ஏன் வேண்டாம் மும்மொழி? மத்திய அமைச்சருக்கு அன்பில் மகேஸ் பதில்!
அதிகரிக்கும் ஜிபிஎஸ் நோய் தொற்று! கோலாப்பூரில் பலியான பெண்ணுக்கும் பாதிப்பா!
மகாராஷ்டிரத்தில் ஜிபிஎஸ் நோய் பாதிப்பு இருவருக்கு கண்டறியப்பட்ட நிலையில், இந்நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 207-ஆக அதிகரித்துள்ளது.
நேற்று(பிப். 14) வெள்ளிக்கிழமை 2 பேருக்கு ஜிபிஎஸ் நோய் பாதிப்பு கண்டறியப்பட்டது. இந்நோய் பாதிப்பு 180 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 20 பேர் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சையில் உள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, கோலாப்பூரில் பலியான பெண்ணுக்கு ஜிபிஎஸ் நோய் பாதிப்பு இருந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. சாங்கிட் தாலுகாவைச் சேர்ந்த 60 வயது பெண் உயிரிழந்ததாக மாவட்ட சுகாதாரத்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.
"அப்பெண்ணின் கால்களின் கீழ் பகுதி செயலிழந்ததால், சாங்கிட்டில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, பின்னர் அண்டை மாநிலமான கர்நாடகத்திற்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர், அவர் மீண்டும் பிப். 11 ஆம் தேதி கோலாப்பூரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டு, 2 நாள்களுக்குப் பிறகு அங்கு உயிரிழந்தார்.” என்று மேலும் மாவட்ட சுகாதாரத்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க: ஃபாஸ்டேக் கொண்டு வந்திருக்கும் புதிய கெடுபிடி! பயனர்களே எச்சரிக்கை!!
ஜிபிஎஸ் நோய் அறிகுறி
ஜிபிஎஸ் பாதிப்பு ஏற்பட்டால் தொடக்கத்தில் உள்ளங்கை மற்றும் பாதத்தில் ஊசி குத்தியது போன்ற வலியும், மந்தமான உணா்வும் ஏற்படலாம் என்றும் நாளடைவில் தசைகள் தளா்ந்து நடக்க முடியாமலும், கைகளை அசைக்க இயலாமலும் பக்கவாத நிலை உருவாகக் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜிபிஎஸ் நோய்க்கு பல்வேறு பாக்டீரியாக்கள், வைரஸ்கள் காரணமாக இருந்தாலும், கேம்பைலோபாக்டா் ஜேஜுனி என்ற பாக்டீரியாவால்தான் 35 சதவீத பாதிப்பு ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.
இந்த வகை பாக்டீரியா முறையாக சமைக்கப்படாத இறைச்சி, கொதிக்க வைக்கப்படாத பால் ஆகியவற்றில் அதிகம் காணப்படுகிறது. எனவே, பாலை நன்றாக கொதிக்க வைத்து குடிக்க வேண்டும். அதேபோன்று இறைச்சியை குறைந்தது 70 டிகிரி செல்சியஸ் கொதிநிலையில் வேக வைப்பது அவசியம் என்று மருத்துவர்கள் எச்சரித்து வருகின்றனர்.