Piyush Chawla: `17 வயதில் இந்திய அணி; 2 உலகக் கோப்பை..!' - ஓய்வை அறிவித்த IPL லெ...
அல்லு அர்ஜுன் போல சித்தராமையா, சிவக்குமார் கைது செய்யப்படுவார்களா? பாஜக கேள்வி
பெங்களூரு கூட்ட நெரிசலுக்கு பொறுப்பேற்று கர்நாடக முதல்வர் சித்தராமையா ராஜிநாமா செய்வாரா என்று பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.
மேலும், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி எங்கே ஒளிந்திருக்கிறார் என்றும் செய்தியாளர்கள் சந்திப்பில் பாஜக எம்பி சம்பித் பத்ரா விமர்சித்துள்ளார்.
18 ஆண்டுகளில் முதல்முறையாக ஆர்சிபி அணி ஐபிஎல் கோப்பையை வென்றதால், பெங்களுரூவில் மாநில அரசு மற்றும் கர்நாடக கிரிக்கெட் சங்கம் சார்பில் தனித்தனியாக பாராட்டு விழா நடைபெற்றது.
பெங்களூரு விதானசெளதாவின் முன்பகுதியில் மாநில அரசு ஏற்பாடு செய்திருந்த பாராட்டு விழாவில், ஆளுநர், முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்டோர் கலந்துகொண்டு விராட் கோலி மற்றும் அணி வீரர்களுக்கு பாராட்டு தெரிவித்தனர்.
இதனிடையே, 35,000 இருக்கைகள் மட்டுமே கொண்ட சின்னசாமி மைதானத்துக்கு வெளியே லட்சக்கணக்கான ரசிகர்கள் கூடியதால், கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இதில், ஒருவர் மீது ஒருவர் தவறி விழுந்ததில் மூச்சு திணறல் ஏற்பட்டு 11 பேர் பலியாகினர். 33 பேர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில், தில்லி பாஜக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்ட பாஜக எம்பி சம்பித் பத்ரா பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.
அவர் பேசியதாவது:
“பிசிசிஐ தலைவரும் ஐபிஎல் தலைவரும் வெற்றிப் பேரணி குறித்து தங்களுக்கு தெரியாது எனக் கூறியுள்ளனர். இதற்கு முன்னதாகவும் வெற்றி பேரணிகள் நடத்தப்பட்டுள்ளன. ஆனால், இரண்டு நாள்களுக்கு பின்னரே முழு ஏற்பாட்டுடன் நடத்தப்பட்டிருக்கிறது.
முதல்வரும் துணை முதல்வரும் ஆர்சிபி அணியினரை வெற்றி பேரணி நடத்த கட்டாயப்படுத்தினர். வெறும் 12 மணிநேரத்தில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. இதன்விளைவாக 11 பேர் கொல்லப்பட்டனர்.
ஆர்சிபி விழாவுக்கு அனுமதி அளித்தது யார்? கூட்ட நெரிசலில் மரணம் நிகழ்ந்தபோதும் நிகழ்ச்சியை தொடர யார் அனுமதித்தார்கள்?
இது மாநில அரசின் தோல்வி. துணை முதல்வர் டி.கே. சிவக்குமாருக்கு கேமிராவுக்கும் இடையில் வந்த ஒருவரை, கழுத்தைப் பிடித்து சிவக்குமார் தள்ளிவிடும் விடியோ பரவி வருகின்றது.
கூட்ட நெரிசலால் ரசிகர் பலியான விவகாரத்தில் நடிகர் அல்லு அர்ஜுனை கைது செய்தனர். அதே கொள்கையின் அடிப்படையில் சித்தரமையாவையும் டி.கே.சிவக்குமாரையும் கைது செய்வார்களா?
மிகப்பெரிய கேள்வி என்னவென்றால், ராகுல் காந்தி எங்கே ஒளிந்திருக்கிறார்? சித்தராமையாவும் டி.கே. சிவக்குமாரும் ராஜிநாமா செய்யச் சொல்வாரா?” எனத் தெரிவித்துள்ளார்.