அனைத்துக்கட்சி கூட்டத்தில் ஸ்டாலினால் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்; மற்ற கட்சிகளின் கருத்துகள் என்ன?
தொகுதி மறுசீரமைப்பு குறித்து விவாதிப்பது தொடர்பாக இன்று (மார்ச் 5) அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். அந்தவகையில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பாஜக, தமாக தவிர்த்து அதிமுக, பாமக, தேமுதிக, தவெக உள்ளிட்ட மற்ற அரசியல் கட்சிகள் பங்கேற்று இருந்தனர். அனைத்துக் கட்சி கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், "தமிழ்நாடு மிகப்பெரிய உரிமைப் போராட்டத்தை நடத்த வேண்டியிருக்கிறது. மக்கள் தொகைக் குறைவாக இருப்பதால் தமிழ்நாடு 8 மக்களவை தொகுதிகளை இழக்கும் அபாயம் இருக்கிறது. தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான சதியை அனைவரும் சேர்ந்து முறியடிக்க வேண்டும். நமக்குள் எந்த ஒரு வேறுபாடு இருக்கக்கூடாது என்று விரும்புகிறேன்.

தென்னிந்திய மாநில பிரதிநிதிகள் அடங்கிய ‘கூட்டு நடவடிக்கை குழு' விரைவில் அமைக்கப்படும்" என்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் நிறைவேற்றி இருந்தார். இதனைத்தொடர்ந்து அனைத்துக்கட்சி தலைவர்களும் தங்களது கருத்துகளைத் தெரிவித்திருக்கிறார்கள். அனைத்துக் கட்சிகளின் கருத்துக்களும் இங்கே!!
அதிமுக
"தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான தீர்மானத்திற்கு அதிமுக முழு ஆதரவு அளிக்கிறது. தமிழ்நாட்டின் 7.2% பிரதிநிதித்துவம் குறைக்கப்படக் கூடாது என தீர்மானத்தில் சேர்க்க வேண்டும்" என்று தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான அனைத்துக்கட்சி கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசியிருக்கிறார்.
காங்கிரஸ் கமிட்டி
"தமிழ்நாட்டிற்கு மிகப்பெரிய ஆபத்தை ஒன்றிய அரசு ஏற்படுத்த முயற்சித்திருக்கிறது. இதை முறியடிப்பதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் இந்தக் கூட்டத்தைக் கூட்டி தமிழ்நாட்டிற்கு மட்டுமல்லாமல் தென்னிந்தியாவிற்கும் சேர்ந்து குரல் கொடுத்த ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி. தமிழ்நாட்டிற்கு எந்தவித மாற்றமும் இருக்காது என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா சொல்கிறார். ஆனால் அவர்களின் திட்டம் என்னவென்று நமக்கு தெரியும். ஆகவே நாம் தமிழ்நாடு முதலமைச்சரோடு சேர்ந்து அவர் எடுக்கும் முடிவுகளுக்கு ஒத்துழைப்போம். முதலமைச்சர் முன்மொழிந்ததை நாங்கள் வழிமொழிகிறோம்" - என்று அனைத்துக்கட்சி கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைத் தெரிவித்திருக்கிறார்.

விசிக
"தென்மாநிலங்களவை பிரதிநிதித்துவம், நிதி ஆணையத்தின் வரி வருவாய்ப் பகிர்வு முறை குறித்தும் விவாதம் தேவை. அமெரிக்காவில் இருப்பது போல அனைத்து மாநிலங்களுக்கும் சம எண்ணிக்கையில் உறுப்பினரை அளிக்க வேண்டும். நிதி ஆணையம் வரி வருவாயைப் பகிர்ந்து கொள்வதற்கு கடைபிடிக்கும் அம்சத்தால் தென் மாநிலங்கள் பாதிக்கப்படுகிறது. அனைத்து மாநிலங்களிலும் சம எண்ணிக்கையில் உறுப்பினர்களை அளிக்க வேண்டும். தென்மாநில பிரதிநிதிகள் அடங்கிய குழுவை விசிக வரவேற்கிறது" என்று திருமாவளவன் கூறியிருக்கிறார்.
தேமுதிக
"தொகுதி மறுவரையறைக்கு எதிராக தமிழ்நாடு அரசு மிகச் சிறப்பான கூட்டத்தை கூட்டியுள்ளது. மாநில அரசின் தீர்மானத்தை தேமுதிக முழுமையாக ஆதரிக்கிறது” - என்று தேமுதிக அவைத் தலைவர் இளங்கோவன் தெரிவித்திருக்கிறார்.
பாமக
"தொகுதி மறுசீரமைப்பில் பாதிக்கப்படும் அனைத்து தென் மாநில முதலமைச்சர்களை தமிழ்நாடு முதலமைச்சர் சந்தித்து பேச வேண்டும். ஒருமித்த கருத்தை உருவாக்கி ஒரு கூட்டமைப்பாக சென்று நாம் வலியுறுத்த வேண்டிய தேவை எழுந்திருக்கிறது. அவ்வாறு செயல்பட்டால்தான் பிரச்னைக்கு உறுதியான தீர்வு கிடைக்கும்" - என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்திருக்கிறார்.

இந்திய கம்யூனிஸ்ட்மாநிலச் செயலாளர்
"மத்திய அரசிடம் வெளிப்படைத்தன்மை இல்லை. எல்லாவற்றிலும் மர்மமாக உள்ளது. எதிர்காலத்தில் ஒரு ஆபத்து உள்ளது அதை வரவிடாமல் தடுப்பதற்கான ஸ்டாலினின் இந்த நடவடிக்கையை வரவேற்கிறோம் " என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் கூறியிருக்கிறார்.
தமிழக வாழ்வுரிமைக் கட்சி
"மத்தியில் எந்த கட்சி ஆட்சி செய்தாலும் தென் மாநிலங்களில் குறிப்பாக தமிழ்கத்தை வஞ்சிக்கும் நிலைதான் உள்ளது. அனைத்துகட்சி கூட்டம் சரியான நேரத்தில் எடுக்கப்பட்டுள்ள சரியான முடிவு " என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்திருக்கிறார்.

தமிழக வெற்றிக் கழகம்
" தொகுதி மறுவரையறையால் தென் மாநிலங்கள் பெரிய பாதிப்புக்குள்ளாகும். இது தேவையற்றது. தற்போது உள்ள நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையை தொடர வேண்டும்" என்று அனைத்துக்கட்சி கூட்டத்தில் தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் தெரிவித்திருக்கிறார்.
மக்கள் நீதி மய்யம்
"நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை மாற்ற வேண்டிய அவசியமில்லை. தேர்தல் அரசியலில் எந்த கூட்டணி ஆட்சிக்கு வந்தாலும் இதுவே எங்களது நிலைப்பாடு. எந்த வகையில் தொகுதி மறுவரையறை செய்தாலும் பாதிக்கப்படப்போவது இந்தி பேசாத மாநிலங்களே. இந்தியாவை ஹிந்தியாவாக மாற்றாதீர்கள்" - தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான அனைத்துக் கட்சி கூட்டத்தில் மநீம தலைவர் கமல்ஹாசன் இவ்வாறு பேசியிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs