தைப் பலமாப் போட்டுக்கிட்டே வரறேன்.
யாருக்கு எப்போ, எப்படி வெற்றி தோல்வியைக் கொடுக்கிறதுன்னு தீர்மானிக்கிறவன் கடவுள். சாதாரண மாமிச உடம்பு உள்ள எந்த மனித ஜென்மத்தாலும் இதைத் தடுக்க முடியாது. நான் உங்களிடம் சொன்னது என்னுடைய தனிப்பட்ட ஆதங்கம் இல்லை இது, ஒட்டுமொத்த சினிமா உலகத்தின் ஆதங்கம். நான் சொல்லிட்டேன். நிறையப் பேர் சொல்ல முடியாம அழுதுட்டு இருக்காங்க.
சம்பந்தப்பட்டவங்க இந்தப் பேட்டியைப் படிச்சுட்டு... என் வீட்டில் கல் எறியலாம். என்னை வழி மறிச்சுத் தாக்கலாம். எந்த ரூபத்திலும் எனக்கு ஆபத்து தரலாம். ஆனா, அதுக்குஎல்லாம் நான் கவலைப்படவே இல்லை!"
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb